ஏலத்தோட்டம்

ஏலப் பழம் எடுப்பதற்குத் தொழிலாளர்களைப் பிரித்தனுப்புகிறார் கங்காணி. அவர்களுள் இளைஞன் ஒருவன் இருக்கிறான். அவன் முந்திய தினங்களில் தொழிலாளர்களை வேலை செய்ய முடியாமல் தடுத்து வீண் நேரம் போக்கச் செய்தான். அதனால் அவர்களுடைய கூலி குறைந்து விட்டது. ஒரு பெண் தைரியமாக இந்த இளைஞனை அனுப்ப வேண்டாம், பெண்களை மட்டுமே அனுப்பினால் போதும் என்று சொல்கிறாள். கங்காணியும் ஒப்புக் கொள்கிறான். அன்று பெண்கள் மட்டும் வேலை செய்து நிரம்பப் பறிக்கிறார்கள். ஏலப்பழத்தைப் பாடம் பண்ணி ராஜபாளையத்துக்கு அனுப்புகிறார்கள். பெண்களுக்கும் கூலி நிறையக் கிடைக்கிறது.
ஏலப் பழமெடுக்க
இந்தாளு வேண்டாமய்யா
பெட்டிப் பழமெடுக்க
பெண் குயில்கள் நாங்க வாரோம்
ஏத்தத்திலே பழமெடுத்து
இறக்கத்திலே பாடம் பண்ணி
இறங்குதல்லோ சரக்கு மூடை
ராஜபாளையம் சீமை தேடி
சேகரித்தவர்: S.M.கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை.
---------