திருப்பழனம் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

833

மேவித்து நின்று விளைந்தன

வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன

அல்லல் அவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி

வாய்பழ னத்தரசே
கூவித்துக் கொள்ளுந் தனையடி

யேனைக் குறிக்கொள்வதே.

4.87.1

834

சுற்றிநின் றார்புறங் காவ

லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு

நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர

சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.

4.87.2

835

ஆடிநின் றாயண்டம் ஏழுங்

கடந்துபோய் மேலவையுங்
கூடிநின் றாய்குவி மென்முலை

யாளையுங் கொண்டுடனே
பாடிநின் றாய்பழ னத்தர

சேயங்கோர் பால்மதியஞ்
சூடிநின் றாயடி யேனையஞ்

சாமைக் குறிக்கொள்வதே.

4.87.3

836

எரித்துவிட் டாய்அம்பி னாற்புர

மூன்றுமுன் னேபடவும்
உரித்துவிட் டாய்உமை யாள்நடுக்

கெய்தவோர் குஞ்சரத்தைப்
பரித்துவிட் டாய்பழ னத்தர

சேகங்கை வார்சடைமேற்
தரித்துவிட் டாயடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.

4.87.4

837

முன்னியும் முன்னி முளைத்தன

மூவெயி லும்முடனே
மன்னியு மங்கும் இருந்தனை

மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறி

வாய்பழ னத்தரசே
உன்னியும் உன்னடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.

4.87.5

838

ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந்

தேபடைத் தான்றலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று

காமனைக் காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தர

சேயென் பழவினைநோய்
ஆய்ந்தறுத் தாயடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.

4.87.6

839

மற்றுவைத் தாயங்கோர் மாலொரு

பாகம் மகிழ்ந்துடனே
உற்றுவைத் தாய்உமை யாளொடுங்

கூடும் பரிசெனவே
பற்றிவைத் தாய்பழ னத்தர

சேயங்கோர் பாம்பொருகை
சுற்றிவைத் தாய்அடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.

4.87.7

840

ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண்

டாரையும் ஒள்ளழலாற்
போரினின் றாய்பொறை யாயுயி

ராவி சுமந்துகொண்டு
பாரிநின் றாய்பழ னத்தர

சேபணி செய்பவர்கட்
காரநின் றாய்அடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.

4.87.8

841

போகம்வைத் தாய்புரி புன்சடை

மேலோர் புனலதனை
ஆகம்வைத் தாய்மலை யான்மட

மங்கை மகிழ்ந்துடனே
பாகம்வைத் தாய்பழ னத்தர

சேயுன் பணியருளால்
ஆகம்வைத் தாய்அடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.

4.87.9

842

அடுத்திருந் தாய்அரக் கன்முடி

வாயொடு தோள்நெரியக்
கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி

யைக்கிளை யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தர

சேபுலி யின்னுரிதோல்
உடுத்திருந் தாய்அடி யேனைக்

குறிக்கொண் டருளுவதே.

4.87.10

திருச்சிற்றம்பலம்