திருஅங்கமாலை

bookmark

பண் - சாதாரி
திருச்சிற்றம்பலம்

82

தலையே நீவணங்காய் - தலை

மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்

தலையே நீவணங்காய்.

4.9.1

83

கண்காள் காண்மின்களோ - கடல்

நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்

கண்காள் காண்மின்களோ.

4.9.2

84

செவிகாள் கேண்மின்களோ - சிவன்

எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்

செவிகள் கேண்மின்களோ.

4.9.3

85

மூக்கே நீமுரலாய் - முது

காடுறை முக்கணனை
வாக்கே நோக்கிய மங்கை மணாளனை

மூக்கே நீமுரலாய்.

4.9.4

86

வாயே வாழ்த்துகண்டாய் - மத

யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை

வாயே வாழ்த்துகண்டாய்.

4.9.5

87

நெஞ்சே நீநினையாய் - நிமிர்

புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கை மணாளனை

நெஞ்சே நீநினையாய்.

4.9.6

88

கைகாள் கூப்பித்தொழீர் - கடி

மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்

கைகள் கூப்பித்தொழீர்.

4.9.7

89

ஆக்கை யாற்பயனென் - அரன்

கோயில் வலம்வந்து
பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்

வாக்கை யாற்பயனென்.

4.9.8

90

கால்க ளாற்பயனென் - கறைக்

கண்ட னுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்

கால்க ளாற்பயனென்.

4.9.9

91

உற்றா ராருளரோ - உயிர்

கொண்டு போம்பொழுது
குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்

குற்றார் ஆருளரோ.

4.9.10

92

இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்

பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்

கிறுமாந் திருப்பன்கொலோ.

4.9.11

93

தேடிக் கண்டுகொண்டேன் - திரு

மாலொடு நான்முகனுந்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்.

4.9.12

திருச்சிற்றம்பலம்