ஒண்ணாது

bookmark

வஞ்சகர் தமைக்கூடி மருவொணா தன்பிலார் 
      வாசலிற் செல்லொ ணாது; 
வாதெவ ரிடத்திலும் புரியொணா தறிவிலா 
      மடையர்முன் நிற் கொணாது; 
கொஞ்சமே னும்தீது செய்யொணா தொருவர்மேல் 
      குற்றஞ்சொ லொண்ணா தயல் 
கோதையர்க ளோடுபரி காசஞ்செ யொண்ணாது; 
      கோளுரைகள் பேசொணாது; 
நஞ்சுதரும் அரவொடும் பழகொணா திருள்வழி 
      நடந்துதனி யேகொணாது 
நதிபெருக் காகின் அதில் நீஞ்சல்செய் யொண்ணாது; 
      நல்வழி மறக்கொணாது; 
அஞ்சாமல் அரசர்முன் பேசொணா திவையெலாம் 
      அறியும்எம தருமை மதவேள் 
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர் 
      அறப்பளீ சுரதே வனே!
---------