தனித் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

726

தொண்டனேன் பட்ட தென்னே

தூயகா விரியின் நன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டிக்

குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி

ஈசனை எம்பி ரானைக்
கண்டனைக் கண்டி ராதே

காலத்தைக் கழித்த வாறே.

4.75.1

727

பின்னிலேன் முன்னி லேன்நான்

பிறப்பறுத் தருள்செய் வானே
என்னிலேன் நாயி னேன்நான்

இளங்கதிர்ப் பயலைத் திங்கட்
சின்னிலா எறிக்குஞ் சென்னிச்

சிவபுரத் தமர ரேறே
நின்னலால் களைகண் ஆரே

நீறுசே ரகலத் தானே.

4.75.2

728

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க்

காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று

தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற் றெல்லாம்

உடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும்

விலாவிறச் சிரித்திட் டேனே.

4.75.3

729

உடம்பெனு மனைய கத்துள்

உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி

உயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால்

எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை

கழலடி காண லாமே.

4.75.4

730

வஞ்சப்பெண் ணரங்கு கோயில்

வாளெயிற் றரவந் துஞ்சா
வஞ்சப்பெண் இருந்த சூழல்

வான்றவழ் மதியந் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன்

வாழ்வினை வாழ லுற்று
வஞ்சப்பெண் ணுறக்க மானேன்

வஞ்சனேன் என்செய் கேனே.

4.75.5

731

உள்குவார் உள்ளத் தானை

உணர்வெனும் பெருமை யானை
உள்கினேன் நானுங் காண்பான்

உருகினேன் ஊறி யூறி
எள்கினேன் எந்தை பெம்மான்

இருதலை மின்னு கின்ற
கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம்

எங்ஙனங் கூடு மாறே.

4.75.6

732

மோத்தையைக் கண்ட காக்கை

போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா

மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச்

செடிகொள்நோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ணம்

உணர்வுதா உலக மூர்த்தீ.

4.75.7

733

அங்கத்தை மண்ணுக் காக்கி

ஆர்வத்தை உனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப்

பாவித்தேன் பரமா நின்னைs
சங்கொத்த மேனிச் செல்வா

சாதல்நாள் நாயேன் உன்னை
எங்குற்றாய் என்ற போதா

இங்குற்றேன் என்கண் டாயே.

4.75.8

734

வெள்ளநீர்ச் சடைய னார்தாம்

வினவுவார் போல வந்தென்
உள்ளமே புகுந்து நின்றார்க்

குறங்குநான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீ ரென்னக்

கலந்துதான் நோக்கி நக்கு
வெள்ளரோ மென்று நின்றார்

விளங்கிளம் பிறைய னாரே.

4.75.9

735

பெருவிரல் இறைதா னூன்ற

பிறையெயி றிலங்க அங்காந்
தருவரை அனைய தோளான்

அரக்கனன் றலறி வீழ்ந்தான்
இருவரும் ஒருவ னாய

உருவமங் குடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு

காண்கநான் திரியு மாறே.

4.75.10

திருச்சிற்றம்பலம்