திருநாகைக்காரோணம் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

688

மனைவிதாய் தந்தை மக்கள்

மற்றுள சுற்ற மென்னும்
வினையுளே விழுந்த ழுந்தி

வேதனைக் கிடமா காதே
கனையுமா கடல்சூழ் நாகை

மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீ ராகில்

உய்யலாம் நெஞ்சி னீரே.

4.71..1

689

வையனை வைய முண்ட

மாலங்கந் தோண்மேற் கொண்ட
செய்யனைச் செய்ய போதிற்

திசைமுகன் சிரமொன் றேந்துங்
கையனைக் கடல்சூழ் நாகைக்

காரோணங் கோயில் கொண்ட
ஐயனை நினைந்த நெஞ்சே

அம்மநாம் உய்ந்த வாறே.

4.71..2

690

நிருத்தனை நிமலன் றன்னை

நீணிலம் விண்ணின் மிக்க
விருத்தனை வேத வித்தை

விளைபொருள் மூல மான
கருத்தனைக் கடல்சூழ் நாகைக்

காரோணங் கோயில் கொண்ட
ஒருத்தனை உணர்த லால்நாம்

உய்ந்தவா நெஞ்சி னீரே.

4.71.3

691

மண்டனை இரந்து கொண்ட

மாயனோ டசுரர் வானோர்
தெண்டிரை கடைய வந்த

தீவிடந் தன்னை யுண்ட
கண்டனைக் கடல்சூழ் நாகைக்

காரோணங் கோயில் கொண்ட
அண்டனை நினைந்த நெஞ்சே

அம்மநாம் உய்ந்த வாறே.

4.71.4

692

நிறைபுனல் அணிந்த சென்னி

நீணிலா அரவஞ் சூடி
மறையொலி பாடி யாடல்

மயானத்து மகிழ்ந்த மைந்தன்
கறைமலி கடல்சூழ் நாகைக்

காரோணங் கோயில் கொண்ட
இறைவனை நாளு மேத்த

இடும்பைபோய் இன்ப மாமே.

4.71.5

693

வெம்பனைக் கருங்கை யானை

வெருவவன் றுரிவை போர்த்த
கம்பனைக் காலற் காய்ந்த

காலனை ஞால மேத்தும்
உம்பனை உம்பர் கோனை

நாகைக்கா ரோண மேய
செம்பொனை நினைந்த நெஞ்சே

திண்ணம்நாம் உய்ந்த வாறே.

4.71.6

694

வெங்கடுங் கானத் தேழை

தன்னொடும் வேட னாய்ச்சென்
றங்கமர் மலைந்து பார்த்தற்

கடுசரம் அருளி னானை
மங்கைமார் ஆட லோவா

மன்னுகா ரோணத் தானைக்
கங்குலும் பகலுங் காணப்

பெற்றுநாங் களித்த வாறே.

4.71.7

695

தெற்றினர் புரங்கள் மூன்றுந்

தீயினில் விழவோ ரம்பால்
செற்றவெஞ் சிலையர் வஞ்சர்

சிந்தையுட் சேர்வி லாதார்
கற்றவர் பயிலும் நாகைக்

காரோணங் கருதி யேத்தப்
பெற்றவர் பிறந்தார் மற்றுப்

பிறந்தவர் பிறந்தி லாரே.

4.71.8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

4.71.9

696

கருமலி கடல்சூழ் நாகைக்

காரோணர் கமல பாதத்
தொருவிரல் நுதிக்கு நில்லா

தொண்டிறல் அரக்க னுக்கான்
இருதிற மங்கை மாரோ

டெம்பிரான் செம்பொ னாகந்
திருவடி தரித்து நிற்கத்

திண்ணம்நாம் உய்ந்த வாறே.

4.71.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர்,
தேவியார் - நீலாயதாட்சியம்மை.

திருச்சிற்றம்பலம்