அரசியற் படலம்

அரசியற் படலம்

bookmark

பால காண்டம் 

பெருங்காப்பியங்களில் காண்டம் என்பது ஒரு பகுதியாக அமையும். ஒவ்வொரு காண்டமும் பல படலங்களை உட்பிரிவுகளாகக் கொண்டு விளங்கும். பாலகாண்டம் இருபத்து மூன்று படலங்கள் கொண்டது. பெருங்காப்பிய இலக்கணப்படி ஆறு, நாடு, நகரம் முதலாயின வருணிக்கப்படுதல் இன்றியமையாதது

பால என்பது தோற்ற வரலாற்றைக் குறிப்பதாகும். இராமனது இளவயது வாழ்வைக் குறிப்பதனால் இது பாலகாண்டம் என வழங்கப்பட்டது. பாலகாண்டம் இருபத்துநான்கு படலங்களைக் கொண்டு அமைந்துள்ளது.
 

அரசியற் படலம்

(அந்தக் கோசல நாட்டின் மன்னனான தயரதச் சக்கரவர்த்தியினது ஆட்சிச் சிறப்பைக் கூறும் பகுதி இது. தயரதனின் பெருமை- குடைச்சிறப்பு - அரசு செய்யும் திறம் ஆகியவைகளை இந்தப் படலத்தில் காணலாம். முதல் ஆறு பாடல்களால் தயரத வேந்தனது தனிப்பெருஞ்சிறப்பைக் கூறுகிறார்)

அழகும், செல்வமும் நிரம்பிய அயோத்தியா புரியை நீதி தவறாத அரசர் ஆண்டு வந்தார். அவர் அரசர்க்கு எல்லாம் அரசராக விளங்கினார். ஏழு உலகங்களிலும் அவரது புகழ் ஓங்கி இருந்தது. இந்த ராமாயணக் கதைக்கு ஒப்பற்ற தலைவராகிய இராமபிரானைக் குமாரனாகப் பெற்ற தரும சிந்தையுடையவர் அவர். உலகில் உள்ள அனைத்து அரசர்களின் நற்குணங்களை ஒன்று சேர்த்தாலும், அவரது நற் குணங்களுக்கு ஒரு போதும் ஈடாகாது. அவரிடம் தானம் வாங்காத அந்தணரும் இல்லை, அவரால் செய்யப்படாத யாகங்களும் இவ்வுலகத்தில் இல்லை. பெற்ற தாயைப் போல உலகில் உள்ள எல்லா உயிர்களின் மீதும் அன்பைப் பொழிந்தவர் அவர். எல்லா உயிர்களையும் ஏற்றத் தாழ்வு இல்லாமல், சரி சமமாகக் கருதி ஆட்சி நடத்தியவர் அவர். வீரம் என்பதின் விலை நிலம் அவர். அவர் பெயர் தான் தசரத சக்கரவர்த்தி.

ஒரு நகரத்தை ஆள்வது போல, இந்த பூமியின் பெரும் பகுதியை மிக எளிதாக ஆளுகை செய்தவர் அவர். பகை அரசர்களை தனது பாதங்களில் எளிதாக விழச் செய்யும் ஆற்றல் கொண்டவர் அவர். வானத்துச் சந்திரன் கூட தேய்ந்து போகும். ஆனால், தசரதச் சக்கரவர்த்தியின் நீதியும், புகழும் தேயாமல் வளர்ந்தது. அவற்றைக் கொண்டு மக்களின் மனதில் உள்ள இருளைப் போக்கினார். அரசன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி என்பது போல, தசரதச் சக்கரவர்த்தி நீதி தவறாமல் இருந்ததால், அந்நாட்டு மக்களும் நீதி தவறாமல் நல் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டனர்.

உலகம் முழுவதுக்கும் சூரியன் ஒருவன் தான். அது போலத் தான் உலகம் முழுவதையும் தசரதரின் செங்கோல் காத்து வந்தது. பொருள் இல்லாத ஒருவன் தனக்கு உள்ள சிறிது நிலத்தை மிக்க கருத்துடன் காப்பது போல, நீதி தவறாத தசரதச் சக்கரவர்த்தி உலகம் முழுவதையும் நன்றாக நாளும் காத்து வந்தார்!

