திருவாலவாய் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

599

வேதியா வேத கீதா

விண்ணவர் அண்ணா என்றென்
றோதியே மலர்கள் தூவி

ஒடுங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய்

படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே.

4.62.1

600

நம்பனே நான்மு கத்தாய்

நாதனே ஞான மூர்த்தி
என்பொனே ஈசா என்றென்

றேத்திநான் ஏசற் றென்றும்
பின்பினே திரிந்து நாயேன்

பேர்த்தினிப் பிறவா வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே

அருள் செயாயே.

4.62.2

601

ஒருமருந் தாகி யுள்ளாய்

உம்பரோ டுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய்

பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளாய்

ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமருந் தால வாயில்

அப்பனே அருள்செ யாயே.

4.62.3

602

செய்யநின் கமல பாதஞ்

சேருமா தேவர் தேவே
மையணி கண்டத் தானே

மான்மறி மழுவொன் றேந்துஞ்
சைவனே சால ஞானங்

கற்றறி விலாத நாயேன்
ஐயனே ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே.

4.62.4

603

வெண்டலை கையி லேந்தி

மிகவுமூர் பலிகொண் டென்றும்
உண்டது மில்லை சொல்லில்

உண்டது நஞ்சு தன்னைப்
பண்டுனை நினைய மாட்டாப்

பளகனேன் உளம தார
அண்டனே ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே.

4.62.5

604

எஞ்சலில் புகலி தென்றென்

றேத்திநான் ஏசற் றென்றும்
வஞ்சக மொன்று மின்றி

மலரடி காணும் வண்ணம்
நஞ்சினை மிடற்றில் வைத்த

நற்பொருட் பதமே நாயேற்
கஞ்சலென் றால வாயில்

அப்பனே அருள்செ யாயே.

4.62.6

605

வழுவிலா துன்னை வாழ்த்தி

வழிபடுந் தொண்ட னேன்உன்
செழுமலர்ப் பாதங் காணத்

தெண்டிரை நஞ்ச முண்ட
குழகனே கோல வில்லீ

கூத்தனே மாத்தா யுள்ள
அழகனே ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே.

4.62.7

606

நறுமலர் நீருங் கொண்டு

நாடொறு மேத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத்

திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா

மாமறை யங்க மாறும்
அறிவனே ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே.

4.62.8

607

நலந்திகழ் வாயின் நூலாற்

சருகிலைப் பந்தர் செய்த
சிலந்தியை அரச தாள

அருளினாய் என்று திண்ணங்
கலந்துடன் வந்து நின்றாள்

கருதிநான் காண்ப தாக
அலந்தனன் ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே.

4.62.9

608

பொடிக்கொடு பூசிப் பொல்லாக்

குரம்பையிற் புந்தி யொன்றிப்
பிடித்துநின் றாள்க ளென்றும்

பிதற்றிநா னிருக்க மாட்டேன்
எடுப்பனென் றிலங்கைக் கோன்வந்

தெடுத்தலும் இருப துதோள்
அடர்த்தனே ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே.

4.62.10

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சொக்கநாதேசுவரர், தேவியார் - மீனாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்