உழவும் தொழிலும்

ஒரு நூற்றாண்டுக்கு முன் நமது நாட்டில் முக்கியத்தொழில்கள் விவசாயமும், நெசவுமாகவே இருந்து வந்தன. பிற தொழில்களெல்லாம் இவற்றைச் சார்ந்தே இருந்தன. கொல்லன், தச்சன் முதலியவர்கள் உழவுக்குத் தேவையான கருவிகளைச் செய்து கொடுத்தனர். சமூக வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்யும் வேறு தொழில்கள் இல்லை. வண்ணான், நாவிதன், கொத்தன் போன்றவர்கள் தனி மனிதனது சுக வாழ்விற்கு உதவி புரிந்தார்கள். இத்தகைய உற்பத்தி முறையில் மனித உழைப்பே முக்கியமான உற்பத்தி சக்தியாக இருந்தது. இச்சக்தி கிராம சமுதாயத்தினுள்ளே கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. பெரும்பாலும், கோயில்கள் இவ்வுழைப்பின் மீது ஆதிக்கம் புரிந்தன. அதற்கடுத்தாற்போல் நிலவுடைமையாளர்களும், உயர் குலத்தினரும் ஆதிக்கம் புரிந்தனர். உழவர்கள் பெரும்பாலும், கோயில் நிலங்களையோ அல்லது நில உடைமையாளர்களின் நிலங்களையோ குத்தகைக்குப் பயிரிட்டு வந்தார்கள். கோயில் குத்தகையும் நிலவுடமையாளரின் குத்தகையும், மிக அதிகமாக இருந்தது. இச் சுரண்டல் முறையினால்தான் கோயில்களில் ஆடம்பரமான திருவிழாக்கள் நடத்தவும், நூற்றுக்கணக்கானவர்களுக்கு சோறிடவும் பொருள் குவிந்தது. மேல் வர்க்கத்தினரும் தங்கள் சுரண்டலினால் ஆடம்பர வாழ்க்கையில் திளைத்தனர். கிராம கைத் தொழிலாளிகள் ஆண்டுக்கொரு முறை கோயிலிலிருந்தும் நிலச்சுவான்களிடமிருந்தும் உழவர்களிடமிருந்தும் தானியத்தை ஊதியமாகப் பெற்று வந்தனர். அவர்களது வாழ்க்கை, மேல் வர்க்கத்தாரின் ஆதிக்கத்தினுள் இருந்தது.
பல நூற்றாண்டுகளாக இவ்வாறு உறங்கிக் கிடந்த கிராம வாழ்க்கை வெள்ளையர் வருகைக்குப்பின் மாறத்தொடங்கிவிட்டது. நிலவுடைமைச் சுரண்டலால் வாழ்விழந்த உழவர்கள், கைத்தொழிலாளர்கள் முதலியோர் வெள்ளைக்காரர்கள் தொடங்கிய புதுத் தொழில்களில் கூலி வேலை செய்ய கிராமங்களை விட்டு வெளியேறினர். மேற்கு மலைச் சாரலில் காடுகளை வெட்டித் தேயிலை, காப்பித் தோட்டங்களையும், புதிதாகத் தோற்றுவிக்க அவர்கள் சென்றார்கள். ரயில் பாதைகள் அமைக்கவும், ரஸ்தாக்கள் போடவும், துறைமுகங்கள் கட்டவும், ஆலைகள் கட்டவும், சுரங்கங்கள் தோண்டவும், அவர்கள் தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு மட்டுமல்லாமல், பம்பாய் முதலிய நகரங்களுங்கும், கடல் கடந்த சீமைகளுக்கும் சென்றார்கள். அங்கெல்லாம் உழைத்து உழைத்து அவர்கள் கண்ட பயன் ஒன்றுமில்லை. கிராமத்தி்லிருந்த சுரண்டல் முறை வேறு, நகரங்களிலுள்ள சுரண்டல் முறை வேறு. அங்கே எஜமானர்கள் வேறு. இங்கே எஜமானர்கள் வேறு. முதலில் சிறிதளவு சுதந்திரம் இருப்பது போல் தோன்றினும் பின்னர் அது கானல்நீர் என்று உணர்ந்தனர்.
இவ்வாறு வயல்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும், சுரங்கங்களிலும் உழைத்துவரும் தொழிலாளர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. இருள் நீங்கி ஒளி தோன்றும் காலத்தை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். வருங்கால நல்வாழ்வில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைதான் சமூகக் கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளும் மனவுறுதியை அவர்களுக்குக் கொடுக்கிறது. அவர்கள் பாடும் நாட்டுப் பாடல்களில் அன்பு மலர்வதையும், உழைப்பில் ஆர்வத்தையும், நன்மையில் பற்றையும், தீமையில் வெறுப்பையும் நாம் காண்கிறோம். அவர்களது எளிய பாடல்கள் அவர்களது இன்ப துன்பங்களையும், நெஞ்சக் குமுறல்களையும், ஆசாபாசங்களையும், விருப்பு வெறுப்புகளையும் வெளியிடுகின்றன.
இத்தகையத் தொழில் பாடல்கள் நகர வாழ்க்கையின் போலித் தன்மையாலும், தொழில் முறைகளின் கடுமையினாலும், படிப்படியாக மறைந்து வருகின்றன. கிராமங்களில் மட்டும் பரம்பரையாக வளர்ந்த கலை மரபுகளால் பாதுகாக்கப்பட்டு, குற்றுயிரும், குலை உயிருமாக இப்பாடல்கள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. மிக விரைவாக சேகரிக்கப்பட்டாலன்றி இவை மறைந்து போவது உறுதி.
இத்தொகுப்பில் ஏற்றப் பாட்டுகள், பொலிப்பாட்டு, உழவுத் தொழிலோடு தொடர்புடைய பாடல்கள், வலைஞன் பாடல்கள், வண்ணார் பாட்டு, வண்டியோட்டிகளது பாடல்கள், உப்பளத்தார் பாடல்கள், தேயிலை தொழிலாளர் பாடல்கள் முதலியவை இடம் பெற்றுள்ளன. இதில் சேர்க்கப்படாத தொழில்களைப் பற்றிய பாடல்கள் சேகரித்து இனி வெளியிடப்பட வேண்டும்.
----------