தனித் - திருநேரிசை

bookmark

திருச்சிற்றம்பலம்

746

கடும்பகல் நட்ட மாடிக்

கையிலோர் கபால மேந்தி
இடும்பலிக் கில்லந் தோறு

முழிதரும் இறைவ னீரே
நெடும்பொறை மலையர் பாவை

நேரிழை நெறிமென் கூந்தற்
கொடுங்குழை புகுந்த வன்றுங்

கோவண மரைய தேயோ.

4.77.1

747

கோவண முடுத்த வாறுங்

கோளர வசைத்த வாறுந்
தீவணச் சாம்பர் பூசித்

திருவுரு இருந்த வாறும்
பூவணக் கிழவ னாரைப்

புலியுரி அரைய னாரை
ஏவணச் சிலையி னாரை

யாவரே எழுது வாரே.

4.77.2

748

விளக்கினாற் பெற்ற இன்பம்

மெழுக்கினாற் பதிற்றி யாகுந்
துளக்கில்நன் மலர்தொ டுத்தால்

தூயவிண் ணேற லாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின்

மெய்ஞ்ஞெறி ஞான மாகும்
அளப்பில கீதஞ் சொன்னார்க்

கடிகள்தாம் அருளு மாறே.

4.77.3

749

சந்திரற் சடையில் வைத்த

சங்கரன் சாம வேதி
அந்தரத் தமரர் பெம்மான்

ஆன்நல்வெள் ளூர்தி யான்றன்
மந்திரம் நமச்சி வாய

ஆகநீ றணியப் பெற்றால்
வெந்தறும் வினையும் நோயும்

வெவ்வழல் விறகிட் டன்றே.

4.77.4

750

புள்ளுவர் ஐவர் கள்வர்

புனத்திடைப் புகுந்து நின்று
துள்ளுவர் சூறை கொள்வர்

தூநெறி விளைய வொட்டார்
முள்ளுடை யவர்கள் தம்மை

முக்கணான் பாத நீழல்
உள்ளிடை மறைந்து நின்றங்

குணர்வினா லெய்ய லாமே.

4.77.5

751

தொண்டனேன் பிறந்து வாளா

தொல்வினைக் குழியில் வீழ்ந்து
பிண்டமே சுமந்து நாளும்

பெரியதோர் அவாவிற் பட்டேன்
அண்டனே அமரர் கோவே

அறிவனே அஞ்ச லென்னாய்
தெண்டிரைக் கங்கை சூடுந்

திகழ்தரு சடையி னானே.

4.77.6

752

பாறினாய் பாவி நெஞ்சே

பன்றிபோல் அளற்றிற் பட்டுத்
தேறிநீ நினைதி யாயின்

சிவகதி திண்ண மாகும்
ஊறலே உவர்ப்பு நாறி

உதிரமே யொழுகும் வாசல்
கூறையால் மூடக் கண்டு

கோலமாக் கருதி னாயே.

4.77.7

இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள்
சிதைந்து போயின.

4.77.8-9

753

உய்த்தகால் உதயத் தும்பர்

உமையவள் நடுக்கந் தீர
வைத்தகா லரக்க னோதன்

வான்முடி தனக்கு நேர்ந்தான்
மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கள்

மூர்த்தியெ னுச்சி தன்மேல்
வைத்தகால் வருந்து மென்று

வாடிநான் ஒடுங்கி னேனே.

4.77.10

திருச்சிற்றம்பலம்