வீணர்

வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீணுரை
விரும்புவோர் அவரின் வீணர்!
விருந்துகண் டில்லாள் தனக்கஞ்சிஓடிமறை
விரகிலோர் அவரின் வீணர்!
நாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே!
நாடி அவர் மேற்கவி சொல்வார்
நானிலந் தனில்வீணர்! அவரினும் வீணரே
நரரைச் சுமக்கும் எளியோர்!
தேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்
சேரொரு வரத்தும் இன்றிச்
செலவுசெய் வோர் அதிக வீணராம்! வீணனாய்த்
திரியும்எளி யேனை ஆட்கொண்
டாட்டஞ்செ யும்பதாம் புயம்முடியின் மேல்வைத்த
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!