திருஅவளிவணல்லூர் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

568

தோற்றினான் எயிறு கவ்வித்

தொழிலுடை யரக்கன் றன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச்

சிக்கெனத் தவிரு மென்று
வீற்றினை யுடைய னாகி

வெடுவெடுத் தெழுந்த வன்றன்
ஆற்றலை அழிக்க வல்லார்

அவளிவ ணல்லூ ராரே.

4.59.1

569

வெம்பினா ரரக்க ரெல்லாம்

மிகச்சழக் காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில்

சிக்கெனச் சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி

நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினால் அழிய வெய்தார்

அவளிவ ணல்லூ ராரே.

4.59.2

570

கீழ்ப்படக் கருத லாமோ

கீர்த்திமை யுள்ள தாகிற்
தோட்பெரு வலியி னாலே

தொலைப்பன்யான் மலையை யென்று
வேட்பட வைத்த வாறே

விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கார்

அவளிவ ணல்லூ ராரே.

4.59.3

571

நிலைவலம் வல்ல னல்லன்

நேர்மையை நினைய மாட்டான்
சிலைவலங் கொண்ட செல்வன்

சீரிய கயிலை தன்னைத்
தலைவலங் கருதிப் புக்குத்

தாக்கினான் தன்னை யன்று
அலைகுலை யாக்கு வித்தார்

அவளிவ ணல்லூ ராரே.

4.59.4

572

தவ்வலி யொன்ற னாகித்

தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று

மிகப்பெருந் தேரை யூர்ந்து
செவ்வலி கூர்வி ழியாற்

சிரமத்தான் எடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லார்

அவளிவ ணல்லூ ராரே.

4.59.5

573

நன்மைதான் அறிய மாட்டான்

நடுவிலா அரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று

வலிதனைச் செலுத்த லுற்றுக்
கன்மையான் மலையை யோடிக்

கருதித்தான் எடுத்து வாயால்
அம்மையோ வென்ன வைத்தார்

அவளிவ ணல்லூ ராரே.

4.59.6

574

கதம்படப் போது வார்கள்

போதுமக் கருத்தி னாலே
சிதம்பட நின்ற நீர்கள்

சிக்கெனத் தவிரு மென்று
மதம்படு மனத்த னாகி

வன்மையான் மிக்கு நோக்க
அதம்பழத் துருவு செய்தார்

அவளிவ ணல்லூ ராரே.

4.59.7

575

நாடுமிக் குழிதர் கின்ற

நடுவிலா அரக்கர் கோனை
ஓடுமிக் கென்று சொல்லி

ஊன்றினான் உகிரி னாலே
பாடுமிக் குய்வ னென்று

பணியநற் றிறங்கள் காட்டி
ஆடுமிக் கரவம் பூண்டார்

அவளிவ ணல்லூ ராரே.

4.59.8

576

ஏனமா யிடந்த மாலும்

எழில்தரு முளரி யானும்
ஞானந்தா னுடைய ராகி

நன்மையை அறிய மாட்டார்
சேனந்தான் இலாவ ரக்கன்

செழுவரை எடுக்க வூன்றி
ஆனந்த அருள்கள் செய்தார்

அவளிவ ணல்லூ ராரே.

4.59.9

577

ஊக்கினான் மலையை யோடி

உணர்விலா அரக்கன் றன்னைத்
தாக்கினான் விரலி னாலே

தலைபத்துந் தகர வூன்றி
நோக்கினான் அஞ்சத் தன்னை

நோன்பிற வூன்று சொல்லி
ஆக்கினார் அமுத மாக

அவளிவ ணல்லூ ராரே.

4.59.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாட்சிநாயகேசுவரர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்