திருக்கோவலூர்வீரட்டம் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

669

செத்தையேன் சிதம்ப நாயேன்

செடியனேன் அழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும்

புகலிடம் அறிய மாட்டேன்
எத்தைநான் பற்றி நிற்கேன்

இருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே

கோவல்வீ ரட்ட னீரே.

4.69.1

670

தலைசுமந் திருகை நாற்றித்

தரணிக்கே பொறைய தாகி
நிலையிலா நெஞ்சந் தன்னுள்

நித்தலும் ஐவர் வேண்டும்
விலைகொடுத் தறுக்க மாட்டேன்

வேண்டிற்றே வேண்டி எய்த்தேன்
குலைகொள்மாங் கனிகள் சிந்தும்

கோவல்வீ ரட்ட னீரே.

4.69.2

671

வழித்தலைப் படவு மாட்டேன்

வைகலுந் தூய்மை செய்து
பழித்திலேன் பாச மற்றுப்

பரமநான் பரவ மாட்டேன்
இழித்திலேன் பிறவி தன்னை

என்னினைந் திருக்க மாட்டேன்
கொழித்துவந் தலைக்குந் தெண்ணீர்க்

கோவல்வீ ரட்ட னீரே.

4.69.3

672

சாற்றுவர் ஐவர் வந்து

சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக்

கண்செவி மூக்கு வாயுள்
ஆற்றுவர் அலந்து போனேன்

ஆதியை அறிவொன் றின்றிக்
கூற்றுவர் வாயிற் பட்டேன்

கோவல்வீ ரட்ட னீரே.

4.69.4

673

தடுத்திலேன் ஐவர் தம்மைத்

தத்துவத் துயர்வு நீர்மைப்
படுத்திலேன் பரப்பு நோக்கிப்

பன்மலர்ப் பாத முற்ற
அடுத்திலேன் சிந்தை யார

ஆர்வலித் தன்பு திண்ணங்
கொடுத்திலேன் கொடிய வாநான்

கோவல்வீ ரட்ட னீரே.

4.69.5

674

மாச்செய்த குரம்பை தன்னை

மண்ணிடை மயக்க மெய்து
நாச்செய்து நாலு மைந்தும்

நல்லன வாய்தல் வைத்துக்
காச்செய்த காயந் தன்னுள்

நித்தலும் ஐவர் வந்து
கோச்செய்து குமைக்க வாற்றேன்

கோவல்வீ ரட்ட னீரே.

4.69.6

675

படைகள்போல் வினைகள் வந்து

பற்றியென் பக்கல் நின்றும்
விடகிலா வாத லாலே

விகிர்தனை விரும்பி யேத்தும்
இடையிலேன் என்செய் கேன்நான்

இரப்பவர் தங்கட் கென்றுங்
கொடையிலேன் கொள்வ தேநான்

கோவல்வீ ரட்ட னீரே.

4.69.7

676

பிச்சிலேன் பிறவி தன்னைப்

பேதையேன் பிணக்க மென்னுந்
துச்சுளே அழுந்தி வீழ்ந்து

துயரமே இடும்பை தன்னுள்
அச்சனாய் ஆதி மூர்த்திக்

கன்பனாய் வாழ மாட்டாக்
கொச்சையேன் செய்வ தென்னே

கோவல்வீ ரட்ட னீரே.

4.69.8

677

நிணத்திடை யாக்கை பேணி

நியமஞ்செய் திருக்க மாட்டேன்
மணத்திடை ஆட்டம் பேசி

மக்களே சுற்ற மென்னுங்
கணத்திடை ஆட்டப் பட்டுக்

காதலால் உன்னைப் பேணுங்
குணத்திடை வாழ மாட்டேன்

கோவல்வீ ரட்ட னீரே.

4.69.9

678

விரிகடல் இலங்கைக் கோனை

வியன்கயி லாயத் தின்கீழ்
இருபது தோளும் பத்துச்

சிரங்களும் நெறிய வூன்றிப்
பரவிய பாடல் கேட்டுப்

படைகொடுத் தருளிச் செய்தார்
குரவொடு கோங்கு சூழ்ந்த

கோவல்வீ ரட்ட னாரே.

4.69.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டேசநாதர், தேவியார் - சிவாநந்தவல்லி.

திருச்சிற்றம்பலம்