ஏற்றப் பாட்டு-2

வாரும் பிள்ளையாரே!
வழிக்குத் துணையாக,
வழிக்குத் துணையாக!
எனக்குப் பயம் தீர,
மூத்த பிள்ளையாரே!
முன்னடக்க வேணும்
முன் நடந்தாயானால்
மூணுடைப் பேன் தேங்காய்
இளைய பிள்ளையாரே
எண்ணித் தர வேணும்
எண்ணித் தந்தாயானால்;
என்னென்ன படைப்பேன்
பச்சரிசி தேங்காய்;
பயறு பலகாரம்
எள்ளுடன் துவரை ;
கொள்ளுடன் பயறு
அரிசி கலந்து ;
ஆயிரம் கலமாம்
துவரைக் கலந்து ;
தொளாயிரம் கலமாம்
எள்ளு கலந்து ;
எண்ணூறு கலமாம்
மொச்சை கலந்து ;
முன்னூறு கலமாம்
மூங்கில் களைபோல ;
முன்னூறு கரும்பு,
நாணல் தட்டை போல ;
நானூறு கரும்பாம்
அகத்திக் கம்பு போல ;
ஐநூறு கரும்பாம்.
ஈனாக்கிடேறி இடது
கொங்கை பாலும்
வாலை குமரி
வருந்தி இடித்த மாவும்
சேராத பெண்கள்
சேர்ந்திடித்த மாவும்
இத்தனையும் சேர்த்து
ஆட்டுத் தடம்போல
ஆட்டுத்தடம் போல
அரியதரம் நூறு
கோழித் தடம் போல
குளக் கட்டை நூறு
யானையடிப் போல
சுட்ட ரொட்டி நூறு
பூனைத்தடம் போல
பொறி யுருண்டை நூறு
இத்தனையும் சேர்த்துப்
பொட்டணமாய்க் கட்டி
வடமலையேறி
வாழையிலை பறித்து
தெற்கு மலையேறி
தேக்கிலை பறித்து
தேக்கிலையும் தள்ளி
தென்னை ஈக்கி வாந்து
மூங்கில்களை பறித்து
ஆத்திலே முழுகி
தோப்பிலே சமைத்து
ஏத்தமை பரம்பி
ஆத்தங்கரை வேலா
அள்ளிப்பூசை கொள்ளும்
குளத்தங்கரை வேலா
அள்ளிப் பூசைகொள்ளும்
குளத்தங்கரை வேலா
கூட்டிப்பூசை கொள்ளும்
துளைக்கடை வேலா
துளையை விட்டுப் போரும்
மடைக்கரை வேலா
மடையை விட்டுப் போரும்
முப்பதிகா ரெண்டு
முப்பதிகா மூணு
முப்பதிகா நாலு
மூக்குத்தியும் தோடும்
மூக்குத்தியும் தோடும்
மேக்கத்தியா சாடை
மூக்கத்தியைத் தாடி
மேக்கத்தியா போக
முந்தி நட்ட சம்பா
முருகனுக்கே பொங்கல்
பிந்தி நட்ட சம்பா
பெருமாளுக்கே பொங்கல்
முன்னே மலட்டாறு
என்னை மிட்டாதோ
முப்பதிகாலாறு
முப்பதிகா ஏழு
முப்பதிகா எட்டு
முந்தின குதிரை
முந்தின குதிரை
சென்றதாம் மதுரை
பாண்டியன் குதிரை
தாண்டுதாம் கடலை
முக்காட்டுக்காரி
வைப்பாட்டி தானா
முக்காட்டை நீக்கி
முகம்பார்க்க வாரும்
நாவலரே கேளும்
கோவலன் கதையை
நாற்பதிகா ரெண்டு
நாற்பதிகா மூணு
நாற்பதிகா நாலு
நாக மென்ன செய்யும்
நாக மென்ன செய்யும்
காலம் வந்து சூழ்ந்தால்
நாகத்தைக் கொல்லாதே
பாவம் வரும் பெண்ணே
கோலரைக் கொண்டால்
நாகந்தலை புண்ணு
நானா கிழவி
நான் கிழவியானால்
நான் கிழவியானால்
பூமணங்களேது
நாட்டிலே ஒருத்தி
தேட்டிலே சமத்தி
நாற்பதிகா ஆறு
நாற்பதிகா ஏழு
நாற்பதிகா லெட்டு
நாகூரான் கப்பல்
நாளை யில்ல பயணம்
ஞாயிற்றுக் கிழமை
அம்பை விடலாமா
அமர்ந்த படைமேலே
அம்புக் கதிகாரி
அருச்சுனராம வீமன்
அம்பு வில்லைத்தாடா
ஆளடர்ந்து வாரான்
தொந்திப் பிள்ளையாரே
துணை கொள்ள வேணும்
ஓரடியளந்த
மாயன் பெருமாளே
ஒருபதிகா ரெண்டு
ஒருபதிகா மூணு
ஒருபதிகா நாலு
ஓரடிக்கும் கீழே
மாயன் இருப்பாராம்
ஒருபதிலே நில்லு
ஒருத்திதானா போறா
ஓடை வழியாக
ஒத்தையிலேவாடி
மெத்தையிலே சாய
ஓரென்ன வளையல்
தோரண வளைவி
ஒருபதிகா ஆறு
ஒருபதிகா ஏழு
ஒருபதிகா எட்டு
ஓடாதே மானே
ஓடாதே மானே
ஒளிந்திருப்பான் வேடன்
ஓட்டங்கண்ட மானை
வேடன் துயந்தானே
பன்னீரும் செம்பும்
பாலன் தலைமேலே
பன்னிருகால் ரெண்டு
பன்னிருகால் மூணு
பன்னிருகால் நாலு
பன்னிருகால் ஐந்து
பன்றி குத்தப் போன
பாலன் வரக் காணோம்
பன்றிகளைப் பார்த்தால்
பாரமலை போல
சிங்கம் குத்தப் போன
சீமான் வரக் காணோம்
சிங்கங்களைப் பார்த்தால்
சிறு புலிகள் போ
பன்னிரு காலாறு
பன்னிரு காலேழு
பன்னிருகாலெட்டு
பண்ணிப் பதித்தாண்டி
பண்ணிப் பதித்தாண்டி
பத்துலெட்சம் பொன்னு
எண்ணிப் பதித்தாண்டி
எட்டுலட்சம் பொன்னு
பாப்பாரப் பெண்ணே
முகப்பாயோ தண்ணி
விருந்தாடிப் பெண்கா(ள்)
இருந்தாரிப் போங்க
இருபதிகா ரெண்டு
இருபதிகா மூணு
இருபதிகா நாலு
இருக்க நல்ல சோலை
இருக்க நல்ல சோலை
குளிக்க நல்ல பொய்கை
இருக்கையிலே கண்டேன்
திருப்பதி மலையை
இருக்கச் சொல்லிப் போன
இளமயிலைக் காணோம்
இருபதிகா ஆறு
இருபதிகா ஏழு
இருபதிகா எட்டு
இருட்டு வழி போனால்
இருட்டு வழி போனால்
விரட்டுவாண்டி கள்ளன்
இரும்பு வெள்ளித்தூணாம்
துலுக்கன் பள்ளிவாசல்
இருட்டி வந்த மேகம்
மிரட்டி மழை பெய்ய
மூங்கில் இலைமேலே
தூங்கும் பனிநீரே
காலம்பர வேளை
சாயும் கதிரோனே
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திக்குளம்,நெல்லை மாவட்டம்.
-----------