அவள் குறை

bookmark

அவள் விதவை. அவளது துன்பங்களைச் சொல்லி அழுதால் மரமும் உருகும் ; பறவைகளும் கண் கலங்கும். என்ன குறையென்று அவள் சொல்லா விட்டாலும், விதவைக்கு நேரும் சமூகக் கொடுமைகளையும் குடும்பத் துன்பங்களையும், பல நாட்டுப் பாடல் மூலம் நாம் அறிந்துள்ளோமல்லவா?

பூ மரத்துக் கீழ் நின்னு
பொங் கொறை சொல்லி அழுதா
பூ மரத்து மேலிருக்கும்
புறாவும் இறை உண்ணாது
மாமரத்துக் கீழ நிண்ணு
மங்க குறை சொல்லி அழுதா
மாமரத்து மேலிருக்கும்
மயிலும் இறை உண்ணாது.

வட்டார வழக்கு : பொங்கொறை-பெண் குறை.
உதவியவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்
----------

மேல் கூறிய கருத்துக் கொண்ட வேறு இரண்டு பாடல்கள் பின்வருமாறு :

எட்டு மலைக் கந்தாண்ட
ஈசுவரன் கோயில், அங்கே
ஈசுவரன் கோயிலிலே
இலந்தை படர்ந்திருக்கும்
இலந்தைப் பழம் உண்ண வரும்
எண்ணாயிரம் பச்சைக் கிளி
எங்கொறையைச் சொன்னாலே
இலந்தைப் பழம் உண்ணலையே-என்
எண்ணங்களும் நீங்கலையே
பத்துமலைக் கந்தாண்ட
பரமசிவன் கோயிலண்ட
பாவை படர்ந்திருக்கும்
பழுத்தும் போப் பழமிருக்கும்
பாவைப் பழம் உண்ண வரும்
பத்தாயிரம் பச்சைக்கிளி
பாவி என் குறைக்கேட்டு
பாவைப் பழம் உண்ணலையோ-என்னுடைய
பாதரவும் நீங்கலையே

வட்டார வழக்கு : பாவை-பாகல் ; கொறை-குறை.
உதவியவர் : கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.