உப்புத் தண்ணீரும் நல்ல தண்ணீரும்

bookmark

அத்தை மகனும், மாமன் மகனும், மணமகன் உறவு முறையினர். அவர்கள் ஊற்றுத் தோண்டினார்கள். தண்ணீர் இறைத்து தோட்டத்துக்குப் பாய்ச்சுகிறார்கள்; அண்ணனும் ஊற்றுத் தோண்டினான். அதன் தண்ணீரும் தோட்டத்துக்குப் பாய்கிறது. அவள் இரண்டு தோட்டத்திலும் வாய்க்கால் விலக்கி வேலையில் உதவி செய்கிறாள். மைத்துனர்களைக் கேலி செய்வதற்காக இப்பாடலை பெண் பாடுகிறாள்.

ஆத்திலே ஏலேலோ
ஊத்துப் பறிச்சு
அத்தை மகன் ஏலேலோ
இறைக்கும் தண்ணி
அத்னையும் ஏலேலோ
உப்புத் தண்ணி
என் பொறுப்பு ஏலேலோ
அத்தனையும் எறைக்கும் தண்ணி
அத்தனையும் ஏலேலோ
நல்ல தண்ணி
மானத்திலே ஏலேலோ
ஊத்துப் பறிச்சு
மாமன் மகன் ஏலேலோ
ஏத்தம் வச்சு
மானுக் கொம்பு ஏலேலோ
ஏத்தம் வச்சு
மாமன் மகன் ஏலேலோ
எறைக்கும் தண்ணி
அத்தனையும் உப்புத் தண்ணி ஏலேலோ

வட்டார வழக்கு: என் பொறப்பு-அண்ணன்.
உதவியவர்: நல்லம்மாள், சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி
இடம்: பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்.
-----------