திருஆவடுதுறை - திருநேரிசை

bookmark

பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

538

மாயிரு ஞால மெல்லாம்

மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப்

படர்சடை வைப்பர் போலுங்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த

கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும்

ஆவடு துறைய னாரே.

4.56.1

539

மடந்தை பாகத்தர் போலும்

மான்மறிக் கையர் போலும்
குடந்தையிற் குழகர் போலுங்

கொல்புலித் தோலர் போலுங்
கடைந்தநஞ் சுண்பர் போலுங்

காலனைக் காய்வர் போலும்
அடைந்தவர்க் கன்பர் போலும்

ஆவடு துறைய னாரே.

4.56.2

540

உற்றநோய் தீர்ப்பர் போலும்

உறுதுணை யாவர் போலுஞ்
செற்றவர் புரங்கள் மூன்றுந்

தீயெழச் செறுவர் போலுங்
கற்றவர் பரவி யேத்தக்

கலந்துலந் தலந்து பாடும்
அற்றவர்க் கன்பர் போலும்

ஆவடு துறைய னாரே.

4.56.3

541

மழுவமர் கையர் போலும்

மாதவள் பாகர் போலும்
எழுநுனை வேலர் போலும்

என்புகொண் டணிவர் போலுந்
தொழுதெழுந் தாடிப் பாடித்

தோத்திரம் பலவுஞ் சொல்லி
அழுமவர்க் கன்பர் போலும்

ஆவடு துறைய னாரே.

4.56.4

542

பொடியணி மெய்யர் போலும்

பொங்குவெண் ணூலர் போலுங்
கடியதோர் விடையர் போலுங்

காமனைக் காய்வர் போலும்
வெடிபடு தலையர் போலும்

வேட்கையாற் பரவுந் தொண்டர்
அடிமையை அளப்பர் போலும்

ஆவடு துறைய னாரே.

4.56.5

543

வக்கரன் உயிரை வவ்வக்

கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரங் கொடுப்பர் போலுந்

தானவர் தலைவர் போலுந்
துக்கமா மூடர் தம்மைத்

துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை ஆர்ப்பர் போலும்

ஆவடு துறைய னாரே.

4.56.6

544

விடைதரு கொடியர் போலும்

வெண்புரி நூலர் போலும்
படைதரு மழுவர் போலும்

பாய்புலித் தோலர் போலும்
உடைதரு கீளர் போலும்

உலகமு மாவர் போலும்
அடைபவர் இடர்கள் தீர்க்கும்

ஆவடு துறைய னாரே.

4.56.7

545

முந்திவா னோர்கள் வந்து

முறைமையால் வணங்கி யேத்த
நந்திமா காள ரென்பார்

நடுவுடை யார்கள் நிற்பச்
சிந்தியா தேயொ ழிந்தார்

திரிபுரம் எரிப்பர் போலும்
அந்திவான் மதியஞ் சூடும்

ஆவடு துறைய னாரே.

4.56.8

546

பானமர் ஏன மாகிப்

பாரிடந் திட்ட மாலுந்
தேனமர்ந் தேறும் அல்லித்

திசைமுக முடைய கோவுந்
தீனரைத் தியக் கறுத்த

திருவுரு வுடையர் போலும்
ஆனரை ஏற்றர் போலும்

ஆவடு துறைய னாரே.

4.56.9

547

பார்த்தனுக் கருள்வர் போலும்

படர்சடை முடியர் போலும்
ஏத்துவார் இடர்கள் தீர

இன்பங்கள் கொடுப்பர் போலுங்
கூத்தராய்ப் பாடி யாடிக்

கொடுவலி யரக்கன் றன்னை
ஆர்த்தவாய் அலறு விப்பார்

ஆவடு துறைய னாரே.

4.56.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்