அரசியற் படலம்

(இராமன் சுக்கிரீவனுக்கு அரசியல் பற்றிய அறிவுரைகளைக் கூறும் பகுதியை முதன்மையாகக் கொண்டு விளங்குவதால் இப்படலம் அரசியல் படலம் எனப்பட்டது. பால காண்டத்தில் தசரதனின் ஆட்சியைப் பற்றிக் கூறும் பகுதியும்அரசியல் படலம் எனப் பெயர் கொண்டது.

சுக்கிரீவனுக்கு முடிசூட்ட இராமன் இலக்குவனுக்குக் கட்டளையிட, முடிசூட்டு விழாவிற்கு வேண்டுவன கொணருமாறு இலக்குவன் அனுமனுக்கு உரைத்தனன். அங்ஙனமே அனுமன் கொணர, இலக்குவன் சுக்கிரீவனுக்கு முடி சூட்டினான். நல்லரசு புரிதற்கு வேண்டிய அறிவுரைகளை இராமன் சுக்கிரீவனுக்கு எடுத்துரைத்தான். அவற்றைச் செவிமடுத்த பின் சுக்கிரீவன் இராமனைக் கிஷ்கிந்தைக்கு அழைக்க, இராமன் மறுத்து,நான்கு திங்கள் சென்றபின் படையொடு வருக எனக் கூறினன். அதனை ஏற்ற சுக்கிரீவனும் விடைபெற்று நீங்கினான். தன்னை வணங்கிய அங்கதனுக்கும் இராமன் அறிவுரை புகன்றான்.

மாருதி இராமனுடன் இருந்து பணி செய்ய விரும்புவதாகக் கூற, அவனையும் கிஷ்கிந்தை செல்லுமாறு இராமன் பணிக்க, மாருதியும் போனான். இராமலக்குவர் வேறொரு மலையை அடைந்தனர். கிஷ்கிந்தையில் சுக்கிரீவன் செம்மையாக ஆட்சி புரிந்தான். அங்கதனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டிச் சுக்கிரீவன் இனிதாக வாழ்ந்து வந்தான்)

வாலியின் மரணத்திற்குப் பிறகு கிஷ்கிந்தாபுரி இனி அரசன் இல்லாமல் இருப்பது நல்லதில்லை என்று எண்ணினார் இராமபிரான். எனவே, அவர் லக்ஷ்மணனிடம் சுக்கிரீவனுக்கு முடி சூட்டும் படிக் கூறினார். அண்ணனின் கட்டளையை ஏற்றுக் கொண்ட லக்ஷ்மணன், அனுமனிடம் முடி சூட்டு விழாவுக்கு வேண்டியவற்றை உடனே கொண்டு வருமாறு கூறி அனுப்பினான்.

அனுமன் விரைந்து சென்று முடி சூட்டுவதற்குத் தேவையான அனைத்தையும் நொடிப் பொழுதில் கொண்டு வந்து லக்ஷ்மணனிடம் கொடுத்தான். லக்ஷ்மணன் அவைகளைக் கொண்டு முறைப்படி செய்ய வேண்டியவற்றைச் செய்த பின், சுக்கிரீவனுக்கு முடி சூட்டினான்!

அவ்வாறு முடி சூட்டிக் கொண்ட சுக்கிரீவன் இராமபிரானை வணங்கி அவரது வாழ்த்துக்களைப் பெற்றான். அக்கணம் சுக்கிரீவனை நோக்கி," வீரனே! நீ கிஷ்கிந்தைக்குச் சென்று செய்ய வேண்டிய காரியங்களை முறைப்படி செய்து, நீ ஏற்றுக் கொண்ட ஆட்சியை சிறப்புற நடத்து, எக்காலத்திலும் நேர்மையும், சத்தியமும் தவறாதே. அரசன் எந்த வழியில் நடப்பானோ, அதே வழியில் தான் மக்களும் நடப்பார்கள். அதனால் மறந்தும் அதர்ம வழியில் சென்று விடாதே. ஒவ்வொரு உயிரும் செய்யும் கருமங்களாலேயே அவ்வுயிருக்குப் பிறப்பும், இறப்பும் அமைகிறது. இது ஆன்றோர் கருத்து, அதனால் தருமத்தைக் கடக்காமல் நல்ல நெறியில் நடந்து வந்தால் நல்ல பிறப்பும், அதே தருமத்தை மீறி நடந்தால் தாழ்ந்த பிறப்பும் அமைந்து விடும். அதனால்,நீ உயர் பிறப்பு அமையும் மார்கத்தை தேடுவாயாக. நல்வினைகள் செய். உலகத்தவர் காட்சியளவையன்றி அனுமானத்தையும் மேற்கொள்கின்றார்கள். ஆதலால், பகைவரிடத்திலும் வெளிக்கு நட்பு கொண்டு சில சமயங்களில் வஞ்சனையாக நடத்தல் வேண்டும் என்று நீதி நூல்கள் கூறுகின்றன. எனவே, நீ பகைவரிடத்திலும் முகம் மலர நட்பு கொண்டு, அவர்களுடன் பழகியபடியே அவரவர் தகுதிக்கு ஏற்ப இன்னுரையையும் வழங்கு.

