திருச்சேறை - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

707

பெருந்திரு இமவான் பெற்ற

பெண்கொடி பிரிந்த பின்னை
வருந்துவான் தவங்கள் செய்ய

மாமணம் புணர்ந்து மன்னும்
அருந்திரு மேனி தன்பால்

அங்கொரு பாக மாகத்
திருந்திட வைத்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.

4.73.1

708

ஓர்த்துள வாறு நோக்கி

உண்மையை உணராக் குண்டர்
வார்த்தையை மெய்யென் றெண்ணி

மயக்கில்வீழ்ந் தழுந்து வேனைப்
பேர்த்தெனை ஆளாக் கொண்டு

பிறவிவான் பிணிக ளெல்லாந்
தீர்த்தருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.

4.73.2

709

ஒன்றிய தவத்து மன்னி

உடையனாய் உலப்பில் காலம்
நின்றுதங் கழல்க ளேத்தும்

நீள்சிலை விசய னுக்கு
வென்றிகொள் வேட னாகி

விரும்பிவெங் கான கத்துச்
சென்றருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.

4.73.3

710

அஞ்சையும் அடக்கி ஆற்ற

லுடையனாய் அநேக காலம்
வஞ்சமில் தவத்துள் நின்று

மன்னிய பகீர தற்கு
வெஞ்சின முகங்க ளாகி

விசையொடு பாயுங் கங்கைச்
செஞ்சடை யேற்றார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.

4.73.4

711

நிறைந்தமா மணலைக் கூப்பி

நேசமோ டாவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு

கறுத்ததன் தாதை தாளை
எறிந்தமா ணிக்கப் போதே

எழில்கொள்சண் டீசன் என்னச்
சிறந்தபே றளித்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.

4.73.5

712

விரித்தபல் கதிர்கொள் சூலம்

வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல காலப்

பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு

ஒண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.

4.73.6

713

சுற்றுமுன் இமையோர் நின்று

தொழுதுதூ மலர்கள் தூவி
மற்றெமை உயக்கொள் என்ன
மன்னுவான் புரங்கள் மூன்றும்
உற்றொரு நொடியின் முன்னம்

ஒள்ளழல் வாயின் வீழச்
செற்றருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.

4.73.7

714

முந்தியிவ் வுலக மெல்லாம்

படைத்தவன் மாலி னோடும்
எந்தனி நாத னேயென்

றிறைஞ்சிநின் றேத்தல் செய்ய
அந்தமில் சோதி தன்னை

அடிமுடி யறியா வண்ணஞ்
செந்தழ லானார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.

4.73.8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

4.73.9

715

ஒருவரும் நிக ரிலாத

ஒண்டிறல் அரக்கன் ஓடிப்
பெருவரை யெடுத்த திண்டோ ள்

பிறங்கிய முடிகள் இற்று
மருவியெம் பெருமா னென்ன

மலரடி மெள்ள வாங்கித்
திருவருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வ னாரே.

4.73.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சென்னெறியப்பர், தேவியார் - ஞானவல்லியம்மை.

திருச்சிற்றம்பலம்