திருஇராமேச்சுரம் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

588

பாசமுங் கழிக்க கில்லா

அரக்கரைப் படுத்துத் தக்க
வாசமிக் கலர்கள் கொண்டு

மதியினால் மால்செய் கோயில்
நேசமிக் கன்பி னாலே

நினைமின்நீர் நின்று நாளுந்
தேசமிக் கான் இருந்த

திருஇரா மேச்சு ரமே.

4.61.1

589

முற்றின நாள்கள் என்று

முடிப்பதே கார ணமாய்
உற்றவன் போர்க ளாலே

உணர்விலா அரக்கர் தம்மைச்
செற்றமால் செய்த கோயில்

திருஇரா மேச்சு ரத்தைப்
பற்றிநீ பரவு நெஞ்சே

படர்சடை ஈசன் பாலே.

4.61.2

590

கடலிடை மலைகள் தம்மால்

அடைத்துமால் கருமம் முற்றித்
திடலிடைச் செய்த கோயில்

திருஇரா மேச்சு ரத்தைத்
தொடலிடை வைத்து நாவிற்

சுழல்கின்றேன் தூய்மை யின்றி
உடலிடை நின்றும் பேரா

ஐவர்ஆட் டுண்டு நானே.

4.61.3

591

குன்றுபோல் தோளு டைய

குணமிலா அரக்கர் தம்மைக்
கொன்றுபோ ராழி யம்மால்

வேட்கையாற் செய்த கோயில்
நன்றுபோல் நெஞ்ச மேநீ

நன்மையை அறிதி யாயிற்
சென்றுநீ தொழுதுய் கண்டாய்

திருஇரா மேச்சு ரமே.

4.61.4

592

வீரமிக் கெயிறு காட்டி

விண்ணுற நீண்ட ரக்கன்
கூரமிக் கவனைச் சென்று

கொன்றுடன் கடற் படுத்துத்
தீரமிக் கானி ருந்த

திருஇரா மேச்சு ரத்தைக்
கோரமிக் கார்த வத்தாற்

கூடுவார் குறிப்பு ளாரே.

4.61.5

593

ஆர்வலம் நம்மின் மிக்கார்

என்றஅவ் வரக்கர் கூடிப்
போர்வலஞ் செய்து மிக்குப்

பொருதவர் தம்மை வீட்டித்
தேர்வலஞ் செற்ற மால்செய்

திருஇரா மேச்சு ரத்தைச்
சேர்மட நெஞ்ச மேநீ

செஞ்சடை எந்தை பாலே.

4.61.6

594

வாக்கினால் இன்பு ரைத்து

வாழ்கிலார் தம்மை யெல்லாம்
போக்கினாற் புடைத்த வர்கள்

உயிர்தனை யுண்டு மால்தான்
தேக்குநீர் செய்த கோயில்

திருஇரா மேச்சு ரத்தை
நோக்கினால் வணங்கு வார்க்கு

நோய்வினை நுணுகு மன்றே.

4.61.7

595

பலவுநாள் தீமை செய்து

பார்தன்மேற் குழுமி வந்து
கொலைவிலார் கொடிய ராய

அரக்கரைக் கொன்று வீழ்த்தச்
சிலையினான் செய்த கோயில்

திருஇரா மேச்சு ரத்தைத்
தலையினால் வணங்கு வார்கள்

தாழ்வராந் தவம தாமே.

4.618

596

கோடிமா தவங்கள் செய்து

குன்றினார் தம்மை யெல்லாம்
வீடவே சக்க ரத்தால்

எறிந்துபின் அன்பு கொண்டு
தேடிமால் செய்த கோயில்

திருஇரா மேச்சு ரத்தை
நாடிவாழ் நெஞ்ச மேநீ

நன்னெறி யாகு மன்றே.

4.61.9

597

வன்கண்ணர் வாள ரக்கர்

வாழ்வினை யொன்ற றியார்
புன்கண்ண ராகி நின்று

போர்கள்செய் தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில்

திருஇரா மேச்சு ரத்தைத்
தங்கணால் எய்த வல்லார்

தாழ்வராந் தலைவன் பாலே.

4.61.10

598

வரைகளொத் தேயு யர்ந்த

மணிமுடி அரக்கர் கோனை
விரையமுற் றறவொ டுக்கி

மீண்டுமால் செய்த கோயில்
திரைகள்முத் தால்வ ணங்குந்

திருஇரா மேச்சு ரத்தை
உரைகள்பத் தாலு ரைப்பார்

உள்குவார் அன்பி னாலே.

4.61.11

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இராமலிங்கேசுவரர்; தேவியார் - பருவதவர்த்தனியம்மை.

திருச்சிற்றம்பலம்