தேவர்களும் மயங்கத் தக்க அழகிய கிஷ்கிந்தை நகரத்தை பெற்றவனே, இன்னும் நான் சொல்வதைக் கேள். பிறர் உன்னை வைதாலும், அந்த வசைச் சொற்களை நீ கேட்டாலும் அவர்களிடம் இனிய சொற்களையே பேசு. இரப்பவர்களுக்கு உன்னால் முடிந்த அனைத்தையும் கொடு. பிறருடைய பொருளை என்றுமே அவரிடம் இருந்து பறிக்க நினைக்காதே. இது போன்ற நல்ல காரியங்களை கவனமுடன் செய்பவனே நற்கதியை அடைவான். மேலும், ஒரு அரசன் என்பவன் குடிமக்களை குழந்தையாக பாவித்து நடத்த வேண்டும். ஆனால், அதே சமயத்தில் அந்தக் குடி மக்கள் பாவ காரியங்களை செய்ய முற்படும் போது, ஒரு அரசன் என்பவன் இறக்கம் இன்றி நீதி தவறாமல் அவர்களை தண்டித்தலும் வேண்டும். உனது அதிகாரிகள், மந்திரிகள் என அனைவரும் நீ செய்யும் நன்மையைக் கண்டு உன்னை தேவர்களுக்கு நிகராக மதிக்க வேண்டும். இதுவே அரசர்களுக்கு உரியவை எனப் பெரியோர்கள் வகுத்து உள்ள சில நியதிகள். இவற்றை எல்லாம் ஆலோசித்து உனது ஆட்சியை குறை இல்லாமல் செம்மையாக நடத்துவாயாக! இனி வருவது கார் காலம். இந்த மழைக் காலம் நீங்கி, கூதிர் காலமான கார்த்திகையில் உனது சேனைகளுடன் எனது செயலைச் செய்ய வருவாயாக! இப்பொழுது செல்வாயாக!" என்று கூறினார்.

இராமபிரானின் சொற்களை கவனமுடன் கேட்ட சுக்கிரீவன்." ஐயனே! தாங்களும் என்னுடன் கிஷ்கிந்தைக்கு வருகை தர வேண்டுகிறேன்" என்றார். அது கேட்ட இராமபிரான் புன்னகையுடன் ," சுக்கிரீவா! உனது அன்புக்கு நன்றி. ஆனால், நான் நீ கேட்டுக் கொண்ட படி கிஷ்கிந்தையில் வந்து தங்கினால் என்னை உபசரிப்பதிலேயே நீ கவனம் செலுத்துவாய். உன்னால் அரசாட்சியை ஒழுங்காக கவனிக்க முடியாது.அது மட்டும் அல்ல, நான் எனது மனைவி சீதையை பறிகொடுத்து நிற்கிறேன், நான் முன் ஜென்மத்தில் செய்த வினை தான் அது. அந்த வினைகள் அனைத்தையும் நான் தவம் செய்து கழிக்க விரும்புகிறேன். இனியும் என்னை அந்த ஊழ்வினைகள் தொடர்வது நன்றோ?

மேலும் சுக்கிரீவா, சீதையைக் கொண்டு சென்ற இராவணன் அவளை எவ்வாறெல்லாம் வருத்தி வருகிறானோ! அப்படியிருக்க எனக்கு அரண்மனை சுக வாசம் தேவையா? ஒருவேளை நான் அதனை அனுபவித்தால் இந்த உலகம் என்னை பழிக்காதா? அப்படித் தான் நான் நடப்பேனோ? மேலும் எனது சிறிய தாய்க்கு, நான் பதினான்கு ஆண்டு காலமும் வன வாசத்தில் கழிப்பதாக வாக்கு அளித்து இருக்கிறேன். அப்படி இருக்கும் போது, நான் கிஷ்கிந்தையின் ராஜ வாழ்க்கையை அனுபவிப்பது நன்றோ?" என்றார்.

