திருவண்ணாமலை - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

609

ஓதிமா மலர்கள் தூவி

உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோ ள்

சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே

அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால்

நினையுமா நினைவி லேனே.

4.63.1

610

பண்டனை வென்ற இன்சொற்

பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக்

கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே

அணியணா மலையு ளானே
தொண்டனேன் உன்னை அல்லாற்

சொல்லுமா சொல்லி லேனே.

4.63.2

611

உருவமும் உயிரு மாகி

ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்

நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா

மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்

மற்றொரு மாடி லேனே.

4.63.3

612

பைம்பொனே பவளக் குன்றே

பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா

சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்

அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்

யாதும்நான் நினைவி லேனே.

4.63.4

613

பிறையணி முடியி னானே

பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார்

கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமர ரேத்தும்

அணியணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லா

லியாதுநான் நினைவி லேனே.

4.63.5

614

புரிசடை முடியின் மேலோர்

பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக்

கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த அண்ணா

மலையுளாய் அலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய்

பாதநான் மறப்பி லேனே.

4.63.6

615

இரவியும் மதியும் விண்ணும்

இருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவனம் எட்டுந்

திசையொளி உருவ மானாய்
அரவுமிழ் மணிகொள் சோதி

அணியணா மலையு ளானே
பரவுநின் பாத மல்லாற்

பரமநான் பற்றி லேனே.

4.63.7

616

பார்த்தனுக் கன்று நல்கிப்

பாசுப தத்தை ஈந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை

நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்டல்

அணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத்

திறமலாற் றிறமி லேனே.

4.63.8

617

பாலுநெய் முதலா மிக்க

பசுவில்ஐந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக்

காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூகம்

அணியணா மலையு ளானே
வாலுடை விடையாய் உன்றன்

மலரடி மறப்பி லேனே.

4.63.9

618

இரக்கமொன் றியாது மில்லாக்

காலனைக் கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க

ஒருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த அண்ணா

மலையுளாய் அமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித்

திருவடி மறப்பி லேனே.

4.63.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர், தேவியார் - உண்ணாமுலையம்மை.

திருச்சிற்றம்பலம்