இருபத்தைந்தாம் அதிகாரம்

bookmark

25. பரத்தையிற் பிரிவு

பேரின்பக் கிளவி
பரத்தையிற் பிரிதல் எண்ணா(று) ஒன்றும்
உரைத்த சிவானந்தம் உற்றது வாம்பின்
எப்பதம் எவ்வுயிர் எவ்வுல(கு) யாவும்
அப்படி யேகண்(டு) அறிவு பூரணம்
ஆகி நின்(று) அளவில் அனுபவம் பெற்று
நின்ற தன்மை நிலைமை உரைத்தது.

1. கண்டவர் கூறல்

உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரஓருங்கே
எடுத்தணி கையே றினவளை ஆர்ப்ப இளமயிலேர்
கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலர் அம்பு
அடுத்தணி வாள்இளை யோர்சுற்றும் பற்றினர் மாதிரமே. ... 352

கொளு
உரத்தகு வேலோன் பரத்தையிற் பிரியத்
திண்தேர் வீதியில் கண்டோர் உரைத்தது.

(பத்தியிடத்தும் விதியுண்டோ என்று தம் அடியாருள்ளே நினைந்தது என்பது பேரின்பப்பொருள்)

2. பொறை உவந்து உரைத்தல்

சுரும்புறு கொன்றையன் தொல்புலி யூர்சுருங் கும்மருங்குல்
பெரும்பொறை யாட்டியை யென்இன்று பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யூரன் கலந்தகன் றானென்று கண்மணியும்
அரும்பொறை யாகும்என் ஆவியும் தேய்வுற்(று) அழிகின்றதே. ... 353

கொளு
கள்ளவிழ்க் கோதையைக் காதல் தோழி
உள்ளவிழ் பொறைகண்(டு) உவந்து ரைத்தது.

(அருளே சிவப்பொறை அறிந்து உரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

3. பொதுப்படக் கூறி வாடி யழுங்கல்

அப்புற்ற சென்னியன் தில்லை உறாரின் அவர்உறுநோய்
ஒப்புற்று எழில்நலம் ஊரன் கவரஉள் ளும்புறம்பும்
வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம் மெல்லணை யேதுணையாச்
செப்புற்ற கொங்கையர் யாவர்கொல் ஆருயிர் தேய்பவரே. ... 354

கொளு
பொற்றிகழ் அரவன் மற்றிகழ் தில்லைப்
பிரிந்த ஊரனோ(டு) இருந்துவா டியது.

(இன்பமுயிர் விதிஎண்ணி இரங்கியது என்பது பேரின்பப்பொருள்)

4. கன விழந்து உரைத்தல்

தேவா சுரர்இறைஞ் சும்கழ லோன்தில்லை சேரலர்போல்
ஆவாகனவும் இழந்தேன் நனவென்(று) அமளியின்மேல்
பூவார் அகலம்வந்(து) ஊரன் தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன் விழித் தேன்அரும் பாவியனே. ... 355

கொளு
சினவில் தடக்கைத் தீம்புனல் ஊரனைக்
கனவில் கண்ட காரிகை உரைத்தது.

(மறந்தும் உயிரின் பகலாதென்றது என்பது பேரின்பப்பொருள்)

5. விளக்கொடு வெறுத்தல்

செய்ம்முக நீல மலர்தில்லைச் சிற்றம் பலத்தரற்குக்
கைம்முகங் கூம்பக் கழல்பணி யாரிற் கலந்தவர்க்குப்
பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தம்அன்(று) என்றில்லையே
நெய்ம்முக மாந்தி இருள்முகங் கீழும் நெடுஞ்சுடரே. ... 356

கொளு
பஞ்சணைத் துயின்ற பஞ்சின் மெல்லடி
அன்பனோ(டு) அழுங்கிச் செஞ்சுடர்க்(கு) உரைத்தது.

(இன்பம் சுடரோடு இரங்கி உரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

6. வாரம் பகர்ந்து வாயில் மறுத்துரைத்தல்

பூங்குவ ளைப்பொலி மாலையும் ஊரன்பொற் றோளிணையும்
ஆங்கு வளைத்துவைத் தாரேனும் கொள்கநள் ளார் அரணம்
தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச் சிற்றம் பலத்தயல்வாய்
ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத் தோம்மன் உறாவரையே. ... 357

கொளு
வார்புன லூரன் ஏர்திகழ் தோள்வயின்
கார்புரை குழலி வாரம் பகர்ந்தது.

