இந்த நாவல்பழம் எத்தனை ருசியாக இருக்கிறது!

bookmark

  குருவுக்கு வயசாகிவிட்டது. மரணப் படுக்கையில் இருக்கிறார். அப்போது உடன் இருந்த சீடர்களை அழைத்து, அவர்களிடம் இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன் என்று கூறிவிட்டார். சீடர்களுக்கு கவலை. விஷயம் கேள்விப்பட்டவுடன் நண்பர்கள் பலரும், வேறு சிஷ்யர்களும் மாலைக்குள் ஆசிரமத்துக்கு வந்துவிட்டனர்.

  மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ஏய்… என்ன மடத்தனம் பண்ணுகிறாய்… குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு? என்றனர் மற்றவர்கள்.

  மூத்த சீடர், குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் செல்கிறேன்! என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

எல்லோரும் கவலையோடிருந்தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார்.

  மூத்த சீடர் வந்ததும், வந்து விட்டாயா… எங்கே நாவல்பழம்? என்றார். அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி, மலர்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டார்.

  ஒரு சீடர் குருவிடம், குருவே… தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே? என்றார். குரு சிரித்தபடி, என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை! என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து சாப்பிட தொடங்கிவிட்டார்.

  இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதி உபதேசம் என்ன? என்று கேட்டார்.

  எல்லோரும் அவர் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். குரு சிரித்தபடி, இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது, என்று சொல்லிவிட்டு தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்!

  சீடருக்கு அவர் சொல்லாமல் சொல்லித்தந்த பாடம், வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து, ருசித்து வாழப் பழகுங்கள்.