ஆற்று நீர் - தண்ணிக்குத் தீட்டில்லை

மேல் ஜாதிக்காரர்களுக்குக் குடி தண்ணீர் எடுக்க ஒரு கிணறும், கீழ் ஜாதிக்காரர்களுக்குத் தண்ணீர் எடுக்க ஒரு கிணறுமாக ஒதுக்கி வைத்திருப்பதை நாம் இன்றும்- ஒரு காந்திஜியும், வினோபாஜியும் தங்கள் வாழ்நாளை தீண்டாமை ஒழிப்புக்காகச் செலவு செய்த பின்னரும் அப்படியே இருப்பதைக் காண்கிறோம். மனிதன் செயற்கையாகச் செய்து கொண்ட கிணற்றில்தான் இந்தத் தீண்டாமை இருக்கிறது. அதேபொழுது இயற்கை படைத்த ஆறுகளில் எவ்விதத் தடையுமின்றி எல்லோரும் நீர் எடுப்பதையும் பார்க்கிறோம்.
தண்ணிருக்குத் தீட்டில்லை. பார்ப்பனர் முதல் பறையர் வரை, தோட்டி முதல் தொண்டைமான் வரை தெய்வமாகத் தொழுவதும் பச்சைத் தண்ணீரையே. ஆனால், அந்தப் பச்சைத் தண்ணீரே சில சமயங்களில் தீராத பகையை மூட்டுவதற்குக் காரணமாகி விடுகிறது-எப்பொழுது? அது கிணற்றில் கிடக்கும் பொழுது. ஆற்றில் ஓடும்பொழுதோ அது எல்லோருக்கும் தெய்வமாக, தீண்டாமைத் தீயைக் கடக்கும் பாலமாக அமைந்து விடுகிறது. இதைப் பற்றி, காதலன் காதலிக்குக் கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. இதில் சித்தர்களின் ஜாதி மறுப்புக் கொள்கையுடன் ஒப்புமையுள்ள கருத்துக்கள் கூறப்படுவதைக் காணுகிறோம்.
கரை புரண்டு ஓடுதம்மா-அந்த
காவிரியில் தண்ணி யெங்கும்
நெளி நெளியா ஓடுதம்மா-அந்த
நீல வண்ணத் தண்ணி யெல்லாம்
சுழி சுழியா ஓடுதம்மா-அந்த
சுத்தமான ஆத்துத் தண்ணி
வெயிலடிக்கும் நேரமெல்லாம்-தண்ணி
வெள்ளி போல மின்னுதடி.
குடிதண்ணியும் குளி தண்ணியும்-கண்மணியே
குடம் குடமா எடுப்பாங்களாம்.
தண்ணிக்கொரு தீட்டு மில்லை-கண்ணே யதைத்
தடுக்க ஒரு நாதியில்லை
பாப்பானுக்கு பச்சைத்தண்ணி-கண்மணியே
பறையனுக்கும் பச்சைத்தண்ணி
பட்டிக்காட்டில் பல சாதியாம்-கண்மணியே
பறையன் முதல் பாப்பான் வரை
தோட்டி முதல் தொண்டமான் வரை-கண்மணியே
தொழுந் தண்ணி பச்சைத்தண்ணி
சண்டையிழுப்பதுவும்-கண்மணியே
சாதிக்குள்ளே பச்சைத் தண்ணி
தெய்வம்போல இருக்குந்தண்ணி-கண்மணியே
திசையோடும் பச்சைத் தண்ணி
உதவியவர்: பாவாயி
சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: செருக்கலைப்புதூர், சேலம் மாவட்டம்.
-----------------