திருஆவடுதுறை - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

548

மஞ்சனே மணியு மானாய்

மரகதத் திரளு மானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று

நினைதரு நிகழ்வி னானே
துஞ்சும்போ தாக வந்து

துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டும்

ஆவடு துறையு ளானே.

4.57.1

549

நானுகந் துன்னை நாளும்

நணுகுமா கருதி யேயும்
ஊனுகந் தோம்பும் நாயேன்

உள்ளுற ஐவர் நின்றார்
தானுகந் தேயு கந்த

தகவிலாத் தொண்ட னேன்நான்
ஆனுகந் தேறு வானே

ஆவடு துறையு ளானே.

4.57.2

550

கட்டமே வினைக ளான

காத்திவை நோக்கி ஆளாய்
ஒட்டவே ஒட்டி நாளும்

உன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் தலைகை யேந்திப்

பலிதிரிந் தூர்கள் தோறும்
அட்டமா வுருவி னானே

ஆவடு துறையு ளானே.

4.57.3

551

பெருமைநன் றுடைய தில்லை

யென்றுநான் பேச மாட்டேன்
ஒருமையால் உன்னை உள்கி

உகந்துவா னேற மாட்டேன்
கருமையிட் டாய வூனைக்

கட்டமே கழிக்கின் றேன்நான்
அருமையா நஞ்ச முண்ட

ஆவடு துறையு ளானே.

4.57.4

552

துட்டனாய் வினைய தென்னுஞ்

சுழித்தலை அகப்பட் டேனைக்
கட்டனாய் ஐவர் வந்து

கலக்காமைக் காத்துக் கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை

மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாக மாட்டும்

ஆவடு துறையு ளானே.

4.57.5

553

காரழற் கண்ட மேயாய்

கடிமதிற் புரங்கள் மூன்றும்
ஓரழல் அம்பி னாலே

யுகைத்துத்தீ எரிய மூட்டி
நீரழற் சடையு ளானே

நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய்
ஆரழல் ஏந்தி யாடும்

ஆவடு துறையு ளானே.

4.57.6

554

செறிவிலேன் சிந்தை யுள்ளே

சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன்

கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லேன்

நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன்

ஆவடு துறையு ளானே.

4.57.7

555

கோலமா மங்கை தன்னைக்

கொண்டொரு கோல மாய
சீலமே அறிய மாட்டேன்

செய்வினை மூடி நின்று
ஞாலமாம் இதனுள் என்னை

நைவியா வண்ணம் நல்காய்
ஆலமா நஞ்ச முண்ட

ஆவடு துறையு ளானே.

4.57.8

556

நெடியவன் மலரி னானும்

நேர்ந்திரு பாலும் நேடக்
கடியதோர் உருவ மாகிக்

கனலெரி யாகி நின்ற
வடிவின வண்ண மென்றே

என்றுதாம் பேச லாகார்
அடியனேன் நெஞ்சி னுள்ளார்

ஆவடு துறையு ளானே.

4.57.9

557

மலைக்குநே ராய ரக்கன்

சென்றுற மங்கை அஞ்சத்
தலைக்குமேற் கைக ளாலே

தாங்கினான் வலியை மாள
உலப்பிலா விரலால் ஊன்றி

ஒறுத்தவற் கருள்கள் செய்து
அலைத்தவான் கங்கை சூடும்

ஆவடு துறையு ளானே.

4.57.10

திருச்சிற்றம்பலம்