திருவாலங்காடு - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

659

வெள்ளநீர்ச் சடையர் போலும்

விரும்புவார்க் கெளியர் போலும்
உள்ளுளே யுருகி நின்றங்

குகப்பவர்க் கன்பர் போலுங்
கள்ளமே வினைக ளெல்லாங்

கரிசறுத் திடுவர் போலும்
அள்ளலம் பழனை மேய

ஆலங்காட் டடிக ளாரே.

4.68.1

660

செந்தழ லுருவர் போலுஞ்

சினவிடை யுடையர் போலும்
வெந்தவெண் ணீறு கொண்டு

மெய்க்கணிந் திடுவர் போலும்
மந்தமாம் பொழிற் பழனை

மல்கிய வள்ளல் போலும்
அந்தமில் அடிகள் போலும்

ஆலங்காட் டடிக ளாரே.

4.68.2

661

கண்ணினாற் காம வேளைக்

கனலெழ விழிப்பர் போலும்
எண்ணிலார் புரங்கள் மூன்று

மெரியுணச் சிரிப்பர் போலும்
பண்ணினார் முழவ மோவாப்

பைம்பொழிற் பழனை மேய
அண்ணலார் எம்மை யாளும்

ஆலங்காட் டடிக ளாரே.

4.68.3

662

காறிடு விடத்தை யுண்ட

கண்டரெண் தோளர் போலுந்
தூறிடு சுடலை தன்னிற்

சுண்ணவெண் ணீற்றர் போலுங்
கூறிடு முருவர் போலுங்

குளிர்பொழிற் பழனை மேய
ஆறிடு சடையர் போலும்

ஆலங்காட் டடிக ளாரே.

4.68.4

663

பார்த்தனோ டமர் பொருது

பத்திமை காண்பர் போலுங்
கூர்த்தவா யம்பு கோத்துக்

குணங்களை அறிவர் போலும்
பேர்த்துமோ ராவ நாழி

அம்போடுங் கொடுப்பர் போலுந்
தீர்த்தமாம் பழனை மேய

திருவாலங் காட னாரே.

4.68.5

664

வீட்டினார் சுடுவெண் ணீறு

மெய்க்கணிந் திடுவர் போலுங்
காட்டில்நின் றாடல் பேணுங்

கருத்தினை யுடையர் போலும்
பாட்டினார் முழவ மோவாப்

பைம்பொழிற் பழனை மேயார்
ஆட்டினார் அரவந் தன்னை

ஆலங்காட் டடிக ளாரே.

4.68.6

665

தாளுடைச் செங்க மலத்

தடங்கொள்சே வடியர் போலும்
நாளுடைக் காலன் வீழ

உதைசெய்த நம்பர் போலுங்
கோளுடைப் பிறவி தீர்ப்பார்

குளிர்பொழிற் பழனை மேய
ஆளுடை யண்ணல் போலும்

ஆலங்காட் டடிக ளாரே.

4.68.7

666

கூடினார் உமைதன் னோடே

குறிப்புடை வேடங் கொண்டு
சூடினார் கங்கை யாளைச்

சுவறிடு சடையர் போலும்
பாடினார் சாம வேதம்

பைம்பொழிற் பழனை மேயார்
ஆடினார் காளி காண

ஆலங்காட் டடிக ளாரே.

4.68.8

667

வெற்றரைச் சமண ரோடு

விலையுடைக் கூறை போர்க்கும்
ஒற்றரைச் சொற்கள் கொள்ளார்

குணங்களை உகப்பர் போலும்
பெற்றமே உகந்தங் கேறும்

பெருமையை யுடையர் போலும்
அற்றங்கள் அறிவர் போலும்

ஆலங்காட் டடிக ளாரே.

4.68.9

668

மத்தனாய் மலையெ டுத்த

அரக்கனைக் கரத்தோ டொல்க
ஒத்தினார் திருவி ரலால்

ஊன்றியிட் டருள்வர் போலும்
பத்தர்தம் பாவந் தீர்க்கும்

பைம்பொழிற் பழனை மேய
அத்தனார் நம்மை யாள்வார்

ஆலங்காட் டடிக ளாரே.

4.68.10

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுவரர்,
தேவியார் - வண்டார்குழலியம்மை.

திருச்சிற்றம்பலம்