திருவேதிகுடி - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

863

கையது காலெரி நாகங்

கனல்விடு சூலமது
வெய்யது வேலைநஞ் சுண்ட

விரிசடை விண்ணவர்கோன்
செய்யினில் நீல மணங்கம

ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை

நாமடைந் தாடுதுமே.

4.90.1

864

கைத்தலை மான்மறி யேந்திய

கையன் கனல்மழுவன்
பொய்த்தலை யேந்திநற் பூதி

யணிந்து பலிதிரிவான்
செய்த்தலை வாளைகள் பாய்ந்துக

ளுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை

நாமடைந் தாடுதுமே.

4.90.2

865

முன்பின் முதல்வன் முனிவனெம்

மேலை வினைகழித்தான்
அன்பின் நிலையில் அவுணர்

புரம்பொடி யானசெய்யுஞ்
செம்பொனை நன்மலர் மேலவன்

சேர்திரு வேதிகுடி
அன்பனை நம்மை யுடையனை

நாமடைந் தாடுதுமே.

4.90.3

866

பத்தர்கள் நாளும் மறவார்

பிறவியை யொன்றறுப்பான்
முத்தர்கள் முன்னம் பணிசெய்து

பாரிடம் முன்னுயர்த்தான்
கொத்தன கொன்றை மணங்கம

ழுந்திரு வேதிகுடி
அத்தனை ஆரா அமுதினை

நாமடைந் தாடுதுமே.

4.90.4

867

ஆனணைந் தேறுங் குறிகுண

மாரறி வாரவர்கை
மானணைந் தாடு மதியும்

புனலுஞ் சடைமுடியன்
தேனணைந் தாடிய வண்டு

பயில்திரு வேதிகுடி
ஆனணைந் தாடு மழுவனை

நாமடைந் தாடுதுமே.

4.90.5

868

எண்ணும் எழுத்துங் குறியும்

அறிபவர் தாமொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய

வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும்

பிரான்றிரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை

நாமடைந் தாடுதுமே.

4.90.6

869

ஊர்ந்த விடையுகந் தேறிய

செல்வனை நாமறியோம்
ஆர்ந்த மடமொழி மங்கையோர்

பாகம் மகிழ்ந்துடையான்
சேர்ந்த புனற்சடைச் செல்வப்

பிரான்றிரு வேதிகுடிச்
சார்ந்த வயலணி தண்ணமு

தையடைந் தாடுதுமே.

4.90.7

870

எரியும் மழுவினன் எண்ணியும்

மற்றொரு வன்றலையுள்
திரியும் பலியினன் தேயமும்

நாடுமெல் லாமுடையான்
விரியும் பொழிலணி சேறு

திகழ்திரு வேதிகுடி
அரிய அமுதினை அன்பர்க

ளோடடைந் தாடுதுமே.

4.90.8

871

மையணி கண்டன் மறைவிரி

நாவன் மதித்துகந்த
மெய்யணி நீற்றன் விழுமிய

வெண்மழு வாட்படையான்
செய்ய கமல மணங்கம

ழுந்திரு வேதிகுடி
ஐயனை ஆரா அமுதினை

நாமடைந் தாடுதுமே.

4.90.9

872

வருத்தனை வாளரக் கன்முடி

தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா அருளனைப்

பூதப் படையுடைய
திருத்தனைத் தேவர் பிரான்றிரு

வேதி குடியுடைய
அருத்தனை ஆரா அமுதினை

நாமடைந் தாடுதுமே.

4.90.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர்,
தேவியார் - மங்கையர்க்கரசியம்மை.

திருச்சிற்றம்பலம்