சூரிய குமாரனான சுக்கிரீவன் ஸ்ரீ இராமனுடைய வார்த்தைகளில் இருந்த நியாத்தைப் புரிந்து கொண்டான். எனினும் அவனது கண்கள், இராமரை அக்கணத்தில் பிரிய வேண்டியதை எண்ணிக் கலங்கின. அவ்வாறு நீர் சிந்திய கண்களுடன் இராமபிரானிடம் இருந்து சுக்கிரீவன் விடைபெற்றுக் கொண்டான்.

பிறகு அங்கதனும் இராமபிரானைத் தொழுது நின்றான். அவர் கருணையுடன் அவனை நோக்கி," நீ நல்லொழுக்கம் உடையவனாதல் வேண்டுமெனில், சுக்கிரீவனை உனது சிறிய தந்தையாகக் கொள்ளாமல் உன்னைப் பெற்ற தந்தையாகவே கருதி, அவன் சொல்லும் கட்டளையைச் செய்து வாழ வேண்டும். இதனை நீ தவறாது கைக்கொண்டு வாழ்வாயாக!" என்றார். இராமபிரானின் இந்த வார்த்தைகளைத் தனது மனதில் நன்கு பதிய வைத்துக் கொண்டான் அங்கதன். அவனும், பிறகு ஸ்ரீ ராமனிடம் இருந்து விடைப்பெற்றுக் கொண்டு கிஷ்கிந்தைக்குச் சென்றான்.

பின்பு அனுமானைப் பார்த்து இராமர்," மிக்க அழகுடைய வீரனே! நீயும் சென்று உனது அறிவினால் சுக்கிரீவனின் அரசாட்சிக்கு வேண்டிய காரியங்களைச் செய்து வாழ்வாயாக" என்றார்.

அதற்கு அனுமான், " பிரபுவே, நான் தங்களை விட்டு எப்படிப் பிரிவேன். பேசாமல் தங்களுடனேயே இருந்து, தங்களுக்கு வேண்டிய பணி விடைகளைச் செய்து மகிழ்கிறேனே" என்றான்.

அது கேட்ட ஸ்ரீ ராமர் அனுமனிடம்," அனுமான் ஒரு ராஜ்யத்தை திறம் பட நடத்துவது சாதராண விஷயம் அல்ல. அதுமட்டும் அல்ல அறிவு, ஆண்மை, பெருமை ஆகிய மூன்று திறைமைகளும் கொண்ட ஒருவனது அரசை மற்றொருவன் தனது வலிமையால் பெற்றால், அங்கே நன்மைகள் மட்டும் அல்லாமல் தீமைகளும் விளையும். அவ்வரசு உன்னைப் போன்ற பேரறிவு படைத்தவர்களாலேயே நிலை பெற்று இருக்கும். ஆகவே, நீ சென்று சுக்கிரீவனுக்குத் துணையாக அவனது அரசை பாதுகாப்பாயாக! பின்பு நான் சொல்லிய காலத்தில் எனது செயல் முடிக்க வருவாயாக! உன்னைப் போன்ற தருமன் யாருமே இல்லை!" என்றார்.

அது கேட்ட அனுமான், இராமனின் கட்டளையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக அவரை வணங்கி விடை பெற்று கிஷ்கிந்தைக்கு சென்றான். அனுமன் சென்றதும், இராமபிரான் தம்பி லக்ஷ்மணனுடன் அங்கிருந்து புறப்பட்டு வேறொரு மலைக்குச் சென்று சேர்ந்தார். வாலியும், இராமரும் கூறிய அறிவுரைப்படி சுக்கிரீவன் கிஷ்கிந்தையை நன்கு ஆட்சி செய்தான்!

இராமர் சென்று சேர்ந்த மலையின் ஒரு பக்கத்தில் மாலியவான் என்னும் இடத்தில் அவர் லக்ஷ்மணனுடன் வசித்து வந்தார்!

