இருளில் இருக்கும் கண்களுக்கு எதுக்கு விளக்கு

ஒரு ஊரில் ஒரு ஜென் குரு இருந்தார். அவரது கருத்துக்களைக் கேட்க பல இடங்களில் இருந்தும் பல தரப்பட்ட பார்வையற்ற நபர்கள் வருவது வழக்கம்.
ஒரு நாள், ஜென் குரு அங்கு கூடி இருந்தவர்கள் இடையே பல நல்ல கருத்துக்களை மிக சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
நேரம் போனதே தெரியவில்லை. ஜென் குரு பேசி முடிப்பதற்கு இரவே வந்து விட்டது. அந்த ஆசிரமத்தில் இருந்து காட்டு வழியாக இருட்டில் தான் செல்ல வேண்டும்.
அந்தக் காட்டில் மின்சார விளக்கு வசதிகள் ஏதுமில்லை. ஆசிரமத்தில் இருந்து ஒவ்வொருவராக புறப்பட்டனர். கடைசியாக கிளம்பத் தயாரானவர் ஒரு பார்வையற்றவர்.
அவரைப் பார்த்த ஜென் குரு, தனது சீடரை அழைத்து, இந்த பார்வையற்றவர் இருட்டில் பத்திரமாக வீடு திரும்ப அவர் கையில் ஒரு விளக்கைக் கொடுத்து அனுப்புங்கள் என்றுக் கூறினார்.
சீடருக்கு ஜென் குரு சொன்னதைக் கேட்டதும் அவர் மனதில் மிகப் பெரிய குழப்பம். வந்து இருப்பவர், பார்வையே இல்லாதவர். இவருக்குத்தான் வெளிச்சமே தெரியாதே.
அவர் இருளிலும் நடந்து செல்லக் கூடியவர் தானே. அப்படி இருக்கும் போது அவருக்கு ஏன் விளக்கைக் கொடுக்கும்படி குரு கூறுகிறார்? இந்த விளக்கு வெளிச்சம் அந்த பார்வையற்றவருக்கு தேவையே இல்லையே என்று சீடர் குழம்பினார்.
ஆனாலும் குருவின் கட்டளைக்குப் பணிந்த சீடர், அந்த பார்வையற்றவருக்கு நல்ல வெளிச்சம் தரும் விளக்கு ஒன்றை கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
ஒரு வாரம் ஆனது. ஆனாலும் அந்த சீடரின் சந்தேகம் தீர்ந்தபாடில்லை. குழப்பமான நிலையில் காணப்பட்ட அந்த சீடரை ஜென் குரு அழைத்து, உனக்கு என்ன சந்தேகம்? ஏன் குழம்பிப் போய் இருக்கிறாய் என்று கேட்டார்.
அப்போது அவரிடம் அந்த சீடர், ஐயா! கடந்த வாரம் இங்கு வந்த கண்பார்வையே இல்லாத ஒருவரிடம் எதற்காக விளக்கைக் கொடுத்து அனுப்பினீர்கள்? அந்த விளக்கால் என்ன பயனை அவர் அடைந்திருப்பார்? என்று தனது மனதில் உள்ள சந்தேகத்தைக் கேட்டார்.
இதற்கு அந்த ஜென் குரு சிரித்துக் கொண்டே, பார்வையற்ற அவருக்கு விளக்கால் எந்த பயனும் இல்லை. ஆனால் எதிரே பார்வையுள்ளவர்கள் வரும் போது, பார்வையற்றவரின் விளக்கைப் பார்த்து அவர் மீது மோதிவிடாமல் விலகிச் செல்வார்கள் அல்லவா? இதனால், பார்வையற்றவர் பத்திரமாகப் போக முடியும் அல்லவா? அதற்காகத்தான் பார்வையற்றவரிடம் விளக்கைக் கொடுத்து அனுப்பும்படி கூறினேன் என்று கூறினார்.
சீடருக்கு மனதில் ஏற்பட்டிருந்த சந்தேகமும் தீர்ந்தது. குருவின் அருமையும் புரிந்தது.