இங்கிலீசுக்காரியாலே இறந்தாரே நம்ம துரை

சிவகிரி ஜமீன்தார் ஒரு இங்கிலீஷ்காரியின் உறவால் நோய்வாய்ப்பட்டுக் கடைசியில் இறந்து போனார். அவளுக்கு ராணிப்பட்டம் வேண்டும் என்று கேட்டாளென்றும், அது முறையல்லவென்று சொன்ன பின்பு அவள் கோபித்தாளென்றும் இப்பாடல் கூறுகிறது. அவருடைய மறைவுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு வருங்கால ஜமீன்தாருக்குப் புத்தியும் புகட்டுகிறது இப்பாட்டு.
கண்ணு முழியழகர்
கருப்புக் கோட்டித் தானழகர்
பூடுசுக் காலழகர்-இந்தப்
பூலோகம் எல்லாம் கண்டதில்லை
சிவகிரி மகாராஜா-நம்ம
செல்லத்துரைப் பாண்டியர்
தங்கக் குணக்காரர்-அவர்
எங்கும் புகழானவர்
பந்தயக் குதிரை ஏறி-அவர்
பட்டணங்கள் சுத்தையிலே
எதிர்பார்த்த பெண்கள்-அதை
எண்ணவும் முடியாதய்யா
சிவகிரி மகாராஜா-நம்ம
செல்லத்துரைப் பாண்டியர்
தங்கக் குணக்காரர்-அவர்
எங்கும் புகழானவர்
ஏழாம் திருநாளாம்
எண்ணக் காம்பு மண்டபமாம்
கண்ணாடிச் சப்பரத்தை-நம்மதுரை
கண் குளிரப் பார்க்கலாமே
சிவகிரி மகாராஜா-நம்ம
செல்லத் துரைப் பாண்டியர்
தங்கக் குணக்காரர்-அவர்
எங்கும் புகழானவர்
ஐயா வட புறமாம்
அம்மையாத்தா தென் புறமாம்
ஊடே வர குணராம்
உயர்ந்ததொரு கோபுரமாம்
சிவகிரி மகாராஜா-நம்ம
செல்லத்துரைப் பாண்டியர்
ஈசன் விதியாலே
மோசம் வரலாச்சுதே
சென்ட்ரல் ஆஸ்பத்திரியில்-அவர்
சீக்காய் இருக்கையிலே
பட்டணத்து டாக்டரும்
பாங்குடனே வந்தல்லவோ
கையைப் புடிச்சுப் பார்க்க
தோஷம் பிறந்திருச்சே
பீரங்கிச் சத்தம் கேட்டு
பெஞ்சுத் துரை மாரெல்லாம்
ஏறி வந்த மொட்டக்காராம்
எண்ணத் தொலையல்லே
தடிச்சுழுத வய
தடிச்சதொரு பொய்ச் செலந்தி
மாயச் செலந்தி வந்து
மாண்டாரே நம்ம துரை
ஆடழுக மாடழுக
மாடப் புறா தானழுக
சிவகிரி ஜனங்கள் எல்லாம்
தெருத் தெருவாக நின்னழுக
வாடகை மோட்டார்க் காராம்
வந்து கிடைத்தல்லோ
சிவகிரி மகாராஜா
செத்த வுடனே யல்லோ
சுப்பையா கோயிலோரம்
சூறாவளி மங்களாவாம்
கெட்டிடங்கள் சீரில்லைனு
இடிச்சு கட்ட உத்தரவு.
டொப்பி சொகுசழகர்
துரைமார் பெரிய இடங்கள்
இங்கிலீசுக் காரியாலே
இறந்தாரே நம்ம துரை
பட்டணத்து சைசுலேயே
பாங்குடனே சேக்கு வெட்டி
சீவி விட்ட சிங்காரத்தை-இந்த
சீமை எங்கும் பார்த்ததில்லை
காணிக்கை கருவேலம் போல்
கண்டுதித்த பாண்டியரே
இறக்க கோடு விட்டு
ராணிப்பட்டம் கேக்காரே.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி,நெல்லை.
-----------