தயரதன் மாண்பு

அம் மாண் நகருக்கு அரசன் அரசர்க்கு அரசன்;

செம் மாண் தனிக் கோல் உலகு ஏழினும் செல்ல நின்றான்;

இம் மாண் கதைக்கு ஓர் இறை ஆய இராமன் என்னும்

மொய்ம் மாண் கழலோன் - தரு நல் அற மூர்த்தி அன்னான்.

ஆதிம் மதியும், அருளும், அறனும், அமைவும்,

ஏதில் மிடல் வீரமும், ஈகையும், எண் இல் யாவும்,

நீதிந் நிலையும், இவை, நேமியினோர்க்கு நின்ற

பாதி; முழுதும் இவற்கே பணி கேட்ப மன்னோ.

மொய் ஆர்கலி சூழ் முது பாரில், முகந்து தானக்

கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;

மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்த்த, யாரும்

தாய் ஒக்கும் அன்பின்; தவம் ஒக்கும் நலம் பயப்பின்;

சேய் ஒக்கும், முன் நின்று ஒரு செல் கதி உய்க்கும் நீரால்;

நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும்; நுணங்கு கேள்வி

ஆயப் புகும்கால், அறிவு ஒக்கும்;-எவர்க்கும், அன்னான்.

ஈந்தே கடந்தான், இரப்போர் கடல்; எண் இல் நுண் நூல்

ஆய்ந்தே கடந்தான், அறிவு என்னும் அளக்கர்; வாளால்

காய்ந்தே கடந்தான், பகை வேலை; கருத்து முற்றத்

தோய்ந்தே கடந்தான், திருவின் தொடர் போக பௌவம்.

வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர்

உள்ளமும், ஒரு வழி ஓட நின்றவன்;

தள்ள அரும் பெரும் புகழ்த் தயரதப் பெயர்

வள்ளல்; வள் உறை அயில் மன்னர் மன்னனே.

உலகமனைத்தையும் ஒரு குடைக் கீழ் ஆள்பவன்

நேமி மால் வரை மதில் ஆக, நீள் புறப்

பாம மா கடல் கிடங்கு ஆக, பல் மணி

வாம மாளிகை மலை ஆக, மன்னற்குப்

பூமியும் அயோத்தி மா நகரம் போலுமே.

பாவரும் வன்மை நேர் எறிந்து தீட்டலால்

மே வரும் கை அடை வேலும் தேயுமால்;

கோவுடை நெடு மணி மகுட கோடியால்

சேவடி அடைந்த பொன் கழலும் தேயுமால்.

தயரதனின் குடையும் செங்கோலும்

மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து, தேய்வு இன்றி,

தண் நிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும்,

அண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான்,

விண்ணிடை மதியினைமிகை இது என்பவே.

தயரதன் அரசு செய்யும் திறம்

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,

உயிர் எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்,

செயிர் இலா உலகினில், சென்று, நின்று, வாழ்

உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பும் ஆயினான்.

குன்றென உயரிய குவவுத் தோளினான்,

வென்றி அம் திகிரி, வெம் பருதியாம் என,

ஒன்றென உலகிடை உலாவி, மீமிசை

நின்று, நின்று, உயிர்தொறும் நெடிது காக்குமே.

எய் என பழு பகை எங்கும் இன்மையால்,

மொய் பெறாத் தினவு உறு முழவுத் தோளினான்,

வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்

செய் எனக் காத்து, இனிது அரசு செய்கின்றான்.

விரிகதிர் பரப்பி, மெய்ப் புவனம் மீது இருள்

பருகுறும் பரிதி அம் குலத்தில், பார்த்திபன்

இரகு, மற்று அவன் மகன் அயன் என்பான், அவன்

பெருகு மா தவத்தினில் பிறந்த தோன்றலே.

இராமன் சுக்கிரீவனுக்கு முடி சூட்டுமாறு இளவலைப் பணித்தல்

புதல்வன் பொன் மகுடம் பொறுத்தலால்,

முதல்வன், பேர் உவகைக்கு முந்துவான்,

உதவும் பூமகள் சேர, ஒண் மலர்க்

கதவம் செய்ய கரத்தின் நீக்கினான்.

