திருவீழிமிழலை - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

923

வான்சொட்டச் சொட்டநின் றட்டும்

வளர்மதி யோடயலே
தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந்

திருக்கொன்றை சென்னிவைத்தீர்
மான்பெட்டை நோக்கி மணாளீர்

மணிநீர் மிழலையுள்ளீர்
நான்சட்ட வும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.

4.96.1

924

அந்தமும் ஆதியு மாகிநின்

றீரண்டம் எண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்

றீர்பசு வேற்றுகந்தீர்
வெந்தழல் ஓம்பு மிழலையுள்

ளீரென்னைத் தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.

4.96.2

925

அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல்

அம்பர மாகிநின்றீர்
கலைக்கன்று சேருங் கரத்தீர்

கலைப்பொரு ளாகிநின்றீர்
விலக்கின்றி நல்கும் மிழலையுள்

ளீர்மெய்யிற் கையொடுகால்
குலைக்கின்று நும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.

4.96.3

926

தீத்தொழி லான்றலை தீயிலிட்

டுச்செய்த வேள்விசெற்றீர்
பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை

யீர்பிடித் துத்திரியும்
வேய்த்தொழி லாளர் மிழலையுள்

ளீர்விக்கி அஞ்செழுத்தும்
ஓத்தொழிந் தும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.

4.96.4

927

தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ்

சுத்தியும் பத்திமையான்
மேற்பட்ட அந்தணர் வீழியும்

என்னையும் வேறுடையீர்
நாட்பட்டு வந்து பிறந்தேன்

இறக்க நமன்தமர்தம்
கோட்பட்டு நும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.

4.96.5

928

கண்டியிற் பட்ட கழுத்துடை

யீர்கரி காட்டிலிட்ட
பண்டியிற் பட்ட பரிகலத்

தீர்பதி வீழிகொண்டீர்
உண்டியிற் பட்டினி நோயில்

உறக்கத்தில் உம்மையைவர்
கொண்டியிற் பட்டு மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.

4.96.6

929

தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண்

டீர்தூய வெள்ளெருதொன்
றேற்றங்கொண் டீரெழில் வீழி

மிழலை இருக்கைகொண்டீர்
சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததோர்

பாசத்தால் வீசியவெங்
கூற்றங்கண் டும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.

4.96.7

930

சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ்

சூடிச்சொக் கம்பயின்றீர்
பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை

யீர்படர் தீப்பருக
விழிப்பட்ட காமனை வீட்டீர்

மிழலையுள் ளீர்பிறவிச்
சுழிப்பட்டு நும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.

4.96.8

931

பிள்ளையிற் பட்ட பிறைமுடி

யீர்மறை யோதவல்லீர்
வெள்ளையிற் பட்டதோர் நீற்றீர்

விரிநீர் மிழலையுள்ளீர்
நள்ளையிற் பட்டைவர் நக்கரைப்

பிக்க நமன்தமர்தங்
கொள்ளையிற் பட்டு மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.

4.96.9

932

கறுக்கொண் டரக்கன் கயிலையைப்

பற்றிய கையுமெய்யும்
நெறுக்கென் றிறச்செற்ற சேவடி

யாற்கூற்றை நீறுசெய்தீர்
வெறிக்கொன்றை மாலை முடியீர்

விரிநீர் மிழலையுள்ளீர்
இறக்கின்று நும்மை மறக்கினும்

என்னைக் குறிக்கொண்மினே.

4.96.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுஜாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்