திருப்பருப்பதம் - திருநேரிசை

bookmark

பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

558

கன்றினார் புரங்கள் மூன்றுங்

கனலெரி யாகச் சீறி
நின்றதோ ருருவந் தன்னால்

நீர்மையும் நிறையுங் கொண்டு
ஒன்றியாங் குமையுந் தாமும்

ஊர்பலி தேர்ந்து பின்னும்
பன்றிப்பின் வேட ராகிப்

பருப்பத நோக்கி னாரே.

4.58.1

559

கற்றமா மறைகள் பாடிக்

கடைதொறும் பலியுந் தேர்வார்
வற்றலோர் தலைகை யேந்தி

வானவர் வணங்கி வாழ்த்த
முற்றவோர் சடையில் நீரை

ஏற்றமுக் கண்ணர் தம்மைப்
பற்றினார்க் கருள்கள் செய்து

பருப்பத நோக்கி னாரே.

4.58.2

560

கரவிலா மனத்த ராகிக்

கைதொழு வார்கட் கென்றும்
இரவினின் றெரிய தாடி

இன்னருள் செய்யும் எந்தை
மருவலார் புரங்கள் மூன்று

மாட்டிய நகைய ராகிப்
பரவுவார்க் கருள்கள் செய்து

பருப்பத நோக்கி னாரே.

4.58.3

561

கட்டிட்ட தலைகை யேந்திக்

கனலெரி யாடிச் சீறிச்
சுட்டிட்ட நீறு பூசிச்

சுடுபிணக் காட ராகி
விட்டிட்ட வேட்கை யார்க்கு

வேறிருந் தருள்கள் செய்து
பட்டிட்ட வுடைய ராகிப்

பருப்பத நோக்கி னாரே.

4.58.4

562

கையராய்க் கபால மேந்திக்

காமனைக் கண்ணாற் காய்ந்து
மெய்யராய் மேனி தன்மேல்

விளங்குவெண் ணீறு பூசி
உய்யரா யுள்கு வார்கட்

குவகைகள் பலவுஞ் செய்து
பையரா அரையி லார்த்துப்

பருப்பத நோக்கி னாரே.

4.58.5

563

வேடராய் வெய்ய ராகி

வேழத்தி னுரிவை போர்த்து
ஓடரா யுலக மெல்லா

முழிதர்வர் உமையுந் தாமுங்
காடராய்க் கனல்கை யேந்திக்

கடியதோர் விடைமேற் கொண்டு
பாடராய்ப் பூதஞ் சூழப்

பருப்பத நோக்கி னாரே.

4.58.6

564

மேகம்போல் மிடற்ற ராகி

வேழத்தி னுரிவை போர்த்து
ஏகம்பம் மேவி னார்தாம்

இமையவர் பரவி யேத்தக்
காகம்பர் கழற ராகிக்

கடியதோர் விடையொன் றேறிப்
பாகம்பெண் ணுருவ மானார்

பருப்பத நோக்கி னாரே.

4.58.7

565

பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும்

பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக்

கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே

றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப்

பருப்பத நோக்கி னாரே.

4.58.8

566

அங்கண்மா லுடைய ராய

ஐவரா லாட்டு ணாதே
உங்கள்மால் தீர வேண்டில்

உள்ளத்தா லுள்கி யேத்துஞ்
செங்கண்மால் பரவி யேத்திச்

சிவனென நின்ற செல்வர்
பைங்கண்வெள் ளேற தேறிப்

பருப்பத நோக்கி னாரே.

4.58.9

567

அடல்விடை யூர்தி யாகி

அரக்கன்றோள் அடர வூன்றிக்
கடலிடை நஞ்ச முண்ட

கறையணி கண்ட னார்தாஞ்
சுடர்விடு மேனி தன்மேற்

சுண்ணவெண் ணீறு பூசிப்
படர்சடை மதியஞ் சேர்த்திப்

பருப்பத நோக்கி னாரே.

4.58.10

இத்தலம் வடநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பருப்பதேசுவரர், தேவியார் - மனோன்மணியம்மை.

திருச்சிற்றம்பலம்