அது காலத்தில், அருட்கு நாயகன்,

மதி சால் தம்பியை வல்லை ஏவினான்-

கதிரோன் மைந்தனை, ஐய! கைகளால்,

விதியால் மௌலி மிலைச்சுவாய் எனா,

முடிசூட்டுதற்கு வேண்டுவன கொணர அனுமனை ஏவ, அவன் அவ்விதம் செய்தல்

அப்போதே, அருள் நின்ற அண்ணலும்,

மெய்ப் போர் மாருதிதன்னை,வீர! நீ,

இப்போதே கொணர்க, இன்ன செய் வினைக்கு

ஒப்பு ஆம் யாவையும் என்று உணர்த்தலும்,

மண்ணும் நீர் முதல் மங்கலங்களும்,

எண்ணும் பொன் முடி முதல யாவையும்,

நண்ணும் வேலையில், நம்பி தம்பியும்,

திண்ணம் செய்வன செய்து, செம்மலை,

சுக்கிரீவனுக்கு முடி சூட்டுதல்

மறையோர் ஆசி வழங்க, வானுளோர்

நறை தோய் நாள்மலர் தூவ, நல் நெறிக்கு

இறையோன் தன் இளையோன், அவ் ஏந்தலை,

துறையோர் நூல் முறை மௌலி சூட்டினான்.

தன்னை வணங்கிய சுக்கிரீவனுக்கு இராமனின் அறிவுரை

பொன் மா மௌலி புனைந்து, பொய் இலான்,

தன் மானக் கழல் தாழும் வேலையில்,

நன் மார்பில் தழுவுற்று, நாயகன்,

சொன்னான், முற்றிய சொல்லின் எல்லையான்;

ஈன்டுநின்று ஏகி, நீ நின் இயல்பு அமை இருக்கை எய்தி,

வேண்டுவ மரபின் எண்ணி, விதி முறை இயற்றி, வீர!

பூண்ட பேர் அரசுக்கு ஏற்ற யாவையும் புரிந்து, போரில்

மாண்டவன் மைந்தனோடும் வாழ்தி, நல் திருவின் வைகி.

வாய்மை சால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும்,

தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத் தொழில் மறவரோடும்,

தூய்மை சால் புணர்ச்சி பேணி, துகள் அறு தொழிலை ஆகி,

சேய்மையோடு அணிமை இன்றி, தேவரின் தெரிய நிற்றி.

"புகை உடைத்து என்னின், உண்டு பொங்கு அனல் அங்கு" என்று உன்னும்

மிகை உடைத்து உலகம்; நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே;

பகையுடைச் சிந்தையார்க்கும், பயன் உறு பண்பின் தீரா

நகையுடை முகத்தை ஆகி, இன் உரை நல்கு, நாவால்.

தேவரும் வெஃகற்கு ஒத்த செயிர் அறு செல்வம் அஃது உன்

காவலுக்கு உரியது என்றால், அன்னது கருதிக் காண்டி;

ஏ வரும் இனிய நண்பர், அயலவர், விரவார், என்று இம்

மூவகை இயலோர் ஆவர், முனைவர்க்கும் உலக முன்னே.

செய்வன செய்தல், யாண்டும் தீயன சிந்தியாமை,

வைவன வந்தபோதும் வசை இல இனிய கூறல்,

மெய்யன வழங்கல், யாவும் மேவின வெஃகல் இன்மை,

உய்வன ஆக்கித் தம்மோடு உயர்வன; உவந்து செய்வாய்.

சிறியர் என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல்; மற்று, இந்

நெறி இகழ்ந்து, யான் ஓர் தீமை இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,

குறியது ஆம் மேனி ஆய கூனியால், குவவுத் தோளாய்!

வெறியன எய்தி, நொய்தின் வெந் துயர்க் கடலின் வீழ்ந்தேன்.

"மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்" என்றல்,

சங்கை இன்று உணர்தி; வாலி செய்கையால் சாலும்; இன்னும்,

அங்கு அவர் திறத்தினானே, அல்லலும் பழியும் ஆதல்

எங்களின் காண்டி அன்றே; இதற்கு வேறு உவமை உண்டோ ?

"நாயகன் அல்லன்; நம்மை நனி பயந்து எடுத்து நல்கும்

தாய" என, இனிது பேணி, தாங்குதி தாங்குவாரை;

ஆயது தன்மையேனும், அறவரம்பு இகவா வண்ணம்,

தீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை.

இறத்தலும் பிறத்தல்தானும் என்பன இரண்டும், யாண்டும்,

திறத்துளி நோக்கின், செய்த வினை தரத் தெரிந்த அன்றே?

