ஊமைத்துரை போட்ட கொடி

bookmark

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு, சிறை உடைத்து மீண்டு வந்து கோட்டையைப் புதுப்பித்து, வெள்ளையர் வெறுப்புணர்ச்சியை பல பகுதிகளிலும் பரப்பி இரண்டு ஆண்டுகள் போராடி, மருது சகோதரர்களது போரிலும் கலந்து கொண்டு வீரமரணம் எய்திய ஊமைத்துரையைப் பற்றி பல நாட்டுக் கதைகள் திருநெல்வேலி மாவட்டத்திலும், இராமநாதபுரம் மாவட்டத்திலும் வழங்கி வருகின்றன. அவனைப் பற்றி பிற மாவட்டத்தினர் அதிகமாக அறிந்திராவிட்டாலும், பெயரையாவது தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதை சேலம் மாவட்டத்தில் வழங்கி வரும் இப்பாடல் காட்டுகிறது.

ஒரு மரத்தை வெட்டித்தள்ளி
ஒரு மாமரத்தை ஊஞ்சலாடி
ஊஞ்சலிலே போரகிளி-அது
ஆண் கிளியா-பொண் கிளியா
ஆண் கிளியும் இல்லம் போயா-அது
பொண் கிளியும் இல்லம் போயா
அதோ பறக்குது பார் பச்சைக் கொடி-எங்க
அழகான ஊமைத்துரை போட்ட கொடி
இரண்டு மரத்தை வெட்டித் தள்ளி
ரண்டு மாமரத்தை ஊஞ்சலாடி
ஊஞ்சலிலே போர கிளி-அது
ஆண் கிளியா-பொண் கிளியா
ஆண் கிளியும் இல்லம் போயா-அது
பொண் கிளியும் இல்லம் போயா
அதோ பறக்குது பார் பச்சைக் கொடி-எங்கள்
அழகான ஊமைத்துரைப் போட்ட கொடி

சேகரித்தவர் : s.s. சடையப்பன்
இடம் : அரூர்,தருமபுரி மாவட்டம்.
--------------