அண்ணி கொடுமை

bookmark

பிறந்த வீட்டில் செல்லப் பெண் அவள். ஆனால் புருஷன் வீடு போக வேண்டியவள்தானே எந்த செல்லப் பெண்ணும். பின்பு அண்ணன் மனைவிதானே வீட்டுக்கு உரிமையுடையவள். அதோடு அண்ணியாக வருபவள் குணங்கெட்ட கொடுமைக்காரியாகவும் இருந்துவிட்டால் பின் பிறந்தகத்தைப் பற்றிய ஆசை நினைவுகளைக்கூட விட்டுவிட வேண்டியதுதானே ! அவளது தந்தை இருந்த மட்டும் அபூர்வமாகப் போய் வருவாள். தந்தை இறந்த பின்பு எப்படிப் போக முடியும் அண்ணி ஆட்சி செலுத்தும் தன் பிறந்த வீட்டுக்கு? இதைக் கூறி அழுகிறாள் அவள்.

மூணுதலை வாசல்
முப்பத் தெட்டு ஆசாரம்
ஆசாரத்து உள்ளாக
அல்லி பொறந்திருக்க
அடிக்கத் துணிஞ்சாங்க
ஆள் போட்டுத் தள்ளுனாங்க
நாலு தலெ வாசல்
நாப்பத் தெட்டு ஆசாரம்
ஆசரத்து உள்ளாக
அல்லி பொறந்திருக்க
குத்தத் துணிங்சாங்க
கோல் போட்டுத் தள்ளுனாங்க

வட்டார வழக்கு: பொறந்திருக்க-பிறந்திருக்க.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
-------