திருப்புகலூர் - திருநேரிசை

bookmark

பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

518

பகைத்திட்டார் புரங்கள் மூன்றும்

பாறிநீ றாகி வீழப்
புகைத்திட்ட தேவர் கோவே

பொறியிலேன் உடலந் தன்னுள்
அகைத்திட்டங் கதனை நாளும்

ஐவர்கொண் டாட்ட வாடித்
திகைத்திட்டேன் செய்வ தென்னே

திருப்புக லூர னீரே.

4.54.1

519

மையரி மதர்த்த ஒண்கண்

மாதரார் வலையிற் பட்டுக்
கையெரி சூல மேந்துங்

கடவுளை நினைய மாட்டேன்
ஐநெரிந் தகமி டற்றே

அடைக்கும்போ தாவி யார்தாஞ்
செய்வதொன் றறிய மாட்டேன்

திருப்புக லூர னீரே.

4.54.2

520

முப்பதும் முப்பத் தாறும்

முப்பதும் இடுகு ரம்பை
அப்பர்போல் ஐவர் வந்து

அதுதரு கிதுவி டென்று
ஒப்பவே நலிய லுற்றால்

உய்யுமா றறிய மாட்டேன்
செப்பமே திகழு மேனித்

திருப்புக லூர னீரே.

4.54.3

521

பொறியிலா அழுக்கை யோம்பிப்

பொய்யினை மெய்யென் றெண்ணி
நெறியலா நெறிகள் சென்றேன்

நீதனேன் நீதி யேதும்
அறிவிலேன் அமரர் கோவே

அமுதினை மண்ணில் வைக்குஞ்
செறிவிலேன் செய்வ தென்னே

திருப்புக லூர னீரே.

4.54.4

522

அளியினார் குழலி னார்கள்

அவர்களுக் கன்ப தாகிக்
களியினார் பாடல் ஓவாக்

கடவூர்வீ ரட்ட மென்னுந்
தளியினார் பாத நாளும்

நினைவிலாத் தகவில் நெஞ்சந்
தெளிவிலேன் செய்வ தென்னே

திருப்புக லூர னீரே.

4.54.5

523

இலவினார் மாதர் பாலே

இசைந்துநான் இருந்து பின்னும்
நிலவுநாள் பலவென் றெண்ணி

நீதனேன் ஆதி உன்னை
உலவிநான் உள்க மாட்டேன்

உன்னடி பரவு ஞானஞ்
செலவிலேன் செய்வ தென்னே

திருப்புக லூர னீரே.

4.54.6

524

காத்திலேன் இரண்டும் மூன்றுங்

கல்வியேல் இல்லை என்பால்
வாய்த்திலேன் அடிமை தன்னுள்

வாய்மையால் தூயே னல்லேன்
பார்த்தனுக் கருள்கள் செய்த

பரமனே பரவு வார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத்

திருப்புக லூர னீரே.

4.54.7

525

நீருமாய்த் தீயு மாகி

நிலனுமாய் விசும்பு மாகி
ஏருடைக் கதிர்க ளாகி

இமையவர் இறைஞ்ச நின்று
ஆய்வதற் கரிய ராகி

அங்கங்கே யாடு கின்ற
தேவர்க்குந் தேவ ராவார்

திருப்புக லூர னாரே.

4.54.8

526

மெய்யுளே விளக்கை ஏற்றி

வேண்டள வுயரத் தூண்டி
உய்வதோர் உபாயம் பற்றி

உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்

அவர்களே வலியர் சாலச்
செய்வதொன் றறிய மாட்டேன்

திருப்புக லூர னீரே.

4.54.9

527

அருவரை தாங்கி னானும்

அருமறை யாதி யானும்
இருவரும் அறிய மாட்டா

ஈசனார் இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று

கண்வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார்

திருப்புக லூர னாரே.

4.54.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்,
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்