ஏற்றப் பாட்டு-3

ஏற்றம் இறைக்கும் மாமன் மகனின் புகழை ஓர் இளம் பெண் பாடுகிறாள். ஏற்றத்தின் அசைவைச் சந்தமாக்கி அதற்கேற்றாற்போல் அவள் கை கொட்டிப் பாடுகிறாள். அவன் பாட்டில் ஈடுபட்டு நேரம் போனதே தெரியாமல் ஏற்றம் இறைக்கிறான். அவன் இறைத்த நீர் மஞ்சள் கொல்லைக்கும்,கொய்யாத் தோட்டத்திற்கும் பாய்கிறது.
காதலன் : பட்டுப் பையாம் வெள்ளிக் குச்சாம்
தில்லாலங்கிடி லேலம்
பதினாறு வெத்திலையாம்
தில்லாலங்கிடி லேலம்
சின்னப் பையன் குடுத்த பை
தில்லாலங்கிடி லேலம்
சிரிக்கு தோடி இடுப்பு மேலே
தில்லாலங்கிடி லேலம்
காதலி : மலையோரம் கெணறு வெட்டி
தில்லாலங்கிடி லேலம்
மானுக் கொம்பு ஏத்தம் வச்சு
தில்லாலங்கிடி லேலம்
மாமன் மகன் இறைத்த தண்ணி
தில்லாலங்கிடி லேலம்
மஞ்சாத் தோட்டம் பாயுதோடி
தில்லாலங்கிடி லேலம்
குன்னோரம் கிணறு வெட்டி
தில்லாலங்கிடி லேலம்
கொய்யாக் கொம்பு ஏத்தம் வச்சு
தில்லாலங்கிடி லேலம்
கொழுந்தனாறு இறைக்கும் தண்ணீ
தில்லாலங்கிடி லேலம்
கொய்யத் தோட்டம் பாயுதோடி
தில்லாலங்கிடி லேலம்
மலையோரம் போற மாமா
தில்லாலங்கிடி லேலம்
மயிலிரண்டு புடிச்ச வாய்யா
தில்லாலங்கிடி லேலம்
குன்னோரம் போற மாமா
தில்லாலங்கிடி லேலம்
குயிலிரண்டு புடிச்சி வாய்யா
தில்லாலங்கிடி லேலம்
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம் : அரூர்,சேலம்.
---------