இடம்

காதலர்கள் கணவன் மனைவியராகி விட்டனர். ஒரு நாள் ஊரையடுத்துள்ள ஓரிடத்துக்குப் போகிறார்கள். அங்கே அவர்களுடைய காதல் கேளிக்கைகளுக்குச் சாட்சியாகவிருந்த இடமும், மரங்களும் எதிர்ப்படுகின்றன. இருவரும் மகிழ்ச்சியோடு அவ்விடங்களைப் பார்த்து பாடத் தொடங்குகிறார்கள். இன்று அவர்கள் இணைபிரியாத இல்லறத்தாராகி விட்டார்கள். ஆனால், அவர்களைப் பிணைத்து வைத்த தோட்டம் பாழாகக் கிடக்கிறது. அதன் கடமை முடிந்துவிட்டது. இனி அவர் வாழ்க்கையில் அந்த இடம் ஒரு புனித நினைவாக மட்டுமே எஞ்சி நிற்கும்.
கணவன்:
பூசர மரத்துத் தோட்டம்
பொன்னுங்கிளி பார்க்கும் தோட்டம்
அன்னா தெரியுது பார்
அன்னக் கிளி காக்கும் தோட்டம்
மனைவி: ஏழு புளிய மரம்
எதிராகவே வேப்பமரம்
சந்து புளிய மரம்
சாமி வந்து நிற்கும் மரம்
இருவரும்:
கூடி இருந்த இடம்
கும்மச் சரம் போட்ட இடம்
வாழப்பழம் தின்ன இடம்
பாழாக் கிடக்குது பார்
வட்டார வழக்கு: பூசர மரம்-பூவரச மரம் (நெல்லைப் பேச்சு); பார்க்கும்-காவல் காக்கும்; கும்மச்சரம்-கும்மாளம்; அன்னா-அதோ.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
--------------