ஒன்றாகப் போவோம்

கிராமத்திலுள்ள இளைஞர்கள் மேல்காட்டுக்கு வேலைக்குச் செல்லுகிறார்கள். அவர்களில் ஒரு காதல் ஜோடி இரண்டு பேர் பின்தங்கிச் சென்றால், உற்றார் உறவினர் கேலி செய்வார்கள். எனவே அவர்கள் தனித்தனியே செல்லுகிறார்கள். நெருங்கி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே செல்ல வேண்டுமென்று இருவருக்குமே ஆசை. அவள் அவனை தனக்கு முன் போகும்படி சொல்லுகிறாள். அவனோ சேர்ந்து போனால் என்னவென்று கேட்கிறான். ஆனால் அவளுக்கு வெட்கமாக இருக்கிறது.
பெண்: சீரிய சந்தனமே
கிழக்கிருக்கும் சூரியரே
வாங்களேன் மேகாட்டுக்கு
வாசமுள்ள பூமுடிய
ஆண்: மதுரை மருக்கொழுந்து
மணலூருத் தாழம்பூவு
சேத்துரு செவந்திப் பூவு
சேர்ந்து வந்தால் ஆகாதோ?
பெண்: ஒத்தடிப் பாதையிலே
ஒத்த வழிப் பாதையிலே
மின்னிட்டான் பூச்சி போல
முன்னே வந்தால் ஆகாதோ?
ஆண்: கோடாலிக் கொண்டைக்காரி
குளத்தூருக் காவல்காரி
வில்லு முதுகுக்காரி
நில்லேண்டி ஒண்ணாப்போவோம்.
வெட்கம் பறந்து விட்டது. அவளும் அவன் தன்கூடவே வரச் சம்மதிக்கிறாள். ஆனால் அவன் பாதையை விட்டு கீழே இறங்கும்படி அழைக்கிறான். அவள் மறுத்து, `திருமணமாகட்டும் உன்னோடு தட்டாங்கல் விளையாட எங்கழைத்தாலும்வருகிறேன்` என்கிறாள்.
பெண்: சாயவேட்டி நிறச்சிவப்பு
என்னைக் கண்டால் குறுஞ்சிரிப்பு
குறுஞ்சிரிப்பும் தலையசைப்பும்
கூட வந்தால் ஆகாதோ?
ஆண் லோலாக்கு போட்ட புள்ளே
ரோட்டு வழி போற புள்ளே
ரோட்டை விட்டுக் கீழிறங்கு
கேட்ட தெல்லாம் வாங்கித்தாரேன்
பெண்: உன் மனசு என் மனசு
ஒரு மனசா ஆனாக்கால்
சதுரகிரி மலையோரம்
தட்டாங்கல்லு வெளையாடலாம்
ஆண்: கூடை இடுப்பில் வச்சு,
கோகிலம் போல் போற பொண்ணே
பேடை மயிலன்னமே
பேசாயோ வாய்திறந்து?
பெண்: வாய்க்காலுத் தண்ணியிலே
வண்டு வரும் தூசி வரும்
கூடத்துக்கு வாங்களையா
குளிந்த தண்ணி நான் தாரேன்
வைகையாத்தங்கரை தனிலே
வச்சிருக்கேன் தீங்கரும்பு
தீவிரமாப் போற சாமி
திண்ணு பாத்தாலாகாதோ?
மொழுகிய திருணையிலே
எழுதிய பாய் போட்டு
வாருமையா திருணைக்கு
வாசமுள்ள பூ முடிக்க
சேகரித்தவர். S.S. போத்தையா
இடம்: விளாத்திகுளம், நெல்லை மாவட்டம்
-----------