(இன்புயிரன்பே எடுத்துரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

7. பள்ளியிடத்து ஊடல்

தவஞ்செய் திலாதவெந் தீவினை யேம்புன்மைத் தன்மைக்(கு)எள்ளா(து)
எவம்செய்து நின்(று)இனி இன்(று)உனை நோவ(து)என் அத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை யூரநின் சேயிழையார்
நவம்செய்த புல்லங்கள் மாட்டேம் தொடல்விடு நற்கலையே. ... 358

கொளு
பீடிவர் கற்பின் தோடிவர் கோதை
ஆடவன் தன்னோ(டு) ஊடி உரைத்தது.

(இன்பம் இகழ்தல் அன்பெனக்கண்டது என்பது பேரின்பப்பொருள்)

8. செவ்வணி விடுக்க இல்லோர் கூறல்

தணியுறப் பொங்கும்இக் கொங்கைகள் தாங்கித் தளர்மருங்குல்
பிணியுறப் பேதைசென்(று) இன்றெய்து மால்அர வும்பிறையும்
அணியுறக் கொண்டவன் தில்லைத்தொல் லாயநல் லார்கண்முன்னே
பணியுறத் தோன்றும் நுடங்கிடை யார்கள் பயின்மனைக்கே. ... 359

கொளு
பாற்செலு மொழியார் மேற்செல விரும்பல்
பொல்லா தென்ன இல்லோர் புகன்றது.

(பல பாராட்டிலும் இன்பம் அகலாது என அடியார் தாமே அறிந்து கூறியது என்பது பேரின்பப்பொருள்)

9. அயல் அறிவுரைத்து அவள் அழுக்கம் எய்தல்

இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக் கோலஞ் செய்து
குரவணை யுங்குழல் இங்(கு)இவ ளால்இக் குறியறிவித்(து)
அரவணை யும்சடை யோன்தில்லை யூரனை ஆங்கொருத்தி
தரஅணை யும்பரி சாயின வாறுநம் தன்மைகளே. ... 360

கொளு
உலகியல் அறியச் செலவிடல் உற்ற
விழுத்தகை மாதர்க்கு அழுக்கஞ் சென்றது. 9

(பலர் கண்டாலும் இன்பம் அகலாது என்றது என்பது பேரின்பப்பொருள்)

10. செவ்வணி கண்ட வாயிலவர் கூறல்

சிவந்தபொன் மேனி மணிதிருச் சிற்றம் பலமுடையான்
சிவந்தஅம் தாளணி ஊரற்(கு) உலகிய லாறுரைப்பான்
சிவந்தபைம் போதும் அம் செம்மலர்ப் பட்டும்கட் டார்முலைமேல்
சிவந்தஅச் சாந்தமும் தோன்றின வந்து திருமனைக்கே. ... 361

கொளு
மணிக்குழை பூப்பியல் உணர்த்த வந்த
ஆயிழையைக் கண்ட வாயிலவர் உரைத்தது.

(இன்பம் கண்டவர்க்கு எங்கும் இன்பாகல் என்பது பேரின்பப்பொருள்)

11. மனை புகல் கண்ட வாயிலவர் கூறல்

குராப்பயில் கூழை இவளின்மிக்(கு) அம்பலத் தான்குழையாம்
அராப்பயில் நுண்ணிடை யார்அடங் கார்எவ ரேயினிப்பண்(டு)
இராப்பகல் நின்றுணங்(கு) ஈர்ங்கடை யித்துணைப் போழ்திற்சென்று
கராப்பயில் பூம்புன லூரன் புகும்இக் கடிமனைக்கே. ... 362

கொளு
கடனறிந்(து) ஊரன் கடிமனை புகுதர
வாய்ந்த வாயி லவர்ஆய்ந்(து) உரைத்தது.

(இன்புடையோர்க்குப் புகல் இன்பேஎன்று அன்புடையோர்கள் அறிய உரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

12. முகமலர்ச்சி கூறல்

வந்தான் வயலணி ஊரன் எனச்சின வாள்மலர்க்கண்
செந்தா மரைச்செவ்வி சென்றசிற்றம்பல வன்அருளான்
முந்தா யினவியன்நோக்கெதிர் நோக்க முகமடுவின்
பைந்தாள் குவளைகள் பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே. ... 363

கொளு
பூம்புன லூரன் புகமுகம் மலர்ந்த
தேம்புனை கோதை திறம்பிறர் உரைத்தது.

