திருச்சாய்க்காடு - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

629

தோடுலா மலர்கள் தூவித்

தொழுதெழு மார்க்கண் டேயன்
வீடுநாள் அணுகிற் றென்று

மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செல்லு மஞ்சிப்

பாதமே சரண மென்னச்
சாடினார் காலன் மாளச்

சாய்க்காடு மேவி னாரே.

4.65.1

630

வடங்கெழு மலைமத் தாக

வானவர் அசுர ரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங்

கண்டுபல் தேவ ரஞ்சி
அடைந்துநும் சரண மென்ன

அருள்பெரி துடைய ராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார்

சாய்க்காடு மேவி னாரே.

4.65.2

631

அரணிலா வெளிய நாவல்

அருள்நிழ லாக ஈசன்
வரணிய லாகித் தன்வாய்

நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை

முடியுடை மன்ன னாக்கித்
தரணிதான் ஆள வைத்தார்

சாய்க்காடு மேவி னாரே.

4.65.3

632

அரும்பெருஞ் சிலைக்கை வேட

னாய்விறற் பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி

ஒள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரி துடைய னாக்கி

வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி ஈந்தார்

சாய்க்காடு மேவி னாரே.

4.65.4

633

இந்திரன் பிரமன் அங்கி

எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி

வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திர மறியாத் தக்கன்

வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ்

சாய்க்காடு மேவி னாரே.

4.65.5

634

ஆமலி பாலும் நெய்யும்

ஆட்டிஅர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப்

பொறாததன் தாதை தாளைக்
கூர்மழு வொன்றால் ஓச்சக்

குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார்

சாய்க்காடு மேவி னாரே.

4.65.6

635

மையறு மனத்த னாய

பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் லமர ரேத்த

ஆயிர முகம தாகி
வையகம் நெளியப் பாய்வான்

வந்திழி கங்கை யென்னுந்
தையலைச் சடையில் ஏற்றார்

சாய்க்காடு மேவி னாரே.

4.65.7

636

குவப்பெருந் தடக்கை வேடன்

கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந்
துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித்

தூயவாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர

ஒருகணை யிடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார்

சாய்க்காடு மேவி னாரே.

4.65.8

637

நக்குலா மலர்பன் னூறு

கொண்டுநன் ஞானத் தோடு
மிக்கபூ சனைகள் செய்வான்

மென்மல ரொன்று காணா
தொக்குமென் மலர்க்கண் ணென்றங்

கொருகணை யிடந்து மப்பச்
சக்கரங் கொடுப்பர் போலுஞ்

சாய்க்காடு மேவி னாரே.

4.65.9

638

புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து

மாயகொண் டரக்க னோடிச்
சிவன்திரு மலையைப் பேர்க்கத்

திருமலர்க் குழலி யஞ்ச
வியன்பெற எய்தி வீழ

விரல்சிறி தூன்றி மீண்டே
சயம்பெற நாம மீந்தார்

சாய்க்காடு மேவி னாரே.

4.65.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாயவனேசுவரர்,
தேவியார் - குயிலின்நன்மொழியம்மை.

திருச்சிற்றம்பலம்