திருக்கழுமலம் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

790

பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட

ஞான்றுநின் பாதமெல்லாம்
நாலஞ்சு புள்ளினம் ஏந்தின

என்பர் நளிர்மதியங்
கால்கொண்ட வண்கைச் சடைவிரித்

தாடுங் கழுமலவர்க்
காளன்றி மற்றுமுண் டோ அந்த

ணாழி அகலிடமே.

4.82.1

791

கடையார் கொடிநெடு மாடங்க

ளெங்குங் கலந்திலங்க
உடையா னுடைதலை மாலையுஞ்

சூடி உகந்தருளி
விடைதா னுடையவவ் வேதியன்

வாழுங் கழுமலத்துள்
அடைவார் வினைக ளவையெள்க

நாடொறும் ஆடுவரே.

4.82.2

792

திரைவாய்ப் பெருங்கடல் முத்தங்

குவிப்ப முகந்துகொண்டு
நுரைவாய் நுளைச்சிய ரோடிக்

கழுமலத் துள்ளழுந்தும்
விரைவாய் நறுமலர் சூடிய

விண்ணவன் றன்னடிக்கே
வரையாப் பரிசிவை நாடொறும்

நந்தமை யாள்வனவே.

4.82.3

793

விரிக்கும் அரும்பதம் வேதங்க

ளோதும் விழுமியநூல்
உரைக்கில் அரும்பொருள் உள்ளுவர்

கேட்கில் உலகமுற்றும்
இரிக்கும் பறையொடு பூதங்கள்

பாடக் கழுமலவன்
நிருத்தம் பழம்படி யாடுங்

கழல்நம்மை ஆள்வனவே.

4.82.4

794

சிந்தித் தெழுமன மேநினை

யாமுன் கழுமலத்தைப்
பந்தித்த வல்வினை தீர்க்க

வல்லானைப் பசுபதியைச்
சந்தித்த கால மறுத்துமென்

றெண்ணி யிருந்தவர்க்கு
முந்தித் தொழுகழல் நாடொறும்

நந்தம்மை ஆள்வனவே.

4.82.5

795

நிலையும் பெருமையும் நீதியுஞ்

சால அழகுடைத்தாய்
அலையும் பெருவெள்ளத் தன்று

மிதந்தவித் தோணிபுரஞ்
சிலையில் திரிபுரம் மூன்றெரித்

தார்தங் கழுமலவர்
அலருங் கழலடி நாடொறும்

நந்தமை ஆள்வனவே.

4.82.6

796

முற்றிக் கிடந்துமுந் நீரின்

மிதந்துடன் மொய்த்தமரர்
சுற்றிக் கிடந்து தொழப்படு

கின்றது சூழரவந்
தெற்றிக் கிடந்துவெங் கொன்றளந்

துன்றிவெண் திங்கள்சூடுங்
கற்றைச் சடைமுடி யார்க்கிட

மாய கழுமலமே.

4.82.7

797

உடலும் உயிரும் ஒருவழிச்

செல்லும் உலகத்துள்ளே
அடையும் உனைவந் தடைந்தார்

அமரர் அடியிணைக்கீழ்
நடையும் விழவொடு நாடொறும்

மல்கும் கழுமலத்துள்
விடையன் தனிப்பதம் நாடொறும்

நந்தமை ஆள்வனவே.

4.82.8

798

பரவைக் கடல்நஞ்ச முண்டது

மில்லையிப் பார்முழுதும்
நிரவிக் கிடந்து தொழப்படு

கின்றது நீண்டிருவர்
சிரமப் படவந்து சார்ந்தார்

கழலடி காண்பதற்கே
அரவக் கழலடி நாடொறும்

நந்தமை ஆள்வனவே.

4.82.9

799

கரையார் கடல்சூழ் இலங்கையர்

கோன்றன் முடிசிதறத்
தொலையா மலரடி ஊன்றலும்

உள்ளம் விதிர்விதிர்த்துத்
தலையாய்க் கிடந்துயர்ந் தான்றன்

கழுமலங் காண்பதற்கே
அலையாப் பரிசிவை நாடொறும்

நந்தமை ஆள்வனவே.

4.82.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர், தேவியார் - திருநிலைநாயகி.
திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.

திருச்சிற்றம்பலம்