(உயிரின் படைத்ததடியார் தேறியது என்பது பேரின்பப்பொருள்)

13. கால நிகழ்வு உரைத்தல்

வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்கள் அன்பில்
செல்லிகைப் போதின் எரியுடை யோன்தில்லை அம்பலம்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண்(டு) ஊதவிண் தோய்பிறையோ(டு)
எல்லிகைப் போதியல் வேல்வயல் ஊரற்(கு) எதிர் கொண்டதே. ... 364

கொளு
இகழ்வ(து) எவன்கொல் நிகழ்வதில் வாறெனச்
செழுமலர்க் கோதை உழையர் உரைத்தது.

(இன்புடையோர்க்குக் கருணை எளிதென அன்புடையோர்கள் அறிய உரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

14. எய்தல் எடுத்துரைத்தல்

புலவித் திரைபொரச் சீறடிப் பூங்கலம் சென்னி உய்ப்பக்
கலவிக்கடலுள் கலிங்கஞ் சென்(று) எய்திக் கதிர்கொள்முத்தம்
நிலவி நிறைமது ஆர்ந்(து)அம் பலத்துநின்றோன் அருள்போன்(று)
உலவிய லாத்தனம் சென்றெய்தல் ஆயின ஊரனுக்கே. ... 365

கொளு
சீரியல் உலகில் திகழ்கரக் கூடி
வார்புனல் ஊரன் மகிழ்வுற்றது.

(இன்பம் பெற்ற உயிர் அன்பாய் மகிழ்ந்தது என்பது பேரின்பப்பொருள்)

15. கலவி கருதிப் புலத்தல்

செவ்வாய் துடிப்பக்கருங்கண் பிறழச்சிற் றம்பலத்(து)எம்
மொய்வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள்
வெவ்வாய் உயிர்ப்பொடு விம்மிக் கலுழ்ந்து புலந்துநைந்தாள்
இவ்வா(று) அருள்பிறர்க்(கு) ஆகு மென நினைந்து இன்னகையே. ... 366

கொளு
மன்னிய உலகில் துன்னிய அன்பொடு
கலவி கருதிப் புலவி எய்தியது.

(இன்பம் மிகும்படி அன்பறிவித்தது என்பது பேரின்பப்பொருள்)

16. குறிப்பறிந்து புலந்தமை கூறல்

மலரைப் பொறாஅடி மானும் தமியன்மன் னன்ஒருவன்
பலரைப் பொறா(து)என்(று) இழிந்துநின் றாள்பள்ளி காமன்எய்த
அலரைப் பொறா(து)அன்(று) அழல்விழித் தோன்அம்பலம் வணங்காக்
கலரைப் பொறாச்சிறி யாள்என்னை கொல்லோ கருதியதே. ... 367

கொளு
குறிப்பினிற் குறிப்பு நெறிப்பட நோக்கி
மலர்நெடுங் கண்ணி புலவி யுற்றது.

(அன்பால் இன்பென்று ஆராய்ந்து உரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

17. வாயிலவர் வாழ்த்தல்

வில்லைப் பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து
வல்லைப் பொலிவொடு வந்தமை யான்நின்று வான்வழுத்தும்
தில்லைப் பொலிசிவன் சிற்றம்பலம் சிந்தை செய்பவரின்
மல்லைப் பொலிவய லூரன்மெய்யேதக்க வாய்மையனே. ... 368

கொளு
தலை மகனது தகவுடைமை
நிலைதரு வாயில் நின்றோர் உரைத்தது.

(அடியார் உயிரின்பம் மிக இகழ்ந்தது என்பது பேரின்பப்பொருள்)

18. புனல் வரவுரைத்தல்

சூன்முதிர் துள்ளு நடைப்பெடைக்(கு) இல்துணைச் சேவல் செய்வான்
தேன்முதிர் வேழத்தின் மென்பூக்குதர் செம்ம லூரன் திண்தோள்
மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழத் தில்லை யான் அருளே
போன்முதிர் பொய்கையில் பாய்ந்தது வாய்ந்த புதுப்புனலே. ... 369

கொளு
புனலா டுகஎனப் புனைந்து கொண்டு
மனைபுகுந் தவனை வையம் உரைத்தது.

