ஏற்றப் பாட்டு

ஆற்றுப் பாசனம் இல்லாத இடங்களில் தமிழ் மன்னர்களும், நாயக்க மன்னர்களும், குளங்களும்,ஏரிகளும், கண்மாய்களும் வெட்டிப் பாசன வசதிகளை அபிவிருத்தி செய்தார்கள். அரசர்கள் போரில் வெற்றி பெற்றபொழுது வெற்றித் தூண்கள் நாட்டியது போலவே நீர் நிலைகளையும் வெட்டினார்கள். தென் பாண்டி நாட்டில் வாகைக்குளம் என்ற பெயருடைய ஏரி ஒன்று இருப்பதே சான்றாகும். நாயக்க மன்னர்கள், தாங்கள் வெட்டிய நீர் நிலைகளுக்குச் சமுத்திரம் என்று பெயர் வைத்தார்கள். அரசரது பெயர்களையும், தளவாய்களது பெயர்களையும் நினைவுறுத்தும் ஏரிகள் பல உள்ளன. உதாரணமாக விசுவநாதப் பேரேரி, வடமலை சமுத்திரம், கோபால சமுத்திரம் முதலியன.
வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் புதிய ஏரிகள் எவையும் தோண்டப் பெறவில்லை. பெரும்பாலான பழைய ஏரிகள் அடிக்கடி பழுது பார்க்கப்படவில்லை. அதனால் அவை மேடிட்டுப் போதுமான அளவு நீர்த் தேக்கி வைக்க வசதியற்றவை ஆயின. அவற்றிலிருந்து தண்ணீர் பாய்ந்தும் அந்த நிலங்களுக்குப் போதுமான நீர் கிடைக்காமல் போயிற்று. ஏரிகளில் நீர் நிரம்பினாலும், நாற்று வளர்ந்து, பொதி தள்ளி, மணி பிடிக்கும் தறுவாயில் ஏரி வற்றிப் போகும்.
அங்குமிங்குமுள்ள பள்ளங்களில் நீர் தேங்கி நிற்கும். அது மடையேறிப் பாயாது. வயல் மட்டத்திற்குக் கீழே சிறிது நீர் கிடக்கும். உழைப்பின் பயன் வீணாகாமல் இருப்பதற்காக,உழவர்கள் பள்ளத்திலுள்ள நீரை அள்ளி மடையில் பாய்ச்சுவார்கள். இதற்காகப் பனையோலையாலோ, இரும்பாலோ செய்த இறவைப் பெட்டிகளைப் பயன்படுத்துவார்கள். அதன் இரண்டு முனைகளிலும், கயிறுகளைக் கட்டிப் பக்கத்திற்கு ஒருவராக நின்று கொண்டு நீரை அள்ளி மடையில் பாய்ச்சுவார்கள். இவ்வேலை மிகவும் சலிப்பைத் தருவதாயினும் வேலையின் பயனை எண்ணி அவர்கள் நீண்ட நேரம் உழைப்பார்கள். சலிப்புத் தோன்றாமலிருப்பதற்காக இறவைப் பெட்டியின் அசைவுக்கு ஏற்ற சந்தத்தில் பாடல்கள் பாடுவார்கள்.
நீரை மடையிலேற்றுவதற்கு வேறொரு கருவியும் உள்ளது. அதன் பெயர் இறைவை மரம். ஒரே மரத்தைத் தொட்டி போல் குடைந்து ஒரு ஓரத்தில் கைப்பிடிபோல் அமைத்திருப்பார்கள். அதன் நடுவே கயிற்றைக் கட்டி முக்காலி போல மூன்று கம்புகளைத் தரையில் நாட்டி அதனோடு, இறைவை மரத்தை இணைப்பர். இறைவை மரத்தின் தொட்டி போன்ற பகுதி தண்ணீரினுள் இருக்கும் கைப்பிடியை மேலும் கீழுமாக அசைத்தால், தண்ணீர் பெட்டியினுள் ஏறி மடையினுள் பாயும். இறைவை மரத்தை இயக்க ஒரே ஒரு ஆள் போதும். இப்பாடல்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகுதியாக பாடாப்படுகிறது. தென்னாற்காடு மாவட்டத்திலும் காலால் மிதித்து ஏற்றம் இறைப்பவர் ஏற்றப் பாட்டுப் பாடுவர். மேலே ஒருவன் ஏற்றத்தை மிதிக்க கீழே ஒருவன் நின்று கிணற்றிலிருந்து வெளிவரும் வாளியைத் தூக்கித் தண்ணீரை மடையில் செலுத்துவான். ஏற்றத்தின் மேலுள்ளவன் முதலடியைப் பாடி முடித்தப்பின் கீழேயுள்ளவன் அடுத்த அடியைப் பாடுவான். அப்பாடல்களில் சில விடங்களில் பாரத இராமாயண பாத்திரங்கள் வருவர்.
இத்தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஏற்றப் பாட்டுகள் பொருளைவிடச் சந்தமே முக்கியமாகத் தருகிறது. பிள்ளையார் வழிபாடு, காதல் பிதற்றல்கள், திருவிழா வர்ணனைகள்,உடல்வலி தோன்றாமலிருக்கக் கடவுளை வேண்டுதல் முதலிய பல பொருள்கள் தெளிவில்லாமல் குழம்பி வருகின்றன. நட்டபயிர் விளைய வேண்டும், அறுவடைக்குப் பின் திருவிழாக்கள் நடக்கவேண்டும், திருவிழா விளையாட்டுகளில் கவலையெல்லாம் மறக்கவேண்டும் என்ற இன்ப ஆர்வம் ஏற்றப் பாட்டுகளில் பொதுவாக இருப்பதைக் காணலாம்.
--------