திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம்

bookmark

திருச்சிற்றம்பலம்

933

கோவாய் முடுகி யடுதிறற்

கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற்

பொறித்துவை போகவிடின்
மூவா முழுப்பழி மூடுங்கண்

டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.1

934

காய்ந்தாய் அனங்கன் உடலம்

பொடிபடக் காலனைமுன்
பாய்ந்தாய் உயிர்செகப் பாதம்

பணிவார்தம் பல்பிறவி
ஆய்ந்தாய்ந் தறுப்பாய் அடியேற்

கருளாயுன் அன்பர்சிந்தை
சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.2

935

பொத்தார் குரம்பை புகுந்தைவர்

நாளும் புகலழிப்ப
மத்தார் தயிர்போல் மறுகுமென்

சிந்தை மறுக்கொழிவி
அத்தா அடியேன் அடைக்கலங்

கண்டாய் அமரர்கள்தஞ்
சித்தா திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.3

936

நில்லாக் குரம்பை நிலையாக்

கருதியிந் நீணிலத்தொன்
றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு

வேனைவந் தாண்டுகொண்டாய்
வில்லேர் புருவத் துமையாள்

கணவா விடிற்கெடுவேன்
செல்வா திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.4

937

கருவுற் றிருந்துன் கழலே

நினைந்தேன் கருப்புவியிற்
தெருவிற் புகுந்தேன் திகைத்தடி

யேனைத் திகைப்பொழிவி
உருவிற் றிகழும் உமையாள்

கணவா விடிற்கெடுவேன்
திருவிற் பொலிசத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.5

938

வெம்மை நமன்தமர் மிக்கு

விரவி விழுப்பதன்முன்
இம்மையுன் தாளென்றன் நெஞ்சத்

தெழுதிவை ஈங்கிகழில்
அம்மை அடியேற் கருளுதி

யென்பதிங் காரறிவார்
செம்மை தருசத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.6

939

விட்டார் புரங்கள் ஒருநொடி

வேவவோர் வெங்கணையாற்
சுட்டாயென் பாசத் தொடர்பறுத்

தாண்டுகொள் தும்பிபம்பும்
மட்டார் குழலி மலைமகள்

பூசை மகிழ்ந்தருளுஞ்
சிட்டா திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.7

940

இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்

டிமையோர் பொறையிரப்ப
நிகழ்ந்திட அன்றே விசயமுங்

கொண்டது நீலகண்டா
புகழ்ந்த அடியேன்றன் புன்மைகள்

தீரப் புரிந்துநல்காய்
திகழ்ந்த திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.8

941

தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந்

துன்றன் சரண்புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன்றிற

மல்லால் எனக்குளதே
மிக்கார் திலையுள் விருப்பா

மிகவட மேருவென்னுந்
திக்கா திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.9

942

பொறித்தேர் அரக்கன் பொருப்பெடுப்

புற்றவன் பொன்முடிதோள்
இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட்

டலற இரங்கிஒள்வாள்
குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய்

குற்றக் கொடுவினைநோய்
செறுத்தாய் திருச்சத்தி முற்றத்

துறையுஞ் சிவக்கொழுந்தே.

4.97.10

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவக்கொழுந்தீசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்