(அடியார் உயிர்க்கு இன்பாமெங்கும் என்றது என்பது பேரின்பப்பொருள்)

19. தேர் வரவு கண்டு மகிழ்ந்து கூறல்

சேயே எனமன்னு தீம்புன லூரன்திண் தோள்இணைகள்
தோயீர் புணர்தவம் தொன்மைசெய் தீர்சுடர் கின்றகோலம்
தீயே எனமன்னு சிற்றம்பலவர்தில்லைந்நகர் வாய்
வீயே எனஅடி யீர்நெடுந் தேர்வந்து மேவினதே. ... 370

கொளு
பயில்மணித் தேர்செலப் பரத்தையர் சேரிக்
கயல் மணிக் கண்ணியர் கட்டுரைத்தது.

(இன்புடையோரால் எவர்க்கும் இன்பாமென அடியார் நோக்கி அகமிக மகிழ்ந்தது என்பது பேரின்பப்பொருள்)

20. புனல் விளையாட்டில் தம்முள் உரைத்தல்

அரமங் கையரென வந்து விழாப்புகும் அவ்வவர்வான்
அரமங் கையரென வந்தணு கும்அவள் அன்(று)உகிரால்
சிரம்அங்(கு) அயனைச் செற்றோன் தில்லைச் சிற்றம் பலம்வழுத்தாப்
புரமங் கையரின்நை யாதுஐய காத்துநம் பொற்பரையே. ... 371

கொளு
தீம்புனல் வாயில் சேயிழை வருமெனச்
காம்பன தோளியர் கலந்து கட்டுரைத்தது.

(உலகிலெப்பணிகள் உற்றுமுயிருக்கின்பம் பிரிவிலை என்றே உரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

21. தன்னை வியந்துரைத்தல்

கனலூர் கணைதுணை யூர்கெடச் செற்றசிற் றம்பலத்தெம்
அனலூர் சடையோன் அருள்பெற் றவரின் அமரப்புல்லும்
மினலூர் நகையவர் தம்பால் அருள்விலக் காவிடின்யான்
புனலூ ரனைப் பிரி யும்புன லூர்கணப் பூங்கொடியே. ... 372

கொளு
அரத்தத் துவர்வாய்ப் பரத்தைத் தலைவி
முனிவு தோன்ற நனிபு கன்றது.

(செய்பணிஎல்லாம் சிவனின்பென்றது என்பது பேரின்பப்பொருள்)

22. நகைத்துரைத்தல்

இறுமாப்(பு) ஒழியும்அன் றேதங்கை தோன்றின்என் எங்கையங்கைச்
சிறுமான் தரித்தசிற் றம்பலத் தான்தில்லை யூரன்திண்தோள்
பெறு மாத் தொடும்தன்ன பேரணுக் குப்பெற்ற பெற்றியனோ(டு)
இறுமாப்(பு) ஒழிய இறுமாப்(பு) ஒழிந்த இணைமுலையே. ... 373

கொளு
வேந்தன் பிரிய ஏந்திழை மடந்தை
பரத்தையை நோக்கி விரித்து ரைத்தது.

(இன்பமே பணிகண்டன்பாய்க் கொண்டது என்பது பேரின்பப்பொருள்)

23. நாணுதல் கண்டு மிகுத்துரைத்தல்

வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயன்அன்ன
தீயாடி சிற்றம் பலமனை யாள்தில்லை யூரனுக்கின்(று)
ஏயாப் பழியென நாணியென் கண்ணிங்ங னேமறைத்தாள்
யாயாம் இயல்பிவள் கற்புநற் பால இயல்புகளே. ... 374

கொளு
மன்னவன் பிரிய நன்மனைக் கிழத்தியை
நாணுதல் கண்ட வாணுதல் உரைத்தது.

(அருளுயிர் அன்புக்கண்டு வந்தது என்பது பேரின்பப்பொருள்)

24. பாணன் வரவுரைத்தல்

விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை இறைஅமைத்த
திறலியல் யாழ்கொண்டு வந்துநின் றார்சென் றிராத்திசைபோம்
பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலும்மன்னோ
அறலியல் கூழைநல் லாய் தமியோமை யறிந்திலரே. ... 375

கொளு
இகல்வே லவன் அகல்(வு) அறியாப் பாணனைப்
பூங்குழல் மாதர்க்குப் பாங்கி பகர்ந்தது

(அருளுயிர்ப் பாராட்டு அன்பென்றியம்பியது என்பது பேரின்பப்பொருள்)

25. தோழி இயற்பழித்தல்

திக்கின் இலங்குதிண் தோள்இறை தில்லைச்சிற் றம்பலத்துக்
கொக்கின் இறக(து) அணிந்துநின் றாடிதென் கூடலன்ன
அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால்
தக்கின் றிருந்ததிலன் நின்றசெவ்வேல் எம் தனிவள்ளலே. ... 376

கொளு
தலைமகனைத் தகவிலன்எனச் சிலைநுதற் பாங்கி தீங்கு செப்பியது.