புறத்து இனி உரைப்பது என்னே? பூவின்மேல் புனிதற்கேனும்,

அறத்தினது இறுதி, வாழ்நாட்கு இறுதி; அஃது உறுதி, அன்ப!

ஆக்கமும், கேடும், தாம் செய் அறத்தொடு பாவம் ஆய

போக்கி, வேறு உண்மை தேறார், பொரு அரும் புலமை நூலோர்;

தாக்கின ஒன்றோடு ஒன்று தருக்குறும் செருவில், தக்கோய்!

பாக்கியம் அன்றி, என்றும், பாவத்தைப் பற்றலாமோ?

சுக்கிரீவனிடம் மாரிக் காலம் சென்ற பின், சேனையோடும் வருமாறு இராமன் கூறல்

"இன்னது தகைமை" என்ப, இயல்புளி மரபின் எண்ணி,

மன் அரசு இயற்றி, என்கண் மருவுழி மாரிக் காலம்

பின்னுறு முறையின், உன் தன் பெருங் கடற் சேனையோடும்

துன்னுதி; போதி என்றான், சுந்தரன். அவனும் சொல்வான்:

சுக்கிரீவன் இராமனைக் கிட்கிந்தையில் வந்து வசிக்க வேண்டுதலும், இராமன் மறுத்துரைத்தலும்

"குரங்கு உறை இருக்கை" என்னும் குற்றமே குற்றம் அல்லால்,

அரங்கு எழு துறக்க நாட்டுக்கு அரசு எனல் ஆகும் அன்றே,

மரம் கிளர் அருவிக் குன்றம்; வள்ளல்! நீ, மனத்தின் எம்மை

இரங்கிய பணி யாம் செய்ய, இருத்தியால், சில் நாள், எம்பால்.

அரிந்தம! நின்னை அண்மி, அருளுக்கும் உரியேம் ஆகி,

பிரிந்து, வேறு எய்தும் செல்வம் வெறுமையின் பிறிது அன்றாமால்;

கருந் தடங் கண்ணினாளை நாடல் ஆம் காலம்காறும்

இருந்து, அருள் தருதி, எம்மோடு என்று, அடி இணையின் வீழ்ந்தான்.

ஏந்தலும், இதனைக் கேளா, இன் இள முறுவல் நாற,

வேந்து அமை இருக்கை, எம்போல் விரதியர் விழைதற்கு ஒவ்வா;

போந்து அவண் இருப்பின், எம்மைப் போற்றவே பொழுது போமால்;

தேர்ந்து, இனிது இயற்றும் உன் தன் அரசியல் தருமம் தீர்தி.

ஏழ் - இரண்டு ஆண்டு, யான் போந்து எரி வனத்து இருக்க ஏன்றேன்;

வாழியாய்! அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன்;

பாழி அம் தடந் தோள் வீர! பார்த்திலைபோலும் அன்றே!

யாழ் இசை மொழியோடு அன்றி, யான் உறும் இன்பம் என்னோ?

"தேவி வேறு அரக்கன் வைத்த சேமத்துள் இருப்ப, தான் தன்

ஆவிபோல் துணைவரோடும் அளவிடற்கு அரிய இன்பம்

மேவினான், இராமன்" என்றால், ஐய! இவ் வெய்ய மாற்றம்,

மூவகை உலகம் முற்றும் காலத்தும், முற்ற வற்றோ?

இல்லறம் துறந்திலாதோர் இயற்கையை இழந்தும், போரின்

வில் அறம் துறந்தும், வாழ்வேற்கு, இன்னன, மேன்மை இல்லாச்

சில் அறம்; புரிந்து நின்ற தீமைகள் தீருமாறு,

நல் அறம் தொடர்ந்த நோன்பின், நவை அற நோற்பல் நாளும்.

நான்கு திங்கள் சென்றபின் சேனையுடன் வருக என இராமன் கூறுதல்

அரசியற்கு உரிய யாவும் ஆற்றுழி ஆற்றி, ஆன்ற

கரை செயற்கு அரிய சேனைக் கடலொடும், திங்கள் நான்கின்

விரசுக, என்பால்; நின்னை வேண்டினென், வீர! என்றான் -

உரை செயற்கு எளிதும் ஆகி, அரிதும் ஆம் ஒழுக்கில் நின்றான்.

