திருவொற்றியூர் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

822

செற்றுக் களிற்றுரி கொள்கின்ற

ஞான்று செருவெண்கொம்பொன்
றிற்றுக் கிடந்தது போலும்

இளம்பிறை பாம்பதனைச்
சுற்றிக் கிடந்தது கிம்புரி

போலச் சுடரிமைக்கும்
நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா

லொற்றி யூரனுக்கே.

4.86.1

823

சொல்லக் கருதிய தொன்றுண்டு

கேட்கிற் றொண்டாயடைந்தார்
அல்லற் படக்கண்டு பின்னென்

கொடுத்தி அலைகொள்முந்நீர்
மல்லற் றிரைச்சங்க நித்திலங்

கொண்டுவம் பக்கரைக்கே
ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி

யூருறை யுத்தமனே.

4.86.2

824

பரவை வருதிரை நீர்க்கங்கை

பாய்ந்துக்க பல்சடைமேல்
அரவ மணிதரு கொன்றை

இளந்திங்கட் சூடியதோர்
குரவ நறுமலர் கோங்க

மணிந்து குலாய சென்னி
உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி

யூருறை யுத்தமனே.

4.86.3

825

தானகங் காடரங் காக

வுடையது தன்னடைந்தார்
ஊனக நாறு முடைதலை

யிற்பலி கொள்வதுந்தான்
தேனக நாறுந் திருவொற்றி

யூருறை வாரவர்தாந்
தானக மேவந்து போனகம்

வேண்டி உழிதர்வரே.

4.86.4

826

வேலைக் கடல்நஞ்ச முண்டுவெள்

ளேற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க் குறைவிட

மாவது வாரிகுன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெற்

கழனி அருகணைந்த
சோலைத் திருவொற்றி யூரையெப்

போதுந் தொழுமின்களே.

4.86.5

827

புற்றினில் வாழும் அரவுக்குந்

திங்கட்குங் கங்கையென்னுஞ்
சிற்றிடை யாட்குஞ் செறிதரு

கண்ணிக்குஞ் சேர்விடமாம்
பெற்றுடை யான்பெரும் பேச்சுடை

யான்பிரி யாதெனையாள்
விற்றுடை யானொற்றி யூருடை

யான்றன் விரிசடையே.

4.86.6

828

இன்றரைக் கண்ணுடை யாரெங்கு

மில்லை இமய மென்னுங்
குன்றரைக் கண்ணன் குலமகட்

பாவைக்குக் கூறிட்டநாள்
அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை

யாளையும் பாகம்வைத்த
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி

யூருறை உத்தமனே.

4.86.7

829

சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங்

காவுந் துதைந்திலங்கு
பெற்றிகண் டால்மற்று யாவருங்

கொள்வர் பிறரிடைநீ
ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங்

கைவிட் டுறுமென்றெண்ணி
விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப

தில்லிடம் வேதியனே.

4.86.8

830

சுற்றிக் கிடந்தொற்றி யூரனென்

சிந்தை பிரிவறியான்
ஒற்றித் திரிதந்து நீயென்ன

செய்தி உலகமெல்லாம்
பற்றித் திரிதந்து பல்லொடு

நாமென்று கண்குழித்துத்
தெற்றித் திருப்பதல் லாலென்ன

செய்யுமித் தீவினையே.

4.86.9

831

அங்கட் கடுக்கைக்கு முல்லைப்

புறவம் முறுவல்செய்யும்
பைங்கட் டலைக்குச் சுடலைக்

களரி பருமணிசேர்
கங்கைக்கு வேலை அரவுக்குப்

புற்று கலைநிரம்பாத்
திங்கட்கு வானந் திருவொற்றி

யூரர் திருமுடியே.

4.86.10

832

தருக்கின வாளரக் கன்முடி

பத்திறப் பாதந்தன்னால்
ஒருக்கின வாறடி யேனைப்

பிறப்பறுத் தாளவல்லான்
நெருக்கின வானவர் தானவர்

கூடிக் கடைந்தநஞ்சைப்
பருக்கின வாறென்செய் கேனொற்றி

யூருறை பண்டங்கனே.

4.86.11

திருச்சிற்றம்பலம்