(அருளின்பக்கனி அறியவலர் உரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

26. உழையர் இயற்பழித்தல்

அன்புடை நெஞ்சத்து இவள்பே துற அம் பலத்தடியார்
என்பிடை வந்(து)அமிழ்(து) ஊறநின்(று) ஆடி இருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந்(து) அன்னம் சலஞ்சலத்தின்
வன்பெடை மேல்துயி லும்வய லூரன் வரம்பிலனே. ... 377

கொளு
அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரியக்
குழைமுகத் தவளுக்(கு) உழையர் உரைத்தது.
பாடபேதம்
அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரியக்
திண்தேர் வீதியில் கண்டோர் உரைத்தது.

(அடியார் உயிரின்பறிய மாறாய் உரைத்தது பின்னும் எடுத்தெடுத்தியம்பல் என்பது பேரின்பப்பொருள்)

27. இயற்பட மொழிதல்

அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவர்அந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை யேந்திவந் தார்அவரென்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவும்உண்டேல்
பஞ்சார் அமளிப் பிரிதலுண் டோஎம் பயோதரமே. ... 378

கொளு
வரிசிலை யுரன் பரிசு பழித்த
உழையர் கேட்ப எழில்நகை உரைத்தது.

(அடியார்க்குச் சிவன் உயிரன்புரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

28. நினைந்து வியந்துரைத்தல்

தெள்ளம் புனற்கங்கை தங்கும் சடையன்சிற் றம்பலத்தான்
கள்ளம் புகுநெஞ்சர் காணா இறையுறை காழியன்னாள்
உள்ளம் புகும்ஒரு காற்பிரி யாதுள்ளி உள்ளுதொறும்
பள்ளம் புகும்புனல் போன்(று)அகத் தேவரும் பான்மையளே. ... 379

கொளு
மெல்லியற் பரத்தையை விரும்பி மேவினோன்
அல்லியற் கோதையை அகனமர்ந்(து) உரைத்தது.

(பல பணி செய்யினும் பரனின்பன்றி வேறிலை என உயிர் வியந்துரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

29. வாயில் பெறாது மகன் திறம் நினைதல்

தேன்வண்(டு) உறைதரு கொன்றையன் சிற்றம்பலம் வழுத்தும்
வான்வள் துறைதரு வாய்மையன் மன்னு குதலை யின்வா
யான்வள் துறைதரு மால்அமு தன்னவன் வந்தணையான்
நான்வண்(டு) உறைதரு கொங்கைஎவ் வாறுகொல் நண்ணுவதே. ... 380

கொளு
பொற்றொடி மாதர் நற்கடை குறுகி
நீடிய வாயிலின் வாடினள் மொழிந்தது.

(இன்பம் அடியார் கூட்டமென்றே அன்பாயுயிரே அகமிரங்கியது என்பது பேரின்பப்பொருள்)

30. வாயிற்கண் நின்று தோழிக்கு உரைத்தல்

கயல்வந்த கண்ணியர் கண்ணிணை யால்மிகு காதரத்தால்
மயல்வந்த வாட்டம் அகற்றா விரதம்என் மாமதியின்
அயல்வந்த ஆடர(வு) ஆடவைத் தோன்அம் பலம்நிலவு
புயல்வந்த மாமதில் தில்லைநன் னாட்டுப் பொலிபவரே. ... 381

கொளு
பெருந்தகை வாயில் பெறாது நின்று
அருந்தகைப் பாங்கிக்(கு) அறிய உரைத்தது.

