கணவன் பெருமை

நாட்டுப் பாடல்களில் கணவனது பெருமையைப் பாடும் பாடல்கள் பல இருக்கின்றன. கணவன் செய்யும் தொழிலின் பெருமை, அவனது குணநலன்கள், உருவச் சிறப்பு, அறிவுக் கூர்மை, வாக்குவன்மை, தயாள குணம் முதலியவற்றைப் புகழ்ந்து மனைவி பாடுவாள். தன்னைக் கணவன் பாராட்டும் முறைகளையும், பெருமையாகக் குறிப்பிடுவாள்.
சாப்பிட்டுக் கைகழுவி
சகுனம் பார்த்து நடை நடந்து
நினைச்சா எடுப்பாக
நெருஞ்சிப்பூ அச்சடியை
சாத்தூரு போவாக
சவுளிக் கடை பாப்பாக
நினைச்சா எடுப்பாக
நெருஞ்சிப்பூ அச்சடியை
சட்டை மேலே சட்டை போட்டு
சரிகை குட்டை மேல போட்டு
போராக எங்க மச்சான்
பொழுதடைஞ்ச நேரத்துல
கோர்ட்டாரு முன்பாக
குரிச்சி போட்டுத் துரைகளோட
வாதாடி வழக்குத் தீர்க்கும்
வஞ்சிக் கொடி என் சாமி
இருக்கக் குரிச்சி உண்டு
எந்திரிக்கச் சோடு உண்டு
நடக்கக் குடையு முண்டு
நான் வணங்கும் சாமிக்கு
எல்லோரும் பல் விளக்க
ஆலங்குச்சி அத்திக்குச்சி
அவரும் நானும் பல் விளக்க
ரங்கத்துத் தங்கக் குச்சி
வட்டார வழக்கு: அச்சடி –அச்சுப் போட்ட சேலை; எடுப்பாக, போவாக-எடுப்பார்கள், போவார்கள் (சிறப்பு பன்மை); குரிச்சி-நாற்காலி (அராபியச் சொல்); சோடு-செருப்பு; ரங்கம்-ரங்கூன்.
சேகரித்தவர்: இடம்
S.S. போத்தையா: நெல்லை மாவட்டம்.
-------------