உன் மயக்கம்

ஓரிளைஞனும், ஒரு இளமங்கையும் காதல் மயக்கத்தில் ஆழ்ந்து உரையாடுகிறார்கள்.அவர்களுடைய உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடப் பயன்படுத்தும் உவமைகளும் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் விளிச்சொற்களும் சுவையாக இருக்கின்றன.
ஆண்: எண்ணெய் தேய்த்தல்லோ
எனக்கு முன்னே போரபுள்ள
எண்ணெய்ப் பளபளப்பு-என்
கண்ணை மிரட்டுதடி
எண்ணெய்க்குடம் போல
எழும்பி வந்த மேகம் போல
தண்ணிக்குடம் போல
தளும்புதடி என் மனசு
பெண் : உங்க மேனிக்குள்ள
ஊதாக் கலர் சட்டைக்குள்ள
தோளிலிடும் லேஞ்சுக்குள்ள
தோகைமயில் ஆசை கொண்டேன்
ஆண்: வாழைக் கொடிக்காலே
வட கொடிக்கால் வெத்திலையே
போட்டா செவக்குதில்ல
பெண்மயிலே உன் மயக்கம்
பெண் : சத்தனக்கும்பாவில
சாதம் போட்டு உண்கையில
உங்களை நினைக்கையிலே
உண்ணுறது சாதமில்லை.
குறிப்பு: வாழைக் கொடிக்கால், வட கொடிக்கால் வெற்றிலை, பெண்ணின் அழகுக்கும் செழிப்பான மேனி வளத்துக்கும் உவமை. வெத்திலை போட்டால் சிவப்பது
பற்றிய நம்பிக்கை முன்னரே குறிப்பிடப்பட்டது.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி.
------------------