சுக்கிரீவன் இராமனை வணங்கிச் செல்லுதல்

மறித்து ஒரு மாற்றம் கூறான்,வான் உயர் தோற்றத்து அன்னான்

குறிப்பு அறிந்து ஒழுகல் மாதோ, கோது இலர் ஆதல் என்னா;

நெறிப் பட, கண்கள் பொங்கி நீர் வர, நெடிது தாழ்ந்து,

பொறிப்ப அருந் துன்பம் முன்னா, கவி குலத்து அரசன் போனான்.

தன்னை வணங்கிய அங்கதனுக்கு இராமனின் அறிவுரை

வாலி காதலனும் ஆண்டு, மலர் அடி வணங்கினானை,

நீல மா மேகம் அன்ன நெடியவன், அருளின் நோக்கி,

சீலம் நீ உடையை ஆதல், இவன் சிறு தாதை என்னா,

மூலமே தந்த நுந்தை ஆம் என, முறையின் நிற்றி.

என்ன, மற்று இனைய கூறி,ஏகு அவன்-தொடர என்றான்;

பொன் அடி வணங்கி, மற்று அப் புகழுடைக் குரிசில் போனான்;

பின்னர், மாருதியை நோக்கி,பேர் எழில் வீர! நீயும்,

அன்னவன் அரசுக்கு ஏற்றது ஆற்றுதி, அறிவின் என்றான்.

நான் இங்கிருந்து அடிமை செய்வேன் என அனுமன் கூறல்

பொய்த்தல் இல் உள்ளத்து அன்பு பொழிகின்ற புணர்ச்சியாலும்,

இத் தலை இருந்து, நாயேன், ஏயின எனக்குத் தக்க

கைத் தொழில் செய்வேன் என்று, கழல் இணை வணங்கும் காலை,

மெய்த் தலை நின்ற வீரன், இவ் உரை விளம்பி விட்டான்:

அனுமனைக் கிட்கிந்தைக்குச் செல்லுமாறு, இராமன் உரைத்தல்

நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற

வரம்பு இலாததனை, மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால்,

அரும்புவ, நலனும் தீங்கும்; ஆதலின், ஐய! நின்போல்

பெரும் பொறை அறிவினோரால், நிலையினைப் பெறுவது அம்மா!

ஆன்றவற்கு உரியது ஆய அரசினை நிறுவி, அப்பால்,

ஏன்று எனக்கு உரியது ஆன கருமமும் இயற்றற்கு ஒத்த

சான்றவர், நின்னின் இல்லை; ஆதலால், தருமம்தானே

போன்ற நீ, யானே வேண்ட, அத் தலை போதி என்றான்.

அனுமன் கிட்கிந்தை செல்ல, இராம இலக்குவர் வேறு ஓர் மலைக்குச் செல்லுதல்

ஆழியான் அனைய கூற,ஆணை ஈது ஆயின், அஃதே,

வாழியாய்! புரிவென் என்று வணங்கி, மாருதியும் போனான்;

சூழி மால் யானை அன்ன தம்பியும், தானும் தொல்லை

ஊழி நாயகனும், வேறு ஓர் உயர் தடங் குன்றம் உற்றார்.

சுக்கிரீவன் அரசு செய்து, இனிது இருத்தல்

ஆரியன் அருளின் போய்த் தன் அகல் மலை அகத்தன் ஆன

சூரியன் மகனும், மானத் துணைவரும், கிளையும், சுற்ற,

தாரையை வணங்கி, அன்னாள் தாய் என, தந்தை முந்தைச்

சீரியன் சொல்லே என்ன, செவ்விதின் அரசு செய்தான்.

வள அரசு எய்தி, மற்றை வானர வீரர் யாரும்

கிளைஞரின் உதவ, ஆணை கிளர் திசை அளப்ப, கேளோடு,

அளவு இலா ஆற்றல் ஆண்மை அங்கதன், அறம் கொள் செல்வத்து

இளவரசு இயற்ற, ஏவி, இனிதினின் இருந்தான், இப்பால்.

வள்ளலும், அவண் நின்று ஏகி, மதங்கனது இருக்கை ஆன

வெள்ள வான் குடுமிக் குன்றத்து ஒரு சிறை மேவி, மெய்ம்மை

அள்ளுறு காதல் தம்பி, அன்பினால் அமைக்கப்பட்ட

எள்ளல் இல் சாலை எய்தி, இனிதினின் இருந்த காலை,