அப்பனும் கிடைக்கவில்லை

bookmark

தன் புகுந்த வீட்டில் ஒரு பெண் பாடிக் கொண்டே மோர் கடைந்து கொண்டிருக்கிறாள். அவள் தந்தை இறந்து போனதாகத் தந்தி வந்தது. தான் தந்தியில் செய்தியைக் கேட்டதுமே தந்தையின் சாவுக்கு அடிக்கும் பறமேளம் தனக்கு கேட்டதாகவும், ஓடி வந்தும் தந்தையை உயிரோடு பார்க்கக் கிடைக்கவில்லையென்றும் கூறி அழுகிறாள்.

பானையிலே தயி ரெடுத்து
பாங்கான மத் தெடுத்து
பாடி கடையும் போது
பறமோளம் கேட்ட தென்ன?
யார் வீட்டு மோள மின்னும்
ஆராஞ்சி நான் பார்த்தன்
தாய் வீட்டு மோள மிண்ணும்
தந்தியிலே வந்த தெண்ணா
முந்தாணி தாரை விட்டு
முதல் மயிரைச் சிக்கொடைச்சி
அப்படியே ஓடிட்டேன்
அப்பனும் கிடைக்கவில்லை
அண்ட கதியத்தன்
அல கொலஞ்சி நிக்கரனே

வட்டார வழக்கு: பறமோளம்-சாவு வீட்டில் அடிக்கும் மேளம் ; அலகொலஞ்சி-நிலைகுலைந்து.
சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: அரூர்,தருமபுரி மாவட்டம்.
-----------