(எப்பணிசெய்யினும் அருளன்றி இன்பிலைஎன,உயிரே அருளுக்குவந்து உரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

31. வாயில் வேண்டத் தோழி கூறல்

கூற்றா யினசின ஆளியெண் ணீர்கண்கள் கோள்இழித்தால்
போல்தான் செறியிருள் பொக்கம்எண் ணீர்கன்(று) அகன்றபுனிற்(று)
ஈற்றா வெனநீர் வருவது பண்(டு)இன்(று)எம் ஈசர்தில்லைத்
தேற்றார் கொடிநெடுவீதியில் போதிர்அத் தேர்மிசையே. ... 382

கொளு
வைவேல் அண்ணல் வாயில் வேண்டப்
பையரவு அல்குல் பாங்கி பகர்ந்தது.

(எப்பணியும் சிவனன்ரி இலை என அருளே சிவனுக்கு அறிய உரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

32. தோழி வாயில் வேண்டல்

வியந்தலை நீர்வையம் மெய்யே இறைஞ்சவிண் தோய்குடைக்கீழ்
வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற வார்வந்த வாளரக்கன்
புயந்தலை தீரப் புலியூர் அரன்இருக் கும்பொருப்பிற்
கயந்தலை யானை கடிந்த விருந்தினர் கார்மயிலே. ... 383

கொளு
வாயில் பெறாது மன்னவன் நிற்ப
ஆயிழை அவட்குத் தோழி சொல்லியது.

(அருளே சிவத்துக்கு உயிரின்பாகி,என்றுவந்து அருளே சிவத்துக்கு உரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

33. மனையவர் மகிழ்தல்

தேவியங் கண்திகழ் மேனியன் சிற்றம் பலத்தெழுதும்
ஓவியம் கண்டன்ன ஒண்ணுத லாள்தனக்(கு) ஒகையுய்ப்பான்
மேவியம் கண்டனை யோவந் தனன்என வெய்துயிர்த்துக்
காவியம் கண்கழு நீர்ச்செவ்வி வெளவுதல் கற்றனவே. ... 384

கொளு
கன்னி மானோக்கி கனன்று நோக்க
மன்னிய மனையவர் மகிழ்ந்து ரைத்தது.

(அடியார் உயிரின் பண்பு கண்டது என்பது பேரின்பப்பொருள்)

34. வாயின் மறுத்துரைத்தல்

உடைமணி கட்டிச் சிறுதேர் உருட்டி உலாத்தரும்இந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன் நான்முகன் மால்அறியா
விடைமணி கண்டர்வண் தில்லைமென் தோகையன் னார்கண்முன்நம்
கடைமணி வாள்நகை யாய்இன்று கண்டனர் காதலரே. ... 385

கொளு
மடவரல் தோழி வாயில் வேண்ட
அடல்வே லவனார் அருளு ரைத்தது.

(சிவமருள் நோக்கி அருட்செய்கை உரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

35. பாணனொடு வெகுளுதல்

மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல்(கு) ஊரர்நின்வாய்
மெய்கொண்ட அன்பினர் என்பதென் விள்ளா அருள்பெரியர்
வைகொண்ட ஊசிகொல் சேரியில் விற்றெம்இல் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை ஆத்தின்னி போந்ததுவே. ... 386

கொளு
மன்னியாழ்ப் பாணன் வாயில் வேண்ட
மின்னிடை மடந்தை வெகுண்டு ரைத்தது.

(பரசமயத்தில் பரிவாகாதென்று இன்பே உயிருக்கு எடுத்துரைத்தது என்பது பேரின்பப்பொருள் )

36. பாணன் புலந்துரைத்தல்

கொல்லாண் டிலங்கு மழுப்படை யோன்குளிர் தில்லையன்னாய்
வில்லாண் டிலங்கு புருவம் நெரியச்செவ் வாய்துடிப்பக்
கல்லாண்(டு) எடேல்கருங் கண்சிவப் பாற்று கறுப்பதன்று
பல்லாண்(டு) அடியேன் அடிவலம் கொள்வன் பணிமொழியே. ... 387

கொளு
கருமமலர்க் கண்ணி கனன்றுகட் டுரைப்பப்
புரியாழ்ப் பாணன் புறப்பட்டது.

(பரசமயங்கள் பாறி எய்த்தது என்பது பேரின்பப்பொருள்)

37. விருந்தொடு செல்லத் துணிந்தமை கூறல்

மத்தக் கரியுரி யோன்தில்லை யூரன் வரவெனலும்
தத்தைக் கிளவி முகத்தா மரைத்தழல் வேல்மிளிர்ந்து
முத்தம் பயக்கும் கழுநீர் விருந்தொடென் னாதமுன்னம்
கித்தக் கருங்குவ ளைச் செவ்வி யோடிக் கெழுமினவே. ... 388

கொளு
பல்வளை பரிசுகண்டு இல்லோர் இயம்பியது.

