திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

649

வரைகிலேன் புலன்க ளைந்தும்

வரைகிலாப் பிறவி மாயப்
புரையிலே அடங்கி நின்று

புறப்படும் வழியுங் காணேன்
அரையிலே மிளிரு நாகத்

தண்ணலே அஞ்ச லென்னாய்
திரையுலாம் பழன வேலித்

திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.1

650

தொண்டனேன் பிறந்து வாளா

தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நைந்து

பேர்வதோர் வழியுங் காணேன்
அண்டனே அண்ட வாணா

அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைப் பழனஞ் சூழ்ந்த

திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.2

651

கால்கொடுத் தெலும்பு மூட்டிக்

கதிர்நரம் பாக்கை யார்த்துத்
தோலுடுத் துதிர மட்டித்

தொகுமயிர் மேய்ந்த கூரை
ஓலெடுத் துழைஞர் கூடி

ஒளிப்பதற் கஞ்சு கின்றேன்
சேலுடைப் பழனஞ் சூழ்ந்த

திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.3

652

கூட்டமாய் ஐவர் வந்து

கொடுந்தொழிற் குணத்த ராகி
ஆட்டுவார்க் காற்ற கில்லேன்

ஆடர வசைத்த கோவே
காட்டிடை யரங்க மாக

ஆடிய கடவு ளேயோ
சேட்டிரும் பழன வேலித்

திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.4

653

பொக்கமாய் நின்ற பொல்லாப்

புழுமிடை முடைகொள் ஆக்கை
தொக்குநின் றைவர் தொண்ணூற்

றறுவருந் துயக்க மெய்த
மிக்குநின் றிவர்கள் செய்யும்

வேதனைக் கலந்து போனேன்
செக்கரே திகழும் மேனித்

திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.5

654

ஊனுலா முடைகொள் ஆக்கை

உடைகல மாவ தென்றும்
மானுலா மழைக்க ணார்தம்

வாழ்க்கையை மெய்யென் றெண்ணி
நானெலா மினைய கால

நண்ணிலேன் எண்ண மில்லேன்
தேனுலாம் பொழில்கள் சூழ்ந்த

திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.6

655

சாணிரு மடங்கு நீண்ட

சழக்குடைப் பதிக்கு நாதர்
வாணிகர் ஐவர் தொண்ணூற்

றறுவரும் மயக்கஞ் செய்து
பேணிய பதியின் நின்று

பெயரும்போ தறிய மாட்டேன்
சேணுயர் மாட நீடு

திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.7

656

பொய்மறித் தியற்றி வைத்துப்

புலால்கமழ் பண்டம் பெய்து
பைமறித் தியற்றி யன்ன

பாங்கிலாக் குரம்பை நின்று
கைமறித் தனைய வாவி

கழியும்போ தறிய மாட்டேன்
சென்னெறிச் செலவு காணேன்

திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.8

657

பாலனாய்க் கழிந்த நாளும்

பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும்

மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளுங்

குறிக்கோளி லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித்

திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.9

658

விரைதரு கருமென் கூந்தல்

விளங்கிழை வேலொண் கண்ணாள்
வெருவர இலங்கைக் கோமான்

விலங்கலை எடுத்த ஞான்று
பருவரை யனைய தோளும்

முடிகளும் பாரி வீழத்
திருவிர லூன்றி னானே

திருக்கொண்டீச் சரத்து ளானே.

4.67.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - சாந்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்