அரசர் சிறப்பு

மனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாட
வரும்அதிக ரணவீ ரமும்,
வாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,
வாசிமத கரியேற் றமும்,
கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,
கைகண்ட போர்ப்ப டைஞரும்,
கசரத பதாதியும், துரகப்ர வாகமும்
கால தேசங்க ளெவையும்
இனிதாய் அறிந்ததா னாபதிக ளொடுசமர்க்
கிளையாத தளகர்த் தரும்,
என்றும்வற் றாததன தானிய சமுத்திரமும்,
ஏற்றம்உள குடிவர்க் கமும்,
அனைவோரும் மெச்ச இங்கிவையெலாம் உடையபேர்
அரசராம்! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!