(உண்மைப்பணி கண்டு அடியார் உவந்தது என்பது பேரின்பப்பொருள்)

38. ஊடல் தணிவித்தல்

கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை ஆட்டுவந்த
தவலங்கிலாச்சிவன் தில்லையன் னாய்தழு விம்முழுவிச்
சுவலங் கிருந்தநம் தோன்றல் துணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற் பாலை அரசனுக்கே. ... 389

கொளு
தோன்றலைத் துணையொடு தோழி கண்டு
வான்தகை மடந்தையை வருத்தம் தணித்தது.

(அருளே அன்புகண்டு அரற்கு எடுத்துரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

39. அணைந்த வழி யூடல்

சேல்தான் திகழ்வயல் சிற்றம் பலவர்தில் லைநகர்வாய்
வேல்தான் திகழ்கண் இளையார் வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பால்தான் திகழும் பரிசினம் மேவும் படி(று)உவவேம்
கால்தான் தொடல்தொட ரேல்விடு தீண்டல் எம் கைத்தலமே. ... 390

கொளு
தெளிபுனல் ஊரன் சென்றணைந் தவழி
ஒளிமதி நுதலி ஊடி உரைத்தது. 39

(இன்பம் பணி முழுது அன்பாக்கொண்டு பின்பும் புதிதாய் அன்பு பேணியது என்பது பேரின்பப்பொருள்)

40. புனலாட்டுவித்தமை கூறிப் புலத்தல்

செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம் பலவர்தில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன லாட்டிமன் பாவி எற்கு
வந்தார் பரிசும் அன் றாய்நிற்குமாறு என் வளமனையில்
கொந்தார் தடந்தோள் விடங்கால் அயிற்படைக் கொற்றவரே. ... 391

கொளு
ஆங்கதனுக்(கு) அழுக்கம் எய்தி
வீங்கு மென்முலை விட்டுரைத்தது.

(உண்மைப்பணியும் உண்டோ இன்பம் செம்மையாய்விடில் எனச்சிவமே உரைத்ததென்பது பேரின்பப்பொருள்)

41. கலவி கருதிப் புலத்தல்

மின்துன் னியசெஞ் சடைவெண் மதியன் விதியுடையோர்
சென்றுன் னிய கழற் சிற்றம் பலவன்தென்னம் பொதியில்
நன்றும் சிறியவர் இல்எம(து) இல்லம்நல் லூரமன்னோ
இன்றுன் திருவருள் இத்துணை சாலுமன் எங்களுக்கே. ... 392

கொளு
கலைவளர் அல்குல் தலைமகன் தன்னொடு
கலவி கருதிப் புலவி புகன்றது.

(ஆனந்தத்துக்கு அன்பு பிறிதிலை என்று சிவமே எடுத்துரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

42. மிகுத்துரைத்து ஊடல்

செழுமிய மாளிகைச் சிற்றம் பலவர்சென்(று) அன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழில் ஏழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக்குடியீர்
விழுமிய அல்லகொல் லோஇன்ன வாறு விரும்புவதே. ... 393

கொளு
நாடும் ஊரும் இல்லும் சுட்டி
ஆடற் பூங்கொடி ஊடி உரைத்தது.

(பெற்றிடின் ஞான முதன் மூன்றிலை எனல் என்பது பேரின்பப்பொருள்)

43. ஊடல் நீட வாடி உரைத்தல்

திருந்தேன் உயநின்ற சிற்றம் பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந்(து) இணைமலர்க் கண்ணின்இன் நோக்கருளிப்
பெருந்தேன் எனநெஞ் சுகப்பிடித்(து) ஆண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தேல் அதுவன்(று) இதுவோ வருவதோர் வஞ்சனையே. ... 394

கொளு
வாடா ஊடல் நீடா வாடியது.

(பெற்றார்க்கு ஆனந்தம் பிரிவிலை என்றது என்பது பேரின்பப்பொருள்)

44. துனியொழிந்து உரைத்தல்

இயல்மன்னும் அன்புதந் தார்க்(கு)என் நிலைஇமை யோர்இறைஞ்சும்
செயல்மன்னும் சீர்க்கழல் சிற்றம் பலவர்தென் னம்பொதியில்
புயல்மன்னு குன்றில் பொருவேல் துணையாப்பொம் மென்இருள்வாய்
அயல்மன்னும் யானை துரந்(து)அரி தேரும் அதரகத்தே. ... 395

கொளு
தகுதியின் ஊரன் மிகுபதம் நோக்கிப்
பனிமலர்க்கோதை துனிய ழிந்தது.

(பெத்தம் போல முத்தியில் நின்றது என்பது பேரின்பப்பொருள்)

45. புதல்வன்மேல் வைத்துப் புலவிதீர்தல்

கதிர்த்த நகைமன்னும் சிற்றவ்வை மார்களைக் கண்பிழைப்பித்(து)
எதிர்த்(து)எங்கு நின்(று)எப் பரிசளித் தான்இமை யோர்இறைஞ்சும்
மதுத்தங் கியகொன்றை வார்சடை ஈசர்வண் தில்லைநல்லார்
பொதுத்தம்ப லங்கொணர்ந் தோபுதல்வா எம்மைப் பூசிப்பதே. ... 396

கொளு
புதல்வனது திறம்புகன்று
மதரரிக் கண்ணி வாட்டந் தவிர்ந்தது.

(முத்தியினும் சுகம் புதிதாய்த் தோன்றியது என்பது பேரின்பப்பொருள்)

46. கலவி இடத்து ஊடல்

சிலைமலி வாணுதல் எங்கைய(து) ஆகம் எனச் செழும்பூண்
மலைமலி மார்பின் உதைப்பத்தந் தான்தலை மன்னர்தில்லை
உலைமலி வேற்படை ஊரனின் கள்வர்இல் என்ன உன்னிக்
கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழ்ந்தனவே. ... 397

கொளு
சீறடிக்(கு) உடைந்த நாறிணர் தாரவன்
தன்மை கண்டு பின்னும் தளர்ந்தது.

(ஆனந்தம் குருவடியே பேணல் என்பது பேரின்பப்பொருள்)

47. முன்னிகழ்வு உரைத்து ஊடல் தீர்தல்

ஆறூர் சடைமுடி அம்பலத்(து) அண்டர்அண்டம்பெறினும்
மாறூர் மழலிடை யாய்கண் டிலம்வண் கதிர்வெதுப்பு
நீறூர் கொடிநெறி சென்றிச் செறிமென் முலைநெருங்கச்
சீறூர் மரையத ளில்தங்கு கங்குற் சிறுதுயிலே. ... 398

கொளு
முன்னி கழ்ந்தது நன்னுதற்(கு) உரைத்து
மன்னு புனலூரன் மகிழ்வுற்றது.

(அனாதியே இன்பமா அயர்ந்தும் இருந்ததற்கு எண்ணி இன்பமாயின என்பது பேரின்பப்பொருள்)

48. பரத்தையைக் கண்டமை கூறிப் புலத்தல்

ஐயுர வாய்நம் அகன்கடைக் கண்டுவண் தேர் உருட்டும்
மையுறு வாட்கண் மழவைத் தழுவமற்(று) உன்மகனே
மெய்யுற வாம்இதுன் இல்லே வருகென வெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி யூரன்ன காரிகையே. ... 399

கொளு
பரத்தையைக் கண்ட பவளவாய் மாதர்
அரத்த நெடுவேல் அண்ணற்(கு) உரைத்தது. 48.

(இன்பசுகம் புணர்வெங்குமாகி மற்றொன்று அறியா வகையாய் நின்றது என்பது பேரின்பப்பொருள்)

49. ஊதியம் எடுத்துரைத்து ஊடல் தீர்த்தல்

காரணி கற்பகம் கற்றவர் நற்றுணை பாணர்ஒக்கல்
சீரணி சிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத்
தாரணி கொன்றையன் தக்கோர்தம் சங்க நிதிவிதிசேர்
ஊருணி உற்றவர்க்(கு) ஊரன்மற்(று) யாவர்க்கும் ஊதியமே. ... 400

கொளு
இரும்பரிசில் ஏற்றவர்க்(கு) அருளி
விரும்பினர் மகிழ மேவுதல் உரைத்தது.

(அருளுயிர் பூரணானந்தமாறல் சிவத்துக்குரைத்துத் திறம்பாதின்பமாக்கி மிகவு மருள் மிக மகிழ்தல் என்பது பேரின்பப்பொருள்
திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலக்கோவையார் முற்றுப் பெற்றது.