ஐந்து இந்திரியம் அடக்கும் முறைமை

2031
குட்டம் ஒருமுழம் உள்ளது அரைமுழம்
வட்டம் அமைந்ததோர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன்பல பரவன் வகைகொணர்ந்து
இட்டனன் யாம்இனி ஏதம்இ லோமே. 1
2032
கிடக்கும் உடலின் கிளர்இந் திரியம்
அடக்க லுறும் அவன்தானே அமரன்
விடக்கிண்டு இன்புற மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும் நடக்கும் அளவே. 2
2033
அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடக்கிய அசேதன மாம்என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே. 3
2034
முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்றும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே. 4
2035
ஐந்தில் ஒடுங்கில் அகலிடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருளுடை யாரே. 5
2036
பெருக்கப் பிதற்றிலென் பேய்த்தேர் நினைந்தென்
விரித்த பொருட்கெல்லாம் வித்தாவது உள்ளம்
பெருக்கிற் பெருக்கம் சுருக்கிற் சுருக்கம்
அருத்தமும் அத்தனை ஆராய்ந்துகொள் வார்க்கே. 6
2037
இளைக்கின்ற வாறுஅறிந்து இன்னுயிர் வைத்த
கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடில் புகழோன்
தளைக்கொன்ற நாகம்அஞ் சாடல் ஒடுக்கத்
துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே. 7
2038
பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படரொளி
சார்ந்திடும் ஞானத் தறியினில் பூட்டிட்டு
வாய்ந்துகொள் ஆனந்தம் என்னும் அருள் செய்யில்
வேய்ந்துகொள் மேலை விதியது தானே. 8
2039
நடக்கின்ற நந்தியை நாடோ றும் உன்னில்
படர்க்கின்ற சிந்தையப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கு மனக்கோயி லாமே. 9
2040
சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்துஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழவதில் தாங்கலும் ஆமே. 10
2041
போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றிசெய் மீட்டே புலன்ஐந்தும் புத்தியால்
நாற்றிசைக் கும்பின்னை யாருக்கும் நாதனை
ஊற்றுக உள்ளத்து ஒருங்கலும் ஆமே. 11
2042
தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தின் உள்ளே
அரிக்கின்ற ஐவரை யாரும் உணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கின்ற மைசூழ் வரையது வாமே. 12
2043
கைவிட லாவது ஒன்று இல்லை கருத்தினுள்
எய்தி அவனை இசையினால் ஏத்துமின்
ஐவருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே. 13