திருச்சாய்க்காடு - திருநேரிசை

திருச்சிற்றம்பலம்
629
தோடுலா மலர்கள் தூவித்
தொழுதெழு மார்க்கண் டேயன்
வீடுநாள் அணுகிற் றென்று
மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செல்லு மஞ்சிப்
பாதமே சரண மென்னச்
சாடினார் காலன் மாளச்
சாய்க்காடு மேவி னாரே.
4.65.1
630
வடங்கெழு மலைமத் தாக
வானவர் அசுர ரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங்
கண்டுபல் தேவ ரஞ்சி
அடைந்துநும் சரண மென்ன
அருள்பெரி துடைய ராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார்
சாய்க்காடு மேவி னாரே.
4.65.2
631
அரணிலா வெளிய நாவல்
அருள்நிழ லாக ஈசன்
வரணிய லாகித் தன்வாய்
நூலினாற் பந்தர் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை
முடியுடை மன்ன னாக்கித்
தரணிதான் ஆள வைத்தார்
சாய்க்காடு மேவி னாரே.
4.65.3
632
அரும்பெருஞ் சிலைக்கை வேட
னாய்விறற் பார்த்தற் கன்று
உரம்பெரி துடைமை காட்டி
ஒள்ளமர் செய்து மீண்டே
வரம்பெரி துடைய னாக்கி
வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி ஈந்தார்
சாய்க்காடு மேவி னாரே.
4.65.4
633
இந்திரன் பிரமன் அங்கி
எண்வகை வசுக்க ளோடு
மந்திர மறைய தோதி
வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திர மறியாத் தக்கன்
வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற் கருள்செய் தாருஞ்
சாய்க்காடு மேவி னாரே.
4.65.5
634
ஆமலி பாலும் நெய்யும்
ஆட்டிஅர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப்
பொறாததன் தாதை தாளைக்
கூர்மழு வொன்றால் ஓச்சக்
குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார்
சாய்க்காடு மேவி னாரே.
4.65.6
635
மையறு மனத்த னாய
பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் லமர ரேத்த
ஆயிர முகம தாகி
வையகம் நெளியப் பாய்வான்
வந்திழி கங்கை யென்னுந்
தையலைச் சடையில் ஏற்றார்
சாய்க்காடு மேவி னாரே.
4.65.7
636
குவப்பெருந் தடக்கை வேடன்
கொடுஞ்சிலை இறைச்சிப் பாரந்
துவர்ப்பெருஞ் செருப்பால் நீக்கித்
தூயவாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர
ஒருகணை யிடந்தங் கப்பத்
தவப்பெருந் தேவு செய்தார்
சாய்க்காடு மேவி னாரே.
4.65.8
637
நக்குலா மலர்பன் னூறு
கொண்டுநன் ஞானத் தோடு
மிக்கபூ சனைகள் செய்வான்
மென்மல ரொன்று காணா
தொக்குமென் மலர்க்கண் ணென்றங்
கொருகணை யிடந்து மப்பச்
சக்கரங் கொடுப்பர் போலுஞ்
சாய்க்காடு மேவி னாரே.
4.65.9
638
புயங்கள்ஐஞ் ஞான்கும் பத்து
மாயகொண் டரக்க னோடிச்
சிவன்திரு மலையைப் பேர்க்கத்
திருமலர்க் குழலி யஞ்ச
வியன்பெற எய்தி வீழ
விரல்சிறி தூன்றி மீண்டே
சயம்பெற நாம மீந்தார்
சாய்க்காடு மேவி னாரே.
4.65.10
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சாயவனேசுவரர்,
தேவியார் - குயிலின்நன்மொழியம்மை.
திருச்சிற்றம்பலம்