ஈசன் ஞான குருவாய் இருத்தல்

bookmark

திருக்கயிலாய மலையில் சிவபெருமான் திருவடியிலே, அருந்தவச் செல்வராகிய சனகாதி முனிவர் நால்வரும் அன்புடன் பன்முறை பணிந்து எழுந்து நின்று, பண்ணோடு வேத கீதம் பாடித் துதித்து, "அருட் பெருங்கடலே! அகன்ற கருங்கடலின் நடுவே, நள்ளிரவில், சுழற் காற்றில் அகப்பட்டாற் போன்று, அடியேம் பொருட் பெருங் கடலாகிய வேதத்தின் சாகைகளால் மலைப்புற்று, அஞ்ஞான இருளில் அகப்பட்டு அறிவு தளர்ந்தோம். மயக்கமாய பெருங்கடலி னின்றும் கரையேறும் முறையைத் திருவருள் புரிதல் வேண்டும்” என்றார்கள். குற்றமற்ற , நற்றவம் புரிந்து, செம்மையான அருளைப் பெற்ற நால்வரும் இவ்வாறு சொல்ல, அன்பர்க்கு எளியனாகிய அருள் வள்ளல் அம்முனிவர் முகம் நோக்கி, "உங்கள் அறிவு ஒருமைப்பட்டு அடங்கும் வண்ணம் அழிவற்ற பெருமை வாய்ந்த ஞானநூலை உணர்த்துகின்றோம்; அமர்க” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

நந்தி தேவர் தலைவாயிலைக் காவல் செய்திருந்தார். மெய்ஞ்ஞான முதல்வராகிய ஈசன் முன்னே,சனகன் முதலிய முனிவர்கள் தொழுது அமைந்தார்கள். அவர்களுக்கு, முடிவற்ற சிவாகமத்தின் பாதங்களாகிய சரியை கிரியை யோகம் என்னும் மூன்றையும் சிவபெருமான் எடுத்தோதினார். அவற்றை உணர்ந்த முனிவர்கள், "மனோலயத்திற்குரிய ஞானபோதத்தையும் போதித்தல் வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தனர். அம்மொழி கேட்ட ஈசன் புன்னகை புரிந்தார்; மறுமொழி யொன்றும் உரைத்தாரல்லர்; ஞானநெறி, சொல்லிக் காட்டும் தன்மைத்தன்று என்று அம் முனிவர்க்கு உணர்த்துமாறு தமது திருமார்பில் ஒரு கரத்தை வைத்து, ஞான முத்திரை காட்டி, ஒரு கணப்பொழுது யாதொரு செயலும் இன்றி, யோகியரைப் போல் காட்சியளித்தார்.

ஞானத்தின் தன்மையை இவ்வாறு உணர்த்தக் கண்ட முனிவர்கள், "மெய்யறிவு என்பது நூல்களின் அளவிற்றன்று” என்னும் உண்மையை உணர்ந்தார்கள், ஈசன் அருளால் மன ஒடுக்கம் பெற்றார்கள். இங்ஙனம் பிரமாவின் புதல்வர்கள் ஆகிய முனிவர்க்கு மெய்ஞ்ஞானி போதம் கணப்பொழுது காட்டுங்கால் உலகமெல்லாம் ஒருமைப்பாடு உற்றது; காம உணர்ச்சி. அற்றது. எனவே, யார்க்கும் மூல காரணமாய் உள்ள முழுமுதற் பொருள் சிவபெருமானே என்று சொல்லவும் வேண்டுமோ? ஞானக் கண்ணால் ஈசனைக் கண்டு உணரும் மெய்ஞ்ஞானியர் போன்று, மண்ணகத்தில் உள்ள உயிர்களும், விண்ணகத்தில் உள்ள உயிர்களும், இன்னும் பாதலம் முதலிய ஏனைய உலகத்துள்ள உயிர்களும் சிற்றின்ப உணர்ச்சி அற்றிருந்தன.

இந்திரன் கவலை கூர்தல் 
மாசற்ற காட்சியையுடைய மாதவ முனிவர்க்கு மெய்யறிவுறுத்திய நிலையில், ஈசன் அழகிய கயிலை மலையில் அமர்ந்தான். உமையவள் இமய மலையில் இருந்தாள். "இந் நிலையில் மாசற்ற மைந்தனை அன்னார் எங்கனம் அடைதல் கூடும்?" என்று சிந்தித்து, இந்திரன் தன் மனத்திற் சஞ்சலம் உற்றான்; ஒன்றும் தோன்றாமையால் பிரமதேவனைத் துணைக்கொண்டு திருமாலிடம் போந்து தன் குறையை முறையிட்டான்.

திருமால் கூற்று 
அப்பொழுது திருமால் அவரை நோக்கி, "எல்லா உயிர்களும் தாமேயாகியும், அருவமாகியும்,உருவமாகியும் இவ்வாறு மூவகை இயல்பினையுடைய மூலகாரணமாயுள்ள தேவதேவன் யோகத்தின் முறைமையைக் காட்டுவாராகில், முன்போல் காம இச்சையை யாவரே கொள்வார்? பிரமனே! முழுமுதற் பொருளாகிய ஈசன், முனிவருக்கு ஞான போதம் உணர்த்தும் மெளன நிலையை விட்டு, பருவத மன்னன் புதல்வியாகிய பார்வதியைத் திருமணம் புரிந்தால், நின் படைப்புத் தொழில் நிறைவேறும்; அன்னார்க்கு ஒரு குமரன் தோன்றினால், சூரன் குலம் அடியோடு அழியும்; துன்பமுற்ற உலகம் எல்லாம் முன்புபோல் வாழ்ந்திருக்கும்; அது நிறைவேறுதற்கு ஓர் உபாயம் கூறுகிறேன், கேள்; இம் மாநிலத்தில் உள்ள யாவரும் மயங்கும்படி மலர்க்கணை தொடுக்கும் மன்மதனைக் கயிலையங்கிரிக்கு அனுப்பினால், ஈசன் மெளனம் நீங்கி, சத்தியாகிய உமையை மணந்து ஒரு மைந்தனைத் தந்தருள்வார்" என்றார்.