திருஅங்கமாலை

பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்
82
தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.
4.9.1
83
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.
4.9.2
84
செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
செவிகள் கேண்மின்களோ.
4.9.3
85
மூக்கே நீமுரலாய் - முது
காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீமுரலாய்.
4.9.4
86
வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
வாயே வாழ்த்துகண்டாய்.
4.9.5
87
நெஞ்சே நீநினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய்.
4.9.6
88
கைகாள் கூப்பித்தொழீர் - கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகள் கூப்பித்தொழீர்.
4.9.7
89
ஆக்கை யாற்பயனென் - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்
வாக்கை யாற்பயனென்.
4.9.8
90
கால்க ளாற்பயனென் - கறைக்
கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
கால்க ளாற்பயனென்.
4.9.9
91
உற்றா ராருளரோ - உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றார் ஆருளரோ.
4.9.10
92
இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்
பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
கிறுமாந் திருப்பன்கொலோ.
4.9.11
93
தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
தேடிக் கண்டுகொண்டேன்.
4.9.12
திருச்சிற்றம்பலம்