திருப்பெருவேளூர் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

578

மறையணி நாவி னானை

மறப்பிலார் மனத்து ளானைக்
கறையணி கண்டன் றன்னைக்

கனலெரி யாடி னானைப்
பிறையணி சடையி னானைப்

பெருவேளூர் பேணி னானை
நறையணி மலர்கள் தூவி

நாடொறும் வணங்கு வேனே.

4.60.1

579

நாதனாய் உலக மெல்லாம்

நம்பிரான் எனவும் நின்ற
பாதனாம் பரம யோகி

பலபல திறத்தி னாலும்
பேதனாய்த் தோன்றி னானைப்

பெருவேளூர் பேணி னானை
ஓதநா வுடைய னாகி

உரைக்குமா றுரைக்கின் றேனே.

4.60.2

580

குறவிதோள் மணந்த செல்வக்

குமரவேள் தாதை யென்று
நறவிள நறுமென் கூந்தல்

நங்கையோர் பாகத் தானைப்
பிறவியை மாற்று வானைப்

பெருவேளூர் பேணி னானை
உறவினால் வல்ல னாகி

உணருமா றுணர்த்து வேனே.

4.60.3

581

மைஞ்ஞவில் கண்டன் றன்னை

வலங்கையின் மழுவொன் றேந்திக்
கைஞ்ஞவில் மானி னோடுங்

கனலெரி யாடி னானைப்
பிஞ்ஞகன் றன்னை அந்தண்

பெருவேளூர் பேணி னானைப்
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப்

பொறியிலா அறிவி லேனே.

4.60.4

582

ஓடைசேர் நெற்றி யானை

உரிவையை மூடி னானை
வீடதே காட்டு வானை

வேதநான் காயி னானைப்
பேடைசேர் புறவ நீங்காப்

பெருவேளூர் பேணி னானைக்
கூடநான் வல்ல மாற்றங்

குறுகுமா றறிகி லேனே.

4.60.5

583

கச்சைசேர் நாகத் தானைக்

கடல்விடங் கண்டத் தானைக்
கச்சியே கம்பன் றன்னைக்

கனலெரி யாடு வானைப்
பிச்சைசேர்ந் துழல்வி னானைப்

பெருவேளூர் பேணி னானை
இச்சைசேர்ந் தமர நானும்

இறைஞ்சுமா றிறைஞ்சு வேனே.

4.60.6

584

சித்தராய் வந்து தன்னைத்

திருவடி வணங்கு வார்கள்
முத்தனை மூர்த்தி யாய

முதல்வனை முழுது மாய
பித்தனைப் பிறரு மேத்தப்

பெருவேளூர் பேணி னானை
மெத்தனே யவனை நாளும்

விரும்புமா றறிகி லேனே.

4.60.7

585

முண்டமே தாங்கி னானை

முற்றிய ஞானத் தானை
வண்டுலாங் கொன்றை மாலை

வளர்மதிக் கண்ணி யானைப்
பிண்டமே ஆயி னானைப்

பெருவேளூர் பேணி னானை
அண்டமாம் ஆதி யானை

அறியுமா றறிகி லேனே.

4.60.8

586

விரிவிலா அறிவி னார்கள்

வேறொரு சமயஞ் செய்து
எரிவினாற் சொன்னா ரேனும்

எம்பிராற் கேற்ற தாகும்
பரிவினாற் பெரியோ ரேத்தும்

பெருவேளூர் பற்றி னானை
மருவிநான் வாழ்த்தி உய்யும்

வகையது நினைக்கின் றேனே.

4.60.9

587

பொருகடல் இலங்கை மன்னன்

உடல்கெடப் பொருத்தி நல்ல
கருகிய கண்டத் தானைக்

கதிரிளங் கொழுந்து சூடும்
பெருகிய சடையி னானைப்

பெருவேளூர் பேணி னானை
உருகிய அடிய ரேத்தும்

உள்ளத்தால் உள்கு வேனே.

4.60.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரியாதநாதர், தேவியார் - மின்னனையாளம்மை.

திருச